Monday, December 25, 2017

மதச்சார்பற்றவனுக்கு அப்பன் பேர் கிடையாது..

secularism and bjp க்கான பட முடிவு


நீங்க உங்க சாதியைச் சொல்லுங்க
உங்க ப்ளட் குரூப்பைக் கண்டுபிடிச்சிடலாம்
அதோட உங்க மதத்தையும் சொன்னா
உங்க குரூப் பாசிட்டிவ்வா நெகட்டிவா னு
உடனே சொல்லிடலாம்..
..... கண்டுபிடிச்ச விஞ்ஞானி இன்னும் நிறைய சொல்றாரு..
மதச்சார்பற்றவர்களுக்கு அப்பன் பெயர் தெரியாது.
அதைவிட  பெரிய கண்டுபிடிப்பு அவனைப் பெத்துப்போட்ட ஆத்தா 
யாருனு தெரியாது. அப்புறம்...
 இசுலாமியர்கள் தான் ஒரு இசுலாமியர் என்றொ 
கிறிஸ்தவர் தான் ஒரு கிறிஸ்தவர் என்றோ 
லிங்காயத் தன்னை  லிங்காயத் என்றொ 
ஒரு பிராமணர் தன்னை ஒரு பிராமணர் என்றொ
பெருமையாக சொல்லிக்கனும். அப்போ தான்  அவர்களின் 
ரத்தம்  என்ன என்பது உடனே தெரியும் ... 
(அடப்பாவி.. 
பிராமணர் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்
 என்பதன் மூலம் அவனவன் அவனவன் சாதிப்பெயரைச்
 சொல்லிக்கொள்ள வேண்டும்
என்று நேரடியாக சொல்லேன்டா..! 
அதுக்கு எதுக்கு BLOOD TEST கண்டுபிடிக்கிறே.. )

இப்படி திருவாய் மலர்ந்திருக்கும் மத்திய மந்திரி 
அனந்தகுமார் ஹெக்டே
மதச்சார்ப்பற்ற என்ற இந்திய அரசியலமைப்பை
 திருத்துவதற்காகவே நாங்கள் ஆட்சி அதிகாரத்தில்
 இருக்கிறோம்" என்று வெளிப்படையாகவே
சொல்லி தன்னுடைய BLOOD GROUP ஐ நாற்றமடிக்க 
வைத்திருக்கிறது.

இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த ஆண்டு
 ராஷ்டிரபதி பவனில் கிறிஸ்துமஸ் பண்டிகையை
 ஒட்டி நடைபெறும்  பக்திப்பாடல் நிகழ்ச்சியை  
(CHRISTMAS CAROLS) தடை செய்திருக்கிறது. 
ஒவ்வொரு ஆண்டும் இதுவரை தொடர்ந்து நடைபெற்ற
கிறிஸ்துமஸ் நிகழ்வை தடை செய்ததற்கு 
ராஷ்டிரபதி பவன் சொன்ன காரணம்
"மதச்சார்பின்மை" . 
ஆனால் தீபாவளிக்கு ராஷ்டிரபதி பவன் 
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுவதையும்
 விழாக்கோலம் கொண்டு விருந்துகள் நடைபெறுவதையும்
எந்த மதச்சார்பின்மையும் தடை செய்யவில்லை! 

போங்கடா நீங்களும் உங்க விளக்கெண்ணெய் விளக்கமும்.

Friday, December 22, 2017

அயோத்திதாசரின் தலைகீழாக்க அரசியல்

அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம் 


தோழர் பிரேம் அவர்களின் கட்டுரை தொகுப்பு
அண்மையில் வாசித்த புத்தகங்களில் முக்கியமானது.
இப்புத்தகத்தில் பிரேம் அவர்கள்
அயோத்திதாசரின் தலைகீழாக்க அரசியலை சமூக பண்பாட்டு 
தளத்திலும் தமிழ்ச்சாதி உளவியல் தளத்திலும்
 அடையாளம் காட்டுகிறார்.
கலை இலக்கிய தளத்தில் போற்றப்படும் புனிதங்களையும்
 தூய்மைகளையும் கட்டுடைத்து
மாற்று அரசியலுக்கான பாதையை,
ஒடுக்கப்பட்ட மக்களும் ஒடுக்கும் மக்களும் இணையும் புள்ளியாக
 நிகழ வேண்டிய அறப்போராட்டங்களை அயோத்திதாசரின்
எழுத்துகளின் ஊடாக கண்டடைகிறார்.
அயோத்திதாசரின் பெளத்தம் இந்திய அரசியலில்
அம்பேத்கரின் மதமாற்ற அரசியலுக்கு இழுத்துச் சென்ற 
விடுதலைக்கு முந்திய அரசியல் காரணிகளையும் 
தொட்டுச் செல்கிறார்.
வாசிப்பில் சில துளிகள்
*அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம் சாதி 
பேதமற்ற தமிழர்களை உருவாக்குவதற்கான திட்ட வரைவு. 
மோதல்கள், வன்முறைகள், வன்கொலைகள், வஞ்சம் தீர்க்கும் 
அணிதிரட்டல்கள் இன்றி தமிழர்களை நவீனப்படுத்தும்
 பெரும் திட்டம் இது. இது பின்னாளில் வளராமல் தேய்ந்து
தேங்கியது பெரும் இழப்பு தான். 
அதன் பயனே இன்றுள்ள சாதி காக்கும் தமிழர் அரசியல் பெருக்கம்.
இதற்கான பெரும் காரணமாக அமைந்தது பெரியார் இயக்க
 பகுத்தறிவு மரபு. இது நம் காலத்தின் தேவை என்றாலும் 
சமயம் அற்ற நிலைக்கு முன் நேர வேண்டிய பகுத்தறிவுடன்
 கூடிய சமய நெறி நிகழாமல் தடை பட்டது. 
அயோத்திதாசர் மிகவும் விழைந்த அந்த தன்ம அரசியல்,
 அறப்போராட்டம் விரிவடைந்து இருக்குமெனில்
தமிழ் அரசியல் இன்று பலவகைகளில்
 வேறுபட்டதாக இருந்திருக்கும். (பக் 18)

** அயோத்திதாசர், அம்பேத்கர் இருவரும் சமயம், மதம் அற்ற
 அறிவார்ந்த சமூகம் சாத்தியம் உண்டு என்றும் அது உருவாக 
வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு தம்மத்தை இடைக்கால
 இணைப்பு நிலையாகவே முன்வைத்துள்ளனர். (பக் 139)

*** மதம் வெறும் நம்பிக்கையும் வழிபாடும் மட்டுமா, 
வழக்காறுகளும் நடத்தையியலும்
செறிந்த சிக்கலான கூட்டு மனநிலை. (பக் 140)

****பெரியாரிய மத மறுப்புச் சிந்தனைகளை 
ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே
 அதிகக் கோயில்களைக் கொண்ட மண்  என்ற பெருமையை
தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம்
 தக்க வைத்துக் கொள்ளும் சமூகம் இது. (பக் 147)

------ இக்கட்டுரை தொகுப்பு நூல்.
நூல் வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை 77.

