Sunday, May 31, 2015

அரசியலில் பெண்கள்



இலங்கை மலையகத்தில் 2015, ஏப்ரல் 25, 26களில் நடந்த கருத்தரங்கில்

-அரசியலில் பெண்கள் – புதியமாதவி, மும்பை, இந்தியா.


http://yourlisten.com/oodaru/puthiyamathvi

நந்தஜோதி பீம்தாஸை சந்தித்தேன்





நம்பமுடியவில்லை. எல்லாம் இந்த 48 மணி நேரத்திற்குள் நடந்திருக்கிறது.
முதலில் நண்பர் ஆதவன் தீட்சண்யாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அவர் தானே எனக்கு பீம்தாஸை அறிமுகப்படுத்தியவர்.
தோழர் ஆதவனின் புத்தகத்தை அதன் மேலட்டையின் நுனியிலிருந்து கடைசி பக்கத்தின் கடைசி எழுத்து முற்றும்வரை.. பலமுறை வாசித்து வாசித்து பீம்தாஸுடன் உரையாட ஆரம்பித்துவிட்டேன். என் நண்பர்கள் சிலரிடமும் பீம்தாஸ் குறித்தும் அவருடைய மீசையின் பிரதாபங்கள் குறித்தும் கொஞ்சம் அதிகமாகத்தான் அலட்டிக்கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன். இப்படியாக நான் 48 மணிநேரமும் பீம்தாஸ் நினைவாக இருக்க.. என் கைபேசியில்
" hai, iam beemdoss , want to meet you, "
என்று குறுஞ்செய்தி வந்தால் எப்படி இருக்கும்?
36 வயதினிலே நாயகிக்கு மயக்கம் வந்த மாதிரி எனக்கும்..
அதிர்ச்சி.. குழப்பம்.. கனவோ.. நனவோ.. நம்பமுடியவில்லை..
உடனே தொடர்பு கொண்டேன். ஏர்போர்ட்டில் 2 மணி நேரம் சந்திக்கலாம் என்றார்.
மெட்ரோ பிடித்து ஓடி.. அவரை சந்திக்கும் வரை..
என்ன பேசினோம் என்று கட்டாயம் எழுத வேண்டும். ஆனால் என்னவெல்லோமோ பேசினோம்.. அவர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டாலும் சரி..
என் மனசில் பட்டதை எல்லாம் பேசினேன்.. அல்லது உளறினேனா தெரியல.
ஆனால் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.
அவரிடம் நான் சொல்ல விரும்பிய ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லாமல் வந்துவிட்டேனே என்று வந்தப்பிறகு நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
அதனால் என்ன.. அவருக்குத் தெரிந்திருக்கலாம். அவர் புதுவிசை வாசகராக இருக்கலாம் தானே. புதுவிசையில் தான் என்னுடைய அந்தக்கதை வெளிவந்தது.
"செப்டம்பர் 29, 3007" என்பது அக்கதையில் தலைப்பு. நினைவிருக்கிறதா ஆதவன்?
2007ல் வெளிவந்த "புதிய ஆரம்பங்கள் " என்ற என் சிறுகதை தொகுப்பில் அக்கதை இடம்பெற்றுள்ளது.
"மீசை என்பது வெறும் மயிர் " என்ற நாவலை வாசித்தவுடன் எனக்கு என் கதையும் நினைவுக்கு வந்தது. என் கதை மீது எனக்கே கொஞ்ச்ம பெருமை வந்துவிட்டது!!
அந்தக்கதையை நான் பீம்தாஸிடம் கொடுக்க மறந்துவிட்டேன். உங்களிடம் இருந்தால் அவருக்கு அனுப்பி வைக்கவும். தன்னைப் போலவே ஒரு பெண்ணும் பகடி செய்து எப்படி எல்லாம் எழுதி இருக்கிறாள் என்பதை எண்ணி நிச்சயம் நம் பீம்தாஸ்
பெருமைப்படுவார் தானே!
எங்கள் சந்திப்பு:
நான் தான் கொஞ்சம் டென்ஷனாக இருந்தேன். அவசரத்தில் கிளம்பியதில் மேட்சிங் துப்பட்டா கிடைக்கவில்லை. கையில் கிடைத்ததை எடுத்து மாட்டிக்கொண்டு ஓடினேன்.
தலையில் வேறு எண்ணெய்க்குளியலுக்கு வைத்த எண்ணேய் வழிந்துக்கொண்டிருந்தது.
அதைப் பற்றி எல்லாம் போகிற அவசரத்தில் எண்ணிப்பார்க்க நேரமில்லை.
நான் நினைத்ததைவிட அதிக வயதானவராக இருந்தார் பீம்தாஸ். ஆனால் அவர் குரலில் நான் கற்பனை செய்திருந்த அதே கம்பீரம். அடிக்கடி அவர் சிரித்த சிரிப்பு..
அதிலும் குறிப்பாக அவருடைய சில வரிகளைச் சொல்லி நான் விளக்கம் தேடிய கதையை ரொம்பவும் மனிதர் ரசித்து ரசித்து சிரித்தார். நான் என் முகத்தில் வியர்வையுடன் சேர்ந்து வழிந்த எண்ணெயைத் துடைத்துக்கொண்டேன்.
எங்கள் பேச்சு நந்தனில் ஆரம்பித்து மகாத்மா ஜோதிராவ்புலே, பாபாசாகிப் அம்பேத்கர், அயோத்திதாசர் வரை நீண்டது.
நிலவறை நூலகம், அவர் தங்கி இருக்கும் தீவு,
அங்கிருக்கும் மக்கள் என்று நிறைய கதைத்தோம்.
நீங்கள் தாராவி பகுதியைக் கட்டாயம்
பார்க்கவேண்டும் என்று சொன்னேன். மனுஷன் அதற்கும் ஒரு சிரிப்பு சிரித்து வைத்தார்.
ஒரு சேரிப்பகுதியில் வாழ்ந்தவன் நான். புதிதாக அதில் என்ன பார்க்க இருக்கிறது? என்று கேட்டார்.
நானும் பதிலுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சேரியைப்
பார்த்திருப்பீர்கள், வாழ்ந்திருக்கிறீர்கள். ஒரு பெருநகரத்தின் சேரியைப் பார்த்திருக்கிறீர்களா?
அது எப்படி இருக்கும் என்பது தெரியுமா?
எங்கள் மராட்டிய கவிஞன் நாம்தேவ் தாசல்
எழுதிய GOLPITHA காட்டும் சேரி வாழ்க்கையை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னேன்.
படைப்புகளின் படுக்கையில் கடவுளின் மலம்
ஒரே அடுப்பில் சுடப்படுகிறது
வேதனையும் ரொட்டியும்.
என்று கோல்பிதா காட்டும் மாநகர சேரியின் அவலங்களைப் பற்றிப்
பேசிக்கொண்டோம்.
கடந்த 48 மணிநேரத்தில் நடந்த கூகுள் ரகளை முதல் என் நண்பர்கள்
வட்டத்தை நான் மீசை என்பது வெறும் மயிருடா என்று செய்திருக்கும் எல்லா ரகளைகளையும் சொல்லி சிரித்தோம். அவரும் ரசித்துக்கொண்டார்.
அது என்னவொ வழக்கம்போல பிரபலங்களை சந்திக்கும் போது
அவர்களுடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற
ஓர்மை எனக்கு ஏற்படுவதில்லை. அப்படியே இப்போதும் நானும்
பீம்தாஸும் எங்கள் சந்திப்பின் நினைவாக ஒரு புகைப்படமும்
எடுத்துக் கொள்ளவில்லை , உங்களிடம் காட்ட.
அதனால் என்ன.. பீம்தாஸின் சிரிப்பு எப்போதும் என் செவியில்
ஒலித்துகொண்டே இருக்கிறது. இந்த நாள் என் வாழ்க்கையிலும்
நந்தஜோதி பீம்தாஸ் வாழ்க்கையிலும் ஒரு மறக்கமுடியாத நாள் தான்.
எங்கள் சந்திப்பை பீம்தாஸே கூட தன் அடுத்தப் புனைவில் எழுதக்கூடும்.
..அதுவரை..
பீம்தாஸை எனக்கு அறிமுகப்படுத்திய தோழர் ஆதவனுக்கு என் நன்றி.
வெறும் நன்றி மட்டும் சொன்னால் போதாது என்பதால் ஆதவனுடன்
அண்மையில் அவர் மும்பை வந்தப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும்.. எங்களுடன் எழுத்தாளர் தோழி அம்பை அவர்கள்.

Friday, May 29, 2015

உடைந்தக் கனவுகள்

அனுப்புநர்:
புதியமாதவி (மல்லிகா சங்கரநயினார்)
505/5 ஹேமா பார்க் அடுக்குமாடி குடியிருப்பு,
பாண்டூப் - கிழக்கு
மும்பை 400 042.

பெறுநர்:
செயலாளர்,
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்,
மும்பை.

அன்புடையீர்,
வணக்கம்.  

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தை 
ஒரு எழுத்தாளருக்குரிய கனவுகளுடன் நானும் 
மறைந்த சீரிவரிசை சண்முகராசன் அவர்களும் 
 திரு குமணன், கருண், செந்தில் நாகராஜன் மற்றும் சமீராமீரான் ஆகியோருடன் சேர்ந்து ஆரம்பித்தோம்.
2000 வருடத்தில் ஆரம்பித்த எழுத்தாளர் மன்றத்தின்
 ஓவ்வொரு செயல்பாடுகளிலும் என் உழைப்பையும்
 பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி இருக்கிறேன்.
2000 ல் வெளியான "ஹேராம் "கவிதை முதல் 201
5 வெளியான என் 14வது புத்தகம் "கதவுகள்  திறக்கும் வானம் " வரை
 என் நன்றியை உங்களுக்கு சொல்ல நான் மறந்ததில்லை.

எழுத்தாளர் மன்றத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறிய காலக்கட்டத்திலும் இந்த மன்றம் என் கனவு என்ற 
பிடிவாதத்துடன் மன்றத்தின் சார்பாகவே  நின்று என் கடமையை செய்திருக்கிறேன்.

விமர்சனங்கள் எனக்குப் புதிதல்ல.
 காத்திரமான விமர்சனங்களை எப்போதும் வரவேற்பதில்
 எனக்கு சிரமம் ஏற்பட்டதில்லை.
 முரண்பாடுகள் பகை முரண்கள் அல்ல
 என்ற தெளிவு எனக்கு எப்போதும் உண்டு.
 அதனால் தான் என் கருத்து முரண்பாடுகளுக்கு நடுவில்
 உங்களுடன் இணைந்து செயலாற்ற முடியும் என்று நம்பினேன். ஆனால் அதற்கான எல்லா கதவுகளையும் நீங்கள் 
அடைத்துவிட்டீர்கள்.
  என்னைக் காயப்படுத்துவதாக நினைத்து  நான் கட்டி எழுப்பி
இருந்த உங்கள் பிம்பங்களை உடைத்து விட்டீர்கள். 

எனவே எழுத்தாளர் மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும்
பொறுப்புகள் (அப்படி எதாவது கொடுக்கப்பட்டிருந்தால்) அனைத்திலும்
இருந்து இன்றுமுதல் விலகிக் கொள்கிறேன்.

மேலும் தென்னரசு இதழை எனக்கு அனுப்பும் சிரமத்தையும்
 தவிர்க்கவும் என்று  பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

மும்பை பெருநகரமல்ல. சிறு நகரம்தான்.
 எங்காவது, எப்போதாவது நாம் சந்திக்க நேர்ந்தால் 
கண்ணியத்துடன் ஒரு புன்னகையை மட்டுமாவது 
நாம்  பரிமாறிக்கொள்வதற்காகவே நான் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். 

உடைந்தக் கனவுகளுடன் விடைபெறும் இத்தருணத்தில்
 உங்கள் அனைவருக்கும் என் நன்றி.


- புதியமாதவி,
மும்பை.
2015, மே 29. 




Thursday, May 28, 2015

கங்காணியின் பேத்தியாக இலங்கை மலையகத்தில் நான்




தேயிலைத் தோட்டங்களுக்கு ஒரு சுற்றுலா பயணியாக நான் செல்வது முதல் முறையல்ல.
மூணாறு, ஊட்டி பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். மேலும் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலை பயிலும்போது விடுதி வாழ்க்கை. அக்காலத்தில்
எஸ்டேட் பகுதியிலிருந்து என்னுடன் படித்த தோழியர் உண்டு. எஸ்டேட் என்றால் மலைப்பகுதி, தேயிலை தோட்டம் என்று எங்கள் ஊரில் புழக்கத்தில் இருக்கும் சொல்.
ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத ஒர் அவஸ்தை என் இலங்கை மலையகப் பயணத்தில் ஏற்பட்டது. மலையகத்தில் பூகோள நில அமைப்பு ரொம்பவும் ஸ்பெஷலாக .. சுற்றிலும்
மலை.. மலையில் இறங்குமுகமாக பச்சை நிறத்தில் காற்றில் படபடக்கும் தேயிலைத் தோட்டங்கள். அதிலும் கருத்தரங்கம் நடந்த இடமும் எங்களுக்கு தங்கி இருக்க ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இடமும் இயற்கை அழகின் பச்சைநிற சிரிப்பு.
என்கிருந்தோ வந்து அப்போது ஒட்டிக்கொண்டது என் பூட்டன் கங்காணியின் முகம்
அவரை நான் மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் அந்த முகத்தை மறக்கவில்லை என்பதை மலையகம் போன பின்னர் தான் நானே உணர்ந்து
கொண்டேன். கங்காணி தாத்தா என் அம்மாவின் அம்மாவுக்கு அப்பா. அதாவது என் தாய்க்கு தாய்வழி தாத்தா. எனக்கு தாய்வழி பூட்டன் . சரிதானே.
அப்போதே ஆறடி உயரம். தேக்கு மரம் போல உடல்வாகு. எப்போதும் உதட்டில் சுருட்டு.
மேல்சட்டைக்கு மேல் ஒரு கறுப்புக் கலர் கோர்ட் போட்டிருப்பார். கையில் அந்தக் காலத்திலேயே ஒரு வாக்கிங் ஸ்டிக். எனக்கென்ன வயதிருக்கும்,.... இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்திருப்பேன். சரியாக நினைவில்லை.
ஆனால் அந்தக் காலத்திலேயே அவர் தன் இலங்கைப் பயணம் பற்றியும் கப்பலில் பயணம் செய்தது பற்றியும் எங்கள் அனைவரிடமும் கதைக் கதையாக சொல்வார்.
நாங்கள் மும்பையிலிருந்து ஊருக்குப் போனவுடன் வந்துவிடுவார். அப்பாவைப் பார்க்க.
அவர் வந்துவிட்டாலே எனக்கு கொண்டாட்டம் தான். அவர் சொல்லும் வீரதீரக்க் கதைகளைக் கேட்க தயாராகிவிடுவேன். அடிக்கடி இங்கிலீசு வேறு பேசுவாரா.. எனக்கு அந்த வயதில் அதுவே வியப்பாக இருக்கும். " ப்பப்பா.. இந்த தாத்தாவுக்கு எப்படி இங்கிலீஷ் தெரியும்?" என்று அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். அப்பா என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருப்பார். ஆனால் தாத்தா ஆரம்பித்துவிடுவார். தான் எப்படி வெள்ளைக்கார துரையிடம் இங்கிலீசு பேசுவேன் என்பதையும் வெள்ளைக்கார துரைச்சானி அம்மாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து சுற்றிக்காட்டியது பற்றியும் கதைக் கதையாக சொல்லுவார். எனக்கு அதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். அத்துடன் அவர் ஒரு சிறந்த வேட்டைக்காரன். ஆமாம்.. காடுகளுக்கு வேட்டைக்குச்
செல்வதும் விலங்குகளின் மாமிசத்தை மஞ்சள் சேர்த்து கயிற்றில் கோத்து காய வைத்து உண்பதும் அவருக்குப் பிடித்தமானவை. அதனால் தான் அவர் தன் வயதானக் காலத்திலும்
கட்டுமஸ்தாக இருப்பதாக எங்கள் ஊர் இளசுகளிடம் கதை அளப்பதைக் கேட்டிருக்கிறேன்.
கங்காணி தாத்தா என்றுதான் எல்லோரும் அவரை அழைப்போம். அவருக்கும் அதில் பெருமை.
என் அம்மம்மாக்களும் கங்காணி பொண்ணுகளாக்கும் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டிருந்தார்கள். அவர் தன் பரிசாக தான் வைத்திருந்த வேட்டைநாய் டைகரை எங்களுக்கு
கொடுத்தார். இதெல்லாம் ரொம்ப ரொம்ப பழைய கதை. ஆனால் அது என்னவோ நான் மலையகத்தில் போய் சேர்ந்தவுடன் அந்தக் கிழவன் முகம் வந்து என்னைப் படாதப் பாடு படுத்திவிட்டது.
கங்காணி என்றால் யார்? அவர்கள் செய்த தொழில் என்ன?
அதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? என்பதெல்லாம் நான் வளர வளர எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் அதெல்லாம் எனக்குத் தெரிய ஆரம்பிக்கும் வயதில் கங்காணி தாத்தா கண்ணைமூடிவிட்டார்.
கங்காணி தாத்தா பெருமையுடம் பேசிய மலையகத்தில் நான் இருக்கிறேன். .. எத்தனையோ குடும்பங்களை அவர் இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கலாம். அவர் அழைத்துவந்தவர்களில்
எத்தனை பேர் வழியில் இறந்துப் போனார்களோ..!
பசுமையான அந்த இலங்கை மலையகத்தில் கங்காணி தாத்தா அழைத்து வந்த பெண்களின் கண்ணீரின் ஈரம் .. அந்த தேயிலையில் இருக்கிறது. எனக்கு அங்கு இருக்கும்போது அதனாலோ
என்னவோ எப்போதும் விரும்பி பருகும் "டீ" கூட .. குடிக்கமுடியாமல் போய்விட்டது.
மலையகத்திலிருந்து தேயிலை வாங்கிவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதுவும் முடியவில்லை. "அக்கா சிலோன் டீ வாங்கிவந்தாயா?" என்று என் தங்கைகள் மும்பை வந்தவுடன்
கேட்டார்கள். அப்போது தான் அவர்களிடம் கங்கானி தாத்தா நினைவில் வந்ததைச் சொன்னேன்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் உலகம் எங்கும் இருந்த,
சூரியன் அஸ்தமிக்காத தன் காலனிநாடுகளில்
சுரங்கம் வெட்டவும், பாலம் கட்டவும், ரயில்பாதை அமைக்கவும் காபி, ரப்பர், தேயிலை தோட்டங்களில் வேலைப்பார்க்க அடிமைகளாவும் கோடிக்கணக்கான எம் மக்களை பிடித்துச் சென்றிருக்கிறார்கள். சஞ்சிக்கூலி, துண்டுக்கூலி, ஆள்கட்டி, கங்காணி என்று காலனி
ஆதிக்கம் உருவாக்கிய சொற்கள் வெறும் அடையாள சொற்களோ செய்யும் தொழில் குறிக்கும் சொற்களோ மட்டும் அல்ல. அச்சொற்கள் வரலாறு காணாத சுரண்டலின் புதிய அடையாளங்கள்.
அந்த வெள்ளைக்காரர்கள் உறிஞ்சும் ஒவ்வொரு மிடறு காபி, தேநீர் விளைவிக்க எம்மக்கள் அந்த இருண்ட மலைப்பகுதியில் மலைக்காடுகளில் எவ்வளவு வதைப்பட்டிருப்பார்கள்?
தென் ஆப்பிரிக்காவின் வைர தங்கச் சுரங்கங்களிலும் மலேசியாவின் ஈயச் சுரங்கங்களிலும் சர்க்கரைக்காக கரும்பு விளைவித்த பீஜீத் தீவுகளிலும் மேற்கத்திய தீவுகளிலும் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் யார்?
யார்? யார்?
சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல்களைப் போல இந்தியப் பெருங்கடல் எங்கும் எம்மக்கள்..
விலைமதிப்பில்லாத எம் உழைக்கும் மக்கள்-
சரக்குகளைப் போல ஏற்றி செல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர் கூட இந்திய சாதி அடுக்கின் உயர்
மட்டத்தில் இருந்தவர்களாக இல்லை என்ற உண்மை.. எவ்வளவு கொடியது? எவ்வளவு கேவலமானது!
இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தான் மனிதர்களுக்கு
மதிப்பில்லையோ? மிகவும் மலிவான சரக்காக எம்மக்கள் மட்டுமே இருந்தார்களோ?
உலகம் எங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள், தமிழர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறோமே..
149 நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரமே வெளிவந்திருக்கிறது..
ஆனால் இந்தப் புலம் பெயர்வின் காரணமும் ஏற்றிச் சென்ற கப்பல்களின் முகமும் கோரமானவை. இதில் பெருமைப்பட்டுக்கொள்ள தமிழ்ச்சமூகத்திற்கு எதுவும் இல்லை!
இத்துடன் தங்கள் இருத்தலுக்காக நாம் வாழும் காலத்திலேயே புலம் பெயர்ந்திருக்கும் ஈழத்தமிழர்கள் உலக நாடுகளின் ஒவ்வொரு மூலையிலும்...
கங்காணி தாத்தா மலையகத்தில் என்னை இப்படியாக பல்வேறு நினைவுகளை இழுத்து வந்து அலைக்கழித்தார்.
தோழி சந்திரலேகா-கிங்ஸ்லி தம்பதியர் மலையகத்தில் உண்மையிலேயே ஒரு மலைமீது கட்டியிருக்கும் தங்கள் இல்லத்திற்கு இரவு உணவுக்கு அழைத்தார்கள். மலையகத்தில்
கவிந்திருக்கும் இருட்டு.. அவர்கள் வீட்டுக்குச் செல்லும் பாதையோ ஒற்றையடி குறுகலான ஏற்றமான மலைப்பாதை. கிங்ஸ்லி மோட்டார் பைக்கில் விளக்கை ஏற்றி வழிகாட்டிக்கொண்டு
முன்னால் சென்றார். கங்காணி தாத்தா என்னைத் தொந்தரவு செய்யாமல் இருக்க நான்
"புதியவானம், புதிய பூமி" பாட்டுப்பாடிக்கொண்டு மலை ஏறினேன்.
இரவு விருந்து முடிந்து திரும்பும்போது லறீனாவுக்கு அட்டைக் கடித்தது. உடனடியாக அவர் பழக்கப்பட்டவர் என்பதால் அட்டையை எடுத்து வீசினார். தங்கும் விடுதிக்கு வந்தவுடன்
எல்லோரும் அட்டைக்கடி செக்கிங் செய்த போது.. " என் முழங்காலில் அட்டை"
பிறகென்ன..! அப்புறம் நடந்ததெல்லாம் சஸ்பென்ஸ். (அக்காட்சியை யாழினி நடித்துக் காட்டுவதைப் பார்க்க வேண்டும். யாழினி .. மீண்டும் ஒரு முறை அக்காட்சியை நடித்துக்காட்டி..
அப்படியே நம் வலைத்தளத்தில் ஏற்றுங்கள்... . )
லறீனாவின் கைமருத்துவத்தால் மலையகத்தில் அட்டைக்கடியிலிருந்து நான் தப்பினேன். ஒரு மணிநேரம் வழிந்துக்கொண்டிருந்த ரத்தம் ஒருவழியாக நின்றது.
லறீனாவின் மகனும் மகளும் "ஏம்மா.. இந்த ஆன்டியை மட்டும் அட்டைக்கடித்தது?"
என்று அன்று இரவு முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். லறீனாவும் பல்வேறு கற்பனைக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்..
லறீனா.. " கங்காணியின் பேத்தியல்லவா நான்.. அதுதான் என்னிடம் நலம் விசாரிக்க (?)
வந்திருக்கிறது தேயிலை தோட்டத்தின் அட்டை"


Wednesday, May 27, 2015

இலங்கை பயணம் எழுப்பும் கேள்விகள்

இலங்கை பயணத்தில் எழுந்த கேள்விகள்
----------------------------------------------------



கேள்வி எண்: 1

தமிழ்நாட்டின் வரலாற்றை வாசிக்கும் போது பவுத்தம் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலாக இருந்திருக்கிறது. பண்டிதர் அயோத்திதாசரின் ஆய்வுகள் இக்கருத்தை
உறுதி செய்கின்றன.  திருக்குறளை திரிகடகம் என்று சொல்லும் அவர் முடிவை
ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட பவுத்தநெறி தழுவிய மக்கள் கலாச்சார படை எடுப்பின் காரணமாக
ஆரிய வேதங்களையும் ஆரிய மேலாண்மையையும் ஏற்க மறுக்கிறார்கள். எனவே, அவர்கள்
ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக விலக்கி வைக்கப்பட்டார்கள் அல்லது விலகி இருந்தார்கள்.
இப்படியாக தமிழகச்சூழலில் பவுத்தம் சமான்ய மனிதனின் வாழ்க்கையாக இருக்க
தமிