Sunday, February 11, 2018

மரணதேவதை

Image result for goddess of death eternity modern art

மரணம் சுடலைத்தீயின் வடிவத்தில்
சகலத்தையும் எரித்துப் பொசுக்கி தன்னை தன் இருத்தலை
 நிலைநிறுத்திக் கொண்டே இருக்கிறது.
மரணம் எப்போதுமே அழகானது.
அதுவே பிறவியின் நிரந்தரமானது.
சொத்து சுகம் உறவுகள் ஆள்பலம் அடியாட்கள்
அரசியல் பலம், பதவி அந்தஸ்த்து கார் பங்களா
எல்லாம் சேர்ந்து நின்றாலும் அந்நேரம் வரும்போது
மரணமே மனிதனை ஆட்கொள்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் மரண ஊர்வலம்
 என்னைச் சுற்றி.
மரணதேவதை ஒவ்வொரு அசைவிலும் ஒரு காவியத்தைப் போல
துன்பகேணியில் தத்துவ நீரைப் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறாள்.
என் கணவரின் அண்ணியார் திருமதி சுதா சங்கரலிங்கம்,
என் உடன்பிறந்த சகோதரி , அக்கா சுசிலாவின் கணவர் மதன்,
இரண்டும் அடுத்தடுத்த நாட்கள்.. 
இதனால் ஏற்பட்ட பயண அலைச்சல் மன உளைச்சல்
 தீர்வதற்குள் நேற்று முன் தினம் இனிய நண்பர் கவிஞர்
பாரதிமணி என்ற கிங்க்பெல் அவர்களின் திடீர்மரணம்..
 நுகர்ப்பொருள் கலாச்சாரம் எப்படி எல்லாம்
மனித உணர்வுகளையும் உறவுகளையும் சிதைத்திருக்கிறது 
என்பதை மரணமும் உணர்த்துவது மரண அவஸ்தை.
1.
கணவரின் அண்ணியார் சுதா ஓர் அன்னலட்சுமி.
தனக்கு தன் பிள்ளைகளுக்கு மட்டுமே கவனமாக
 சொத்து சேர்க்கும் தலைமுறையின் சமார்த்தியங்களை அறியாதவர்.
எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்,
எல்லோர் நலனிலும் மகிழ்ச்சியிலும் தன் வாழ்க்கையை
 அனுபவித்தவர். தான் இன்னாருக்கு இந்த நல்ல காரியத்தை 
செய்கிறோம் என்பதை அறிந்து செய்தவரல்ல. 
அவரைப் பொறுத்தவரை சுற்றமும் நட்பும் 
அருகிலிருக்கும் மனிதர்களும் ... இப்படியாக ..
எல்லோருக்கும் அவரவர் வாழ்வில் ஓடிப்போய் நிற்க முடிந்தது.
உதவி செய்வதற்கு பணம் மட்டும் தேவை
 என்று நினைத்திருக்கிறோம்.
இல்லை .. சுதா மாமியைப் போல ஒரு வாழ்க்கையை
 வாழ்ந்தவர்களுக்கு அது பொருட்டல்ல.
ஆலமரம் உறவுகளுக்கு மட்டும் நிழல் கொடுப்பதில்லை.
வழிப்போக்கனுக்கு அதுவே நிழல். அவள் ஓர் ஆலமரம்.
விழுதுகளுக்கும் அதுவே பலம். காதலைக் கொண்டாடிய பெண்.
அசாதாரணமான செயல்களைச் செய்து
 பலர் வாழ்க்கையில் விளக்கேற்றிய 
சாதாரணமான பெண்மணி. 
என்னைப் பிரமிக்க வைத்த இன்னொரு புத்தகம்.
இன்னொருவர் என் அக்காவின் கணவர் மதன்.
வங்கி அதிகாரி, பணி நிமித்தம் இந்தியா எங்கும் பயணித்தவர். 
அக்கிராமத்தில் அவர் தான் முதல் பட்டதாரி.
 தன் இருத்தலுக்கான போராட்டத்தில் இறுதியாக 
அவர்நேசித்தது தன் சொந்தக்கிராமமும் கிராமத்து மனிதர்களும்
தன் கிராமத்தின் ஆலமரமும் கண்மாய் கரையும்.
கிராமம் தன்னைத் தொலைத்துவிட்டது ,
கிராமத்தின் விளை நிலங்கள் விற்பனைக்கான
 பட்டாவாக பணமதிப்பீட்டிற்கு மாறியதை ஏற்றுக்கொள்ள முடியாத
அவஸ்தையில் .. .. அந்த ஏமாற்றத்தில் ..
.. மருத்துவர்கள் கார்டியக் அரஸ்ட் என்று சொல்கிறார்கள்.
மண்ணையும் மனிதர்களையும் இழந்து விட்டதை
ஏற்றுக்கொள்ள முடியாமல் போன 
ஒரு தலைமுறையின் எச்சம் அவர்.
நேற்று முன் தினம் என் நண்பர் பாரதிமணி...
 தன் இறுதிநாட்கள் வரை உழைப்பே தெய்வமென 
வாழ்ந்தவர். மும்பையில் நவீனகவிதை வரிசையில் 
அவர் மட்டுமே எப்போதும் தனித்துவமானவர். 
உப்பு புளி கவலையும் இன்றைய இருத்தலுக்கான
 தேவையும் ஓட்டமும் அவர் கவிதைகளைத் 
தின்றுவிட்டது. வீடு வாசல் பிள்ளைகளின் எதிர்காலம்
 என்று ஒவ்வொரு சராசரி மனிதனின் இருத்தல் போராட்டத்தில்
அவர் இளைப்பாற நேரமில்லை. கவிதைகளைப் பற்றி
பேசுவதற்கும் எழுதுவதற்கும் துடித்த அந்த உள்ளம்..
எளிமையும் கடின உழைப்பும்.. அவர் புன்னகையும்
அன்பும் பெண்களை மதிக்கும் பேராண்மையும்..
எழுதாத கவிதையாகிப்போனது ஒரு கவியுள்ளம்.

மரணம் மனித வாழ்க்கையில் புதிதல்ல.
மரணம் ஊரைக் கூட்டும்
மரணம் உறவுகளைப் பலப்படுத்தும்.
மரணம் மனிதர்களின் "தான்" என்ற
அகங்காரத்தை அசைத்துக் காட்டி
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
மரணதேவதையின் இத்தத்துவங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து கொண்டிருக்கின்றன.
மரணம் என்னைப் பயமுறுத்தவில்லை
மனிதர்கள் என்னைப் பயமுறுத்துகிறார்கள்.
சுடலையாண்டவனை எரித்த தீயில்
நஞ்சுண்ட சக்தி .. பத்ரகாளியாய்..
சக்தியே சிவனாய்..
ஆதிபராசக்தியே அவனாய்...
ஆடைகளைக் களைந்துவிட்டு
சூல்கொண்ட கண்மாயில் அவள்.தரிசனம்..

2 comments:

  1. மரணம் எல்லோருக்கும் பொது.என்தாய் எனக்கு இறக்கும் முன் சிரித்துக்கொண்டே போதித்த ஒன்று.ஆகவே தோழியே மரணம் மகிழ்ச்சியுடன் எனக்கு மரத்துப் போனது.ஸ்ரீநாத்

    ReplyDelete
  2. மரணம் தவிர்க்க இயலாதது. மரண பயம் தவிர்க்க வேண்டியது.

    ReplyDelete