Wednesday, December 20, 2017

சனிப்பெயர்ச்சியும் ஆர் கே நகர் இடைத்தேர்தலும்

சனிபகவானும் தேர்தலும் க்கான பட முடிவு
சனிப்பெயர்ச்சிக்குப் பின் நடைபெறும் இந்த இடைத்தேர்தல்
சூரிய குடும்பத்தையும் சந்திர வட்டத்தையும்
 நேரடியாகப் பாதிக்கப் போகும் இடைத்தேர்தல் என்பதால்
 புவியீர்ப்பு விசைக்கு மேலான ஈர்ப்புநிலையை
எட்டி இருக்கிறது.
இதன் சாதக பாதக பலன்களை  கணித்து அருளி இருக்கிறோம்.
மேஷம் : ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் நாள்
ரிஷபம்: யோகங்கள் வந்து சேரும் நாள்
மிதுனம்: காரிய வெற்றிக்குகடவுளை வழிபட வேண்டியநாள்
கடகம்: நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள்
சிம்மம்: எதிரிகள் உதிரியாகும் நாள்
கன்னி: நினைத்தை முடித்து நிம்மதி காணவேண்டிய நாள்
துலாம்: தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள்
விருச்சிகம்: பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள்
தனுசு: இன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள்
மகரம்: வழிபாட்டால் வளர்ச்சி காண வேன்டிய நாள்
கும்பம்: விரயங்கள் குறைய விழிப்புணர்வுடன் செயல்பட வேன்டிய நாள்
மீனம்: வரவு திருப்தி தரும் நாள்

உங்கள் வேட்பாளர்களின் சுயஜாதகத்தை அறிந்து
அதற்கேற்ப உங்கள் இஷ்ட தேவதையை
வணங்குங்கள். மேலும் தமிழ்நாட்டில் அனைவருமே
சனிபகவானுக்கு சிறப்பு பூஜை செய்வது
உத்தமம், முடியாதவர்கள் அருகிலிருக்கும் ஆஞ்சநேயருக்கு
ஆயிரம் வடைகளால் மாலை அணிவித்து
சிறப்பு பூஜை செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.

சனிபகவான் காயத்ரி ஸ்தோத்திரம்
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

(ஏதோ என் பங்குக்கு.. இடைத்தேர்தல் குறித்த கணிப்பை வெளியிட்டுவிட்டேன்.
இதைவிடவா பெரிய கருத்து கணிப்பு செய்துவிட முடியும்?)

Monday, December 18, 2017

ராகுல்காந்தியின் ஓம்நமசிவாய

rahul in hindu shiva devotee க்கான பட முடிவு
பிஜேபி க்கு மகத்தான வெற்றி தான்.
ராகுல்காந்தியை சிவபக்தனாக அடையாளம் காட்ட வைத்து ...
கோவில் கோவிலாக போக வைத்து..
பிஜேபிக்கு இது மகத்தான வெற்றிதான்.
தொடர்ந்து ஆறாவது முறையும் பிஜேபி குஜராத் மாநிலத்தில் 
ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது, இது குறித்த பல்வேறு 
ஆய்வுகள் புள்ளிவிவரங்கள் பேசப்படுகின்றன. 
ஒவ்வொரு தொகுதியிலும் பிஜேபி சுறுசுறுப்பாக
 சுழலவிட்ட paid BJP volunteers 1000 இளைஞர்கள்
 தேர்தல் களத்தைச்சூடாக்கினார்கள்.
காங்கிரசுக்கும் இத்தேர்தல் வெற்றிதான் என்று சொல்வதும் 
பிஜேபியின் அமோக வெற்றி என்று சொல்வதும்
 ஒன்றுக்கொன்று மாறான கருத்துகள் என்றாலும்
 இரண்டிலும் உண்மை இருக்கிறது !
இந்த உண்மையை இரு கட்சிகளும் அக்கட்சிகளின் 
தலைமைகளும் நன்கு அறிந்தே இருக்கிறார்கள். 
பிஜேபிக்கு இந்த வெற்றி ஓர் அச்சத்தை
தரும் வெற்றியாகவே அமைந்திருக்கிறது.
 இந்த அச்சம்தான் தற்போது 
காங்கிரசுக்கு கிடைத்திருக்கும் வெற்றி. 
ஆனால் இந்த அச்சத்தைக்
கொடுப்பதற்கு காங்கிரசு கொடுத்த விலை என்ன?

அதுதான் இந்திய தேசத்திற்கு ஆபத்தான ஓர் அரசியலை 
விதைத்திருக்கிறது.
சிறுபான்மையினர் சார்ந்த உரிமைகள் பிரச்சனைகளில்பி
ஜேபி காங்கிரசு இரு கட்சிகளின் நிலைப்பாட்டில் 
மிகப்பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை
என்றாலும் ஒப்பீட்டளவில் காங்கிரசு சிறுபான்மையினருக்கு 
ஆதரவான கட்சி, சிறுபான்மையினரின் உரிமைகளைப் 
பாதுகாக்கும் கட்சி, இன்னும் சொல்லப்போனால்
மதச்சார்பின்மையை தன் அடிப்படைக் கொள்கையாகக்
 கொண்ட கட்சி, (செக்குலரிசம்) என்ற அபிப்பிராயங்கள்
 இருக்கின்றன. மதச்சார்பின்மை என்ற கொள்கையை 
எக்காலத்திலும் பிஜேபி தன் கையில் எடுத்துக்கொள்ளமுடியாது.
பல்வேறு இன மொழி சமயங்கள் வாழும் இந்திய மண்ணில்
 மதச்சார்பின்மை என்பது இந்திய இறையாண்மைக்கு
 வலுசேர்க்கும் ஜீவன். அந்த உயிர்நிலையை இழக்க வைத்ததில்
பிஜேபி இன்று மிகப்பெரிய வெற்றியை ஈட்டி இருக்கிறது. 
காங்கிரசு தலைவர் ராகுல்காந்தியை
சிவபக்தர் என்று சொல்ல வைத்ததும் 
பல்வேறு கோவில்களுக்குள் போக வைத்ததும்
மிகச்சாதாரணமான விஷயமல்ல. 
இந்தியா என்றால் இந்துக்கள், இந்தியா இந்துக்களின் தேசம்,
இந்துக்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் 
அரசியல் நடத்துவது இனி சாத்தியமில்லை என்ற அச்சத்தைக் 
கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி புகுத்திவிட்டது.
இதில் பிஜேபி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
 பிஜேபியின் இந்துமக்களின் பாதுகாவலன் என்ற 
பிரச்சாரத்தை முறியடிக்க ராகுல்காந்திக்கும் சிவபக்தன் என்ற
அடையாளம் தேவைப்பட்டிருக்கிறது! இந்த நிலையை
 உருவாக்கி இருப்பது பிஜேபிக்கு
கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
கேரளாவுக்கு வந்திருந்தப்போது அன்றைய
 பாரதப்பிரதமராக இருந்த பண்டிதர் ஜவஹர்லால் நேருவை
 மேல்சட்டையைக் கழட்டிவிட்டு
கோவிலுக்கு வருமாறு கோவில் சட்டதிட்டங்கள்
 சொன்ன போது அதை மறுத்து அக்கோவிலுக்குள்
 நுழையாமல் சென்றவர் நேரு.
அதே நேருவின் பேரனுக்கு குஜராத்தில் கோவில் கோவிலாக
 போகவைத்திருக்கிறது குஜராத் தேர்தல் களம்.
2014ல் காங்கிரசு தோல்வி அடைந்தவுடன் அதற்கான
 காரணங்களை ஆய்வு செய்து தன் அறிக்கையை 
ஆகஸ்டு 14, 2014 ல் சோனியாகாந்தியிடம்
கொடுத்தார் ஏ கே அந்தோணி. அந்த அறிக்கையில்
Antony panel “blaming Congress’ minority appeasement”
as a reason for the party defeat!.

இந்த வரிகள் இப்போது நினைவுக்கு வருகிறது.
இத்தேர்தல் களம் உருவாக்கி இருக்கும் இச்சூழல் 
இந்தியர்களின் எதிர்காலத்திற்கு நல்லதா ,
 எம்மாதிரியான விளைவுகள் ஏற்படும் 
என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஓம் நமசிவாய..

Friday, December 15, 2017

வங்கி லாக்கரும் பாதுகாப்பும்

வங்கி லாக்கரும் பாதுகாப்பும்


வங்கி லாக்கரில் கொண்டு வைத்துவிட்டால் ரொம்பவும்
 பாதுகாப்பாக இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
 வங்கி நமக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் நினைக்கிறோம்.
 ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
கீழ் அறியப்பட்ட உண்மைகளின் படி
> லாக்கரில் வைக்கும் எந்தப் பொருளும் திருடு போனாலோ இயற்கை பேரழிவு  ஏற்பட்டாலோ அதற்கு வங்கி பொறுப்பல்ல.
>வங்கிக்கும் லாக்கர் வாடிக்கையாளருக்கும் உள்ள உறவு
வீட்டு உரிமையாளருக்கும் வாடகைக்கு குடியிருப்பவருக்குமான
உறவு முறையில் செயல்படுகிறது.

அண்மையில்( 15/11/17) மும்பையில் ஓர் அதிர்ச்சியான வங்கிக் கொள்ளை.
 ஹாலிவுட் படத்தில் வருவது போல ஒரு வங்கித் திருடு .
நவிமும்பையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா,
 சன்படா கிளையில் பக்கத்து கடையிலிருந்து சுரங்கம் போட்டு
லாக்கர் அறைக்கு வந்து சற்றொப்ப 30 லாக்கர்களை உடைத்து
 அதிலிருக்கும் விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு
சென்றுவிட்டான் திருடன். !!
  வழக்கம்போல லாக்கர் அறையில் சிசிடிவி கேமிரா
வேலை செய்யலையாம்!
எனவே லாக்கரில் எதாவது வைத்திருக்கிறீர்களா..
பத்திரமான இடத்தில் வைத்திருக்கிறோம்
என்றி நிம்மதியாக இருந்துவிடாதீர்கள்.
அடிக்கடி லாக்கர் வைத்திருக்கும் வங்கிக்குப் போவதுடன்
அக்கம் பக்கத்தில் எவனாவது  மண்ணைத் தோண்டிக்
கொண்டிருக்கிறானா, பக்கத்திலிருக்கும்
கடைகளில் எதாவது ரிப்பேரிங் வேலைகள் நடக்கிறதா
 என்று கவனமாகப் பார்த்துவிட்டு வாருங்கள்...
ஏன்னா.. உங்க லாக்கருக்கு நீங்க தான்யா பொறுப்பு.
 பேங்கு பொறுப்பில்ல..
அவுங்க பாட்டுக்கு எனக்குத் தெரியாதுனு கையை விரிச்சிட்டு போயிடுவாங்க..
ரொம்ப பயமுறுத்துவதாக நினைக்காதீங்க ..
உண்மையிலேயே நவிமும்பையில்
இருக்கும் என் தோழி இதை எல்லாம் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்....


Thursday, December 14, 2017

MAY I HELP YOU, Press key 1

தொடர்புடைய படம்

ஆதார் கார்டை அக்கவுண்டுடன் இணைக்க நேரில் போயிருந்தேன்.
இன்டெர்நெட் பேங்கிங் டிவைஸ் பேட்டரி தீர்ந்துவிட்டதாக சொன்னது.
புதிதாக டிவைஸ் கவுண்டரில் எளிதாக உடனே கிடைத்தது.
வாங்கிக்கொண்டு வந்தாகிவிட்டது.
அக்கவுண்டில் டிவைஸ் லிங்க் ஆவதற்கு போன் பேங்கிங் தான் வழி
என்று சிரித்துக் கொண்டே எனக்குத் தெரிந்த அப்பெண் சொன்னாள்.
கவுண்டரில் இருந்தவள்  என் மீது பாவப்பட்டு அனுதாபத்துடன் சிரித்தாள்
என்பது இப்போது தான் புரிகிறது.
இரு நாட்களாக போன் பேங்கிங்குடன் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.
ஆங்கிலத்தில் வேண்டுமா எண் 1 ஐ அமுக்கவும்
இந்திக்கு எண் 2
மராத்திக்கு எண் 3
கஸ்டமர் சர்வீஸ் ஆபரேட்டருக்கு எண் 0
ஒருவழியாக 0 வை அமுக்கி காத்திருந்து கொண்டே
தானே ஓடிக்கொண்டிருக்கும் டேப் வாய்ஸ் கேட்டு கேட்டு
சாம்பார் வைத்துமுடித்தேன்.. டேப் ஓடிக்கொண்டிருந்தது.
சாம்பார் முடியவும் "தேங்க் யூ ஃபார் ஹோல்டிங் தி லைன்" என்ற
பெண்குரல்.
சின்னதாக ஒரு பெருமூச்சுடன் அக்கவுண்ட் எண், விலாசம். பெயர்
PAN எண் எல்லாம் கொடுத்து முடித்தவுடன் அவள் என் போன் பேங்கிங்
எண் கேட்கிறாள்... இருந்தது இப்போது அந்த எண் இல்லை, இல்லை மறந்துவிட்டது
என்று சொல்லவும் அவள் வேறு ஒரு சர்வீஸ்க்கு என் தொலைபேசி தொடர்பை
மாற்றினாள். அங்கே மீண்டும் முதலில் இருந்து அதே கேள்வி பதில்...
இப்போது என் போன்பேங்கிங் எண் புதிதாக உருவாக்க வேண்டுமாம்.
இல்லை என்றால் என்னால் இண்டெர்நெட் பேங்கிங் நுழையவே முடியாது.
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.
your call will be transfer to the phone banking pin service ..என்றாள்.
மீண்டும் டேப் ஓடியது.
காதுக்குள் இரைச்சல் கேட்க ஆரம்பித்தது.
இன்னொரு குரல்.. "may I help you"
மீண்டும் அதே கேள்வி அதே பதில்கள்...
என் அக்கவுண்டை அவர்கள் அவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருக்கிறார்களாம்..
எப்படியோ ஒருவழியாக அவள் புதிதாக போன் பேங்கிங் எண் வாங்க
என் கிரிடிட் அல்லது டெபிட் கார்ட் எண்ணை போன் கீ மூலமாக
போடச் சொன்னாள். ப்ளீஸ்.. ப்ளீஸ்... வெயிட் வெயிட்...
ஓடிப் போய் என் பீரோவைத் திறந்து அதிலிருக்கும் பெட்டிக்குள்
அடைத்து வைத்திருந்த கார்டை எடுத்து அதில் என் பேங்க் கார்டைத் தேடி
அந்த 12 இலக்க எண்ணைக் KEY IN  செய்தவுடன் டேப் ஒடியது.
press the hash key after the peep ...
ரொம்ப டென்ஷனாகிவிட்டேன்.. திடீரென hash key எதுவென சந்தேகம் வந்தது.
இதாகத்தான் இருக்கும் என்று துணிந்து hash key அமுக்கி காத்திருந்தேன்.
இப்போது உங்கள் புதிய போன் பேங்கிங் எண்ணைக் கொடுக்கச் சொல்லியது டேப்.
பட்டென்று நினைவில் நிற்கும் ஒரு எண்ணைக் கொடுத்துவிட்டேன்.
சிறிது நேரத்திற்குப் பின் ... மேடம் உங்கள் அக்கவுண்ட் அட்வான்ஸ் அக்கவுன்ட்..
இது பெர்சனல் அக்கவுண்டுக்கு மட்டும்.
iAM FORWARDING YOUR CALL TO ADVANCE BANKING SERVICE ,
PLEASE HOLD THE LINE ..
போனை இடது பக்கமிருந்து வலது பக்கம் மாற்றிக் கொண்டேன்.
மீண்டும் அதே கேள்வி அதே பதில்கள்...
இப்படியாக ....
எனக்கு இன்னும் புதிதாக டிவைஸ் வாங்கியும்..
இன்டெர்நெட் பேங்க்  அக்கவுண்ட் ..
தாங்க முடியலடா சாமீ..
இதே வங்கியில் தான் நான் 22 ஆண்டுகள் வேலைப் பார்த்திருக்கிறேன்.
மாடு மாதிரி...
குட்மார்னிங் காந்திஜி..
ஹொவ் ஆர் யு
மேடம் அக்கவுண்ட் ஓடியில் போயிடுச்சா..
யெஸ்.. ஆனால் உங்க அக்கவுண்டில் இன்று செக் கிரிடிட் ஆயிருக்கு.
ந்நோ ப்ராப்ளம்.. எதற்கும் மேனேஜரைப் பார்த்துவிட்டுப் போங்கள்..
ஹலோ சக்சேனா..
ஹவ் ஆர் யு..
ஹெய் மேடம்.. தேங்க் யு ,  எனக்கு இன்ட்ரஷ்ட் சர்டிபிகேட் வேணும்..
ந்நோ ப்ராப்ளம் சார். வில் யு ப்ளீஸ் இந்த பார்மை பூர்த்தி செய்து தருவீர்களா..
நாளை வந்து வாங்கிக்கொண்டு போங்கள்.
தேங்க் யு..
யு ஆர் வெல்கம் சார்..
மேடம்.. செக் க்ளியர் ஆகணும்.. ஸ்பெஷல் ரிமார்க் வருது..
ஒவர் ரைட் பண்ணட்டுமா..
இண்டர்காமில் கேஷியர் கேட்கிறார்.
கஸ்டமர் யார்..?
ஓ இன்னாரா.. பிரச்சனை இல்லை.
ஓவர் ரைட் பண்ணியாச்சு...
என்ன காரணம் என்று எனக்குத் தெரியும்..
லாக்கர் ஆபரேட் செய்ய அவர் காத்திருக்கிரார் மேடம்...
ஏன் பாபுஜி எங்கே..
பாபுஜிக்கு இது லஞ்ச் டைம் மேடம்.
ஒகே ந்நோ ப்ராப்ளம்
எழுந்துப்போய் வங்கியின் மாஸ்டர் கீ போட்டு லாக்கரைத் திறந்துவிட்டு'
வெளியில் வரும்போது... மேசையில் போன் .. அடித்துக் கொண்டே இருக்கிறது.
ஹெய்.. யெஸ் சார். நிச்சயம்.. இன்று 3 மணிக்குள்
நீங்கள் கேட்ட தகவலை அனுப்பி விடுகிறோம்..
இப்படி ஏன் மாடு மாதிரி எல்லா கவுண்டரிலும் வேலை பார்த்தோம்னு
நினைத்துக் கொள்கிறேன்.
ஆனால் இம்மாதிரி எல்லாம் எங்களால் தான் வேலைப் பார்க்க முடியும்
முடிந்திருக்கிறது என்ற பெருமிதம் ஏற்படுகிறது..
இனி.. இன்னொரு அட்டெம்ப்ட்..
போன் பேங்கிங் ...
press one, press hash key.. press your credit card number/
press your pin number/press ..
thank you for holding the line .. may I help you...


Monday, December 11, 2017

FINANCIAL RESOLUTION AND DEPOSIT INSURANCE BILL 2017

Image may contain: text
நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு மசோதா
FINANCIAL RESOLUTION & DEPOSIT INSURANCE BILLS 2017
யாருக்காக இந்த மசோதா,,?
மாண்புமிகு கனவான் ஜெட்லி அவர்களுக்கு...
நீங்கள் எங்கள் வங்கி சேமிப்புக்கு பாதகம் வராது 
என்று உறுதியளிக்கிறீர்கள். நாங்களும் நம்பத் தயாராக இருக்கிறோம்.
இப்போ.. சின்னதா ஒரே ஒரு டவுட்..ப்ளீஸ் ஜெட்லி..
இப்போ இந்த மசோதாவுக்கான அவசியம் என்ன?
நீங்க உங்க கட்சிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் 
கார்ப்பரேட்களுக்கு கடனாக எங்கள் பணத்தை அள்ளிக் 
கொடுப்பீர்கள். அப்புறம் பேங்க் திவாலாவாகப்
போகிறது என்று பயமுறுத்துவீர்கள், 
அதற்காகத்தான் UK, USA நாடுகளைப் போல
இந்தியாவிலும் சட்டம் கொண்டுவரப் போவதாக சொல்லுவீர்கள்.

ஏன்யா.. மல்லையாவை இந்திய நீதிமன்றத்தில்
 கொண்டு நிறுத்தமுடியாத நீங்கள்.. 
யாருக்காக இந்த மசோதாவைக் கொண்டு வருகிறீர்கள்?
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிக் 
கொடுக்காத அத்தனைப் பேரின் பெயர், நிறுவனம், 
சொத்து மதிப்பை இன்றுவரை வெளியிட முடியாமல்
 எது உங்களைத் தடுத்து வைத்திருக்கிறது?
deposit holders do not have any superior claims 
என்று சொல்லும் உங்கள் மசோதாவின் வரிகளுக்கு 
என்ன அர்த்தம்? வங்கிகள் சேமிப்புதாரர்களின்
பணத்தைக் திருப்பி கொடுத்துதான் ஆகவேண்டும்
 என்று கட்டாயப்படுத்தமுடியாதுனு
சொன்னா அதை எப்படி எங்கள் சேமிப்புகளுக்கான
 உங்கள் பாதுகாப்பு திட்டம்னு ஏற்றுக்கொள்ளமுடியும்! 
இப்படி ஒரு மசோதா நிறைவேற்றி இச்சட்டத்தில்
 தலையிட உச்சநீதிமன்றத்திற்கோ
அல்லது ரிசர்வ் வங்கிக்கோ கூட அதிகாரமில்லை
 என்று நீங்கள் வரையறுக்கும் போது.....
ஜெட்லி.. 
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 
ஐந்தும் பத்துமாக வங்கியில் சேமித்திருக்கும் எங்களுக்கும் 
இந்திய திருநாட்டில்
ஓட்டு போடும் உரிமை இருக்கிறது
 என்பதை மறந்துவிடாதீர்கள்.!

Sunday, December 10, 2017

ONE MP ONE IDEA

ONE MP , ONE IDEA
Image result for திருச்சி சிவா
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர் தொகுதி வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ 5 கோடியிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களைச்
 செய்வதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. 
தொடர்ந்து பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்
 தோழர் திருச்சி சிவா அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கும் 
இச்செய்தி என் கவனத்திற்கு வந்தது. 
பெரும்பாலும் இதை யாரும் அக்கறையுடன் வாசிப்பதில்லை என்று அவரே ஒத்துக்கொண்ட பிறகு அது குறித்த என் விமர்சனத்தை விலக்கி வைத்துவிட்டு தோழரின் 
வாட்ஸ் அப் செய்தியை மட்டும் பகிர்ந்திருக்கிறேன்.
தோழருக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
இது குறித்த விவரங்கள் அறிய :
http://innovationcouncilarchive.nic.in/index.php…
இப்படியான நிதி ஒதுக்கீடுகள் இருக்கின்றன என்பதை 
அனைவருக்கும் அறியத்தருவதற்கும்
ஒவ்வொரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்
 இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்
என்ற கோரிக்கையை ! (உரிமையை) வைக்கவும்
 இப்பகிர்வு ஒரு தூண்டுதலாக இருக்கும்
என்ற நோக்கத்தில் ..
திருச்சி சிவா அனுப்பி இருக்கும் செய்தியிலிருந்து ...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி வளர்ச்சி
 நிதியினை எந்தெந்த வகையில், என்னென்ன காரியங்களுக்காக
 ஒதுக்கீடு செய்யலாம் என்று வழிகாட்டும் நெறிமுறைகள்
 அடங்கிய கையேடு ஒன்றினை மத்திய அரசின்
 “ திட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள் “ அமைச்சகம் உருவாக்கி தந்துள்ளது.
பெரும்பாலும் இதனை யாரும் அவ்வளவு அக்கறையோடு 
முழுவதுமாகப் படித்து பார்ப்பதில்லை . ஒருநாள் இதில் எழுந்த
 ஐயம் காரணமாக படித்தபொழுது ஒரு நல்ல திட்டம் என்னை கவர்ந்தது.
 “ One MP-One idea” என்பது அதன் பெயர். இந்த திட்டத்தின் கீழ் 
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஐந்து இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யலாம்.
நாட்டில் தீராத பிரச்சனையாக , தீர்க்கப்படவேண்டியதாக
 எல்லோரும் கருதுகின்ற ஒரு பிரசனைக்கு, 
உதாரணமாக் குறைந்து வரும் நிலத்தடி நீர், மணல் பிரச்னை, 
புவி வெப்பமடைதல், பெருகிவரும் மக்கள்தொகை, 
பிளாஸ்டிக் கழிவுகளின் பாதகங்கள் , சுருங்கி வரும் விவசாயம்
, நீர் நிலைகள் , போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறைக் கழிவுகள், 
சுற்றுச்சூழல் மாசு, எரிபொருள் மாற்று, கல்வி தரத்தில் மேம்பாடு,
 மாணவர்களின் மனநிலையில் மாற்றம் , வேலையில்லா திண்டாட்டம்
 எனும் இப்படிப்பட்ட பல்வேறு பின்னடைவுகளுக்கு காரணமானவைகளை களைவதற்கு, சீர்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான, ஏற்றுப்பின்பற்றத்தக்க, நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வினை ஏதாவது ஒரு பிரச்சனைக்கு 
தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் வாழ்கின்ற இளைஞர்கள், 
மாணவர்கள் என யார் வேண்டுமென்றாலும் திட்ட வடிவில் தந்திடலாம்.
பெற இருக்கின்ற இந்த யோசனைகளை வல்லுனர் குழு ஒன்று 
பரிசீலித்து பரிசுகளும், சான்றிதழும் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும்.
முதல் பரிசு: ரூபாய் இரண்டரை இலட்சம்
இரண்டாம் பரிசு: ஒன்றரை இலட்சம் ரூபாய்
மூன்றாம் பரிசு: ஒரு இலட்சம் ரூபாய்
இதற்கான நிதி என்னுடைய நாடாளுமன்ற தொகுதி 
வளர்ச்சி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.
 உங்கள் யோசனைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
திட்ட அலுவலர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
ஆட்சித் தலைவரகம், திருச்சி,
மின்னஞ்சல்: drdatry@nic.in
குறிப்பு: இது என் கண்டுபிடிப்பு அல்ல,, இருந்ததைக் கண்டறிந்து 
நான் தொடங்கி வைத்திருக்கிறேன். கொலம்பஸ் மாதிரி
. அவ்வளவே. எனக்குத் தேவை சமுதாயத்தை அச்சுறுத்தும்
 பிரச்சனைகளுக்குத் தீர்வு.காத்திருக்கிறோம்
 உங்கள் அரிய ஆலோசனைகளை எதிர்நோக்கி!
அனுப்புவதற்கு கடைசி நாள்: : 31-12-2017
அன்புடன் திருச்சி சிவா.

Friday, December 8, 2017

உறைபனி

Image result for depressed woman modern art

உறைபனியில் மரத்துப் போயிருக்கும்
உணர்வுகளை
முகத்தில் அறைந்து எழுப்பிக் கொண்டிருக்கிறது
நீ விட்டுச் சென்ற மவுனம்.
இலைகளை உதிர்த்துவிட்ட கிளைகள்
இளைப்பாறுகின்றன.
பாறைகளுக்குள் தன்னைத் தேடி
பயணித்துக் கொண்டிருக்கிறது
நீ அறியாத வேர்கள். 
விடியலுக்கு முந்திய உடல்கள் 
காமத்தைத் தின்று
பசியாற்றிக் கொள்கின்றன.
சாலையோரத்தில் செம்மொழி 
கிழிந்தப் போர்வைக்குள்
உறங்கிக்கொண்டிருக்கிறது.
சக்கரங்களின் பல்லிடுக்குகளில்
நினைவுகள் தற்கொலை செய்துகொள்கின்றன.
மெல்ல களைகிறது வேஷம்.

Saturday, December 2, 2017

ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா?



ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை
...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள்
 நான் வர விரும்பவில்லை.
அதெல்லாம் தமிழின தமிழ் மொழிக் காவலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
என்னைப் போன்ற ரொம்பவும் சாமனியமானவர்களுக்கு
சில ஐயப்பாடுகள் இருக்கின்றன.
1 ஏற்கனவே உலகில் பல்வேறு நாடுகளில்  சற்றொப்ப 15 பல்கலை
கழகங்களில் தமிழ் இருக்கை இருந்தது.  இன்று  3 பல்கலை
கழகங்களில் மட்டும் தான் தமிழ்த்துறை இருக்கிறது. மீதி 12 பல்கலை கழகங்களில் தமிழ்த்துறைகள் ஏன் மூடப்பட்டன?
அதிலும் குறிப்பாக ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்த்துறை மூடப்பட்டதைப் பற்றி எவருக்கும் ஏன் அக்கறையோ கவலையோ ஏற்படவில்லை.!!
 அப்படி ஹார்வர்ட் பல்கலை கழகத்திலும் மூடுவிழா நடக்காது
 என்பதற்கு என்ன உத்திரவாதம்  இருக்கிறது?
2) செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஒதுக்கிய நிதியில் 85 கோடி ரூபாயை பயன்படுத்தாமல் விட்டதால் அத்தொகை தமிழாய்வுக்கு வராமல் முடங்கிவிட்டது. இனி வரும் ஆண்டுகளிலும்
அத்தொகையைப் பெறுவதற்கான வழிகள் சட்டப்படி இருப்பதாக தெரியவில்லை.
மத்திய அரசு ஒதுக்கிய பணத்தில் 85 கோடியை இப்படி
 கைநழுவ விட்ட தமிழக அரசும் செம்மொழி நிறுவனமும்
 அப்பணத்தை முறையாக பெற்று தமிழ்க் கல்விக்காகவும்
தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் என்னவெல்லாம்
செய்திருக்க முடியும்! ஏன் செய்யவில்லை?
3) அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் திருக்குறள் பீடம்
 என்ற  தமிழ் இருக்கையை சிதம்பரம், மதுரை, சென்னை பல்கலை கழகங்களில் உருவாக்கினார். அண்ணாவின் மறைவுக்குப்
பின் சிதம்பரத்தில் திருக்குறள் பீடம் காணமல் போய்விட்டது.
 செம்மொழி ஆய்வு நிறுவனமோ
ஏற்கனவே உருவாக்கிய திருக்குறள் பீடத்தை புதுப்பிக்காமல்
 கவனிக்காமல் புதிதாக இன்னொரு
திருக்குறள் இருக்கையை ஒரு கோடி ரூபாய் திட்டத்தில் துவங்கினார்கள். திருக்குறள் இருக்கையை வைத்துக் கொண்டு கூட இவ்வளவு "அரசியல் " செய்த அவலத்தை நாம் எவருமே கேள்விக்குட்படுத்தவோ
விமர்சிக்கவோ இல்லை!
4) இந்தியாவில் தமிழகம் தவிர எத்தனை அயல்மாநிலங்களின் பல்கலை கழகங்களில் தமிழ்த்துறை இருக்கிறது? அப்படியே இருந்தாலும் அவற்றின் இன்றைய நிலை என்ன?
5) ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் இப்போதும் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை என்று மூன்று நிலைகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. என்று சொல்கிறார்களே,
ஹார்வார்ட் பல்கலை கழகத்தில் தமிழே இல்லை என்பது போல ஒரு தோற்றத்தை ஏன் உருவாக்கி இருக்கிறார்கள்? இதில் எது உண்மை?
6) தமிழ்நாட்டின் பல்கலை கழகங்களில் தமிழ்த்துறைக்கான இடம் என்ன? எத்தனை மாணவர்கள் அதில் படிக்கிறார்கள்? தமிழ்நாட்டின் பல்கலை கழக தமிழ் இருக்கைகளுக்கு அரசு ஒதுக்கி இருக்கும் நிதி எவ்வளவு? அதை எப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள்?
இதுவரை வெளிவந்த ஆக்கப்பூர்வமான புத்தகங்கள், செயல்பாடுகள் என்ன?

ஒரு மொழியை ஹார்வர்ட் பல்கலை கழகம் போன்ற பெருமைமிகு
பல்கலை கழகம் தானே விரும்பி அதற்கான் இருக்கையை உருவாக்க
அந்த மொழி பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? எம்மாதிரியான
கட்டமைப்பை உலக அரங்கில் உருவாக்க வேண்டும்? தேவை என்று
வந்து விட்டால் உலகில் எந்த ஒரு மூலையிலும் தமிழுக்கான இருக்கை
தானே உருவாகும், அதற்கான சூழலை உருவாக்குவதில் தமிழினமும்
தமிழக அரசும் தொலை நோக்குப் பார்வையுடன் கவனம் செலுத்தினால்
நல்லது.
இக்கேள்விகள் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு எதிரானவை அல்ல
சொந்த ஊரில் சொந்தநாட்டில் தமிழ் மொழிக்கான இருக்கையை
உறுதி செய்து கொள்ளும் சாமானிய தமிழனின் கேள்விகள்.

Friday, December 1, 2017

மும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்

மும்பை ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்
---------------------------------------------------------------------------
" தாம்பத்திய உறவுக்கான இடமோ வசதியோ இல்லாத
 இருப்பிடத்தில் வாழ்வதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதும்.......".





ஊடறு பெண்கள் சந்திப்பு இந்தியாவின் பெருநகரமான 
மும்பையில் 2017 நவம்பர் மாதம் 25, 26 காரிக்கிழமை,
 ஞாயிற்றுகிழமை இருநாட்கள் நிகழ்வாக நடைபெற்றது.
 தமிழகம் அல்லாத அயல்மாநிலத்தில் இந்நிகழ்வை நடத்துவதில்
இருந்த நடைமுறை சிக்கல்களையும் தாண்டி
 இந்நிகழ்வு நடைபெற்றது.
முதல்நாள் நிகழ்வு : சனிக்கிழமை 25/11/17
காலை 10.30 மணி அளவில் பாண்டூப் மேற்கு பகுதி 
பிரைட் உயர்நிலைப்பள்ளி திருவள்ளுவர் அரங்கில் சந்தித்தோம். 
நிகழ்வை எம் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு
ஸ்பேரோ பெண்கள் ஆய்வு நிறுவனத்தின் தலைவர்
 எழுத்தாளர் அம்பை அவர்கள் தொடங்கி வைத்து நிகழ்வை நடத்தினார்.
மோனோபஸ் , பெண்ணுடல் அடையும் மாற்றங்கள், 
பெண் பூப்படையும் வயது, அதுசார்ந்த புரிதல்கள், நம்பிக்கைகள்
 மற்றும் குடும்பத்திலும் குடும்பத்தை சுற்றியும் பெண் அனுபவிக்கும்
 பாலியல் வன்கொடுமைகள், தொந்தரவுகள்.......சீண்டல்கள் ..
 என்று உரையாடல்கள் விரிந்தன.
உரையாடல்களின் தொடர்ச்சியாக
உரையாடல்களில் கலந்து கொண்டவர்களின் தனிப்பட்ட
 பெயர்களையோ அடையாளங்களையோ பதிவு செய்வதில்லை
 என்ற அறநிலையைக் கடைப்பிடிப்பதில் ஊடறு தெளிவாக
 இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பதிவு செய்யும் காமிரக்கள்
மவுனித்தன. கட்டுடைக்க முயன்ற உரையாடல்களின்
 மூலமாக சில உண்மைகள் வெளிவந்தன. அவை:

1) பூப்படைதல் குறித்து குடும்பத்தில் தாயோ மற்றவர்களொ
 பெண்ணுக்கு அறிவுறுத்துவது அரிதாக இருப்பது தெரிகிறது. 
அக்கா . சித்தி. அத்தை என்று குடும்பத்தில்
மூத்த பெண்கள் இருந்தால் அவர்கள் மூலமே ஒவ்வொரு 
பெண்ணும் பூப்படைதல் குறித்த தகவலை அறிந்திருக்கிறாள்.

2) பூப்படைதல் நிகழ்வில் இலங்கை, தமிழகம் 
மற்றும் மராட்டிய மாநிலத்தின் சடங்குகளும்
நம்பிக்கைகளும் பொதுவாகவே இருக்கின்றன.

3) இரத்தப்போக்கு குறித்து எதுவுமே அறியாமலும்
 உடலுறுப்புகளின் இயற்கையான செயல்பாடுகளை
 அறியாமலும் பெண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

4) குழந்தைப் பேறடைந்தப் பெண்களுக்கும் கூட
 பிரசவத்திற்கு முன், வயிற்றிலிருக்கும் குழந்தை
 எப்படி வெளியில் வரும் என்ற அறிதலோ
புரிதலோ இல்லை என்பதும் அதிர்ச்சியாக இருந்தது.

5) பள்ளிக்கூடங்களில் இதுகுறித்த உரையாடல்களோ
 ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களொ இல்லை , 
அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கம், கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகள்
கல்வி கற்கும் பள்ளிகளில் இவை எதுவுமே பேசுப்பொருளாக
 இருப்பதில்லை,
அதற்கான அவசியத்தையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை 
என்பதையும் அறியமுடிந்தது. 

6) குடும்பத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள்
 குறித்து இப்போதும் பெண்கள் வெளிப்படையாக 
பேசுவதற்கு தயக்கம் காட்டினார்கள்.
 குடும்ப நிறுவனத்தின் கட்டமைப்பை வெளிப்படையான
 இம்மாதிரி உரையாடல்கள் சிதைவு படுத்தும்
என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.

7) ஒரு சிலர் தனக்குத் தெரிந்தவர், உறவினர் வாழ்க்கையில்
 நிகழ்ந்த சம்பவங்கள் என்று
மூன்றாமிடத்தில் படர்க்கை நிலையில் நின்று பேச முன்வந்ததார்கள்.

8) தந்தையால் பாலியல் வல்லாங்கு செய்யப்பட்ட
 பெண் தனிப்பட்ட முறையில் அதைப்பற்றி தனிப்பட்ட முறையில்
பேசியதும் அவளே எழுத்தில் தன் தந்தையைப் பற்றி 
பதிவு செய்யும் போது தந்தையின்
தலைமையைக் கொண்டாடும் வகையில் பதிவு செய்திருந்ததையும் 
எழுத்தாளர் அம்பை அவர்கள் குறிப்பிட்டார்.

9) பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகள்
 சிறுவர்களும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதைக் குறித்து
 சில தாய்மார்கள் வெளிப்படையாக பேசினார்கள்.
10) சிறுவன் ஒருவன் நடுத்தர வயது பெண்ணின் மார்பகங்களைத் 
தொடுவதும் கூட நிகழ்கிறது , இச்சிறுவர்களை எப்படி கையாளுவது
 என்பது குறித்து சமூக அக்கறையுடனும் எதிர்காலம்
குறித்த கவலையுடனும் அவர்கள் உரையாடினார்கள்.

11) பெரும்பாலும் இன்றைய இணையதள வசதிகள் காரணமாக 
அவர்கள் பார்க்கும் காட்சிகளும் தந்தைமார்களின் 
கைபேசிகளில் அவர்கள் கண்ட காட்சிகளும் கூட
அவர்களின் இம்மாதிரியான வயதுக்கு மீறிய பாலியல்
 செயல்பாடுகளுக்கு பெரும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.

12) மும்பை போன்ற பெருநகர வாழ்க்கையின் இருப்பிடமும்
  (10க்கு 8 அடி சதுர வீட்டில்)
இதற்கான ஒரு காரணமாகவே இருக்கிறது.
 கணவன் மனைவியின் தாம்பத்ய உறவுக்கான இடமோ 
வசதியோ இல்லாத இருப்பிடத்தில் வாழ்வதால்
 குழந்தைகள் பாதிக்கப்படுவதும் இம்மாதிரி செயல்களைச்
செய்யும் உணர்வுக்கு உந்தப்படுவதும் நடக்கிறது என்பதையும்
 பெண்கள் வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்கள்.

13) GST வரிவிதிப்புக்குப் பின் பெண்கள் மாதவிடாய்
 காலங்களில் பயன்படுத்தும் நேப்கின்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 
வரியைக் குறைகக்வோ / நீக்கவோ முடியாது
என்பதற்கு ஆட்சியாளர்கள் சொன்ன காரணங்கள் 
: ஒரு பெண்ணுக்கு ஒரு மாதத்தில்
அந்த 3 நாட்களுக்கு 3 அல்லது 4 நேப்கின்கள் மட்டும் தானே தேவைப்படும்!" என்ற
அவர்களின் மறுமொழி. 
இந்த மறுமொழியின் வாசிப்பில் குடும்பத்தில் ஒருவனாக
இருக்கும் ஆணுக்கு பெண்ணுடல் சார்ந்த புரிதல் எந்தளவுக்கு இருக்கிறது
 என்பதைக் காட்டுகிறதா அல்லது ஆட்சியாளர்கள் பெண்ணுடல் சார்ந்த அக்கறையின்மையை வெளிபப்டுத்துகிறதா என்ற கேள்வி எழுந்தது.

14) இந்தியப் பெண்களைக் குறித்து ஆய்வுசெய்த யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வறிக்கையை பெருநகரப் பெண்களின் இவ்வுரையாடல்கள்
 மீண்டும் மீண்டும் உறுதி செய்திருக்கின்றன.
, research by Unicef India in Bihar and Jharkhand found that while 85% of girls were using cloth as a menstrual absorbent, 65% knew what sanitary pads were, because they had seen ads for them on TV. Their reasons for avoiding them range from lack of money to not knowing how to use them. Ignorance about periods in general is definitely shocking: 83% of girls in the same Unicef study had no idea what to expect when they started bleeding, and nearly half missed school because of menstruation.(guardian may 2016)
15) . தொண்டு நிறுவனங்கள் எவ்வளவுதான் குடிசைப்பகுதிகளிலும் ஆதிவாசிகள் இருப்பிடங்களிலும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தாலும் குடிநீர் இணைப்பு, மின்சாரம் போன்ற வசதிகளைப் பெறுவதற்கு
அரசின் உதவி கட்டாயம் தேவைப்படுவதை தன் களப்பணி அனுபவத்தின் ஊடாக
தெளிவாக எடுத்துரைத்தார் நங்கை குமணன்.

16)மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலாக இருக்கும் பெண்கள் சார்ந்த நலத்திட்டங்களில் அரசின் மெத்தனமும் கவனக்குறைவும்
 தொடர்வதையும் அரசு அதிகாரத்திலிருக்கும்
எவருக்கும் பெண்கள் சார்ந்த இப்பிரச்சனைகள் குறித்து
 எந்த அளவுக்கு புரிதலும் விழிப்புணர்வும் இருக்கிறது 
என்பதையும் எழுத்தாளர் அம்பை நிகழ்வின் முடிவில்
தன் முத்தாய்ப்பான கருத்தாக முன்வைத்தார்.
மதிய உணவுக்குப் பின் ஸ்பேரோவின் "தேகம் " ஆவணப்படம் 
திரையிடப்பட்டது.

திருநங்கைகள் குறித்த இந்த ஆவணப்படம் திருநங்கைகளின்
 மனக்குமுறலை மட்டுமின்றி அவர்களின் போராட்டமே 
வாழ்க்கையாக தொடரும் கதையை
அவர்களின் மொழியில் பேசியது.
உடல் வேறு, உணர்வுகள் வேறாக இருக்கும்
 தங்கள் வாழ்க்கையில் தம் உணர்வுகளுக்கான
உடலைப் பெற அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் 
அதை அவர்கள் எவ்வாறு கடந்து வந்தார்கள் என்பதையும்
 இந்த ஆவணப்படம் முன்வைத்தது.
மேலும் அவர்களில் சிலர் பெண்கள் செய்யும் வேலைகளான 
பாத்திரம் துலக்குவது, கோலம் போடுவது, துணி துவைப்பது, 
தண்ணீர் எடுப்பது இத்தியாதி வேலைகள்
தமக்கு விருப்பமானதாக இருந்ததால் தாங்கள்
 பெண்ணாக உணர்ந்ததாக தெரிவித்தது
சற்று அதிர்ச்சியாக இருந்தது. 
ஆண் பெண் என்ற பால்வேறுபாடு
 இச்சமூகம் சுமத்தி இருக்கும் அவர்களின் அன்றாட வேலை சார்ந்ததல்ல, 
எந்த வேலையையும் எவரும் செய்யலாம், செய்ய வேண்டும் 
என்ற புரிதல் இல்லாமலிருப்பதைக் கவனிக்க முடிந்தது. 

ஆணுடலைப் பெண்ணுடலாக்க அவர்கள் மேற்கொள்ளும் 
அறுவைச்சிகிச்சைக் குறித்தும் பேசிய ஆவணப்படம் அதையும் தாண்டி அர்த்தநாரீஸ்வரர் தத்துவத்திற்குள் தன்னுடலைப் புகுத்தி தன்னையும் தன்னுடலையும் கொண்டாடும்  திருநங்கைகளின் இன்னொரு முகத்தையும்
 காட்டியது மி கவும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் ஊடறு சந்திப்புக்காக வந்திருந்த பெண்களுடன் 
இந்த உரையாடலில் கலந்து கொண்ட மகிழ்ச்சி மகளிர் பேரவை,
 பிரைட் இளநிலைக்கல்லூரி மாணவியர்,
அம்பேத்கர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை மற்றும் மாணவியர், 
மராத்திய எழுத்தாளர் ஆஷா காம்ப்ளே, மராத்திய பேராசிரியர் மாதவி குல்கர்னி, வழக்குரைஞர் செல்வகுமாரி, ஆசிரியை ஹேமாமாலினி, சுசிலா அய்யாபிள்ளை , திருமதி ஜெயா ஆசீர், நங்கை குமணன்,
செல்வி, புனிதா மற்றும் அனைவருக்கும் 
ஊடறு சார்பாக நன்றியும் அன்பும்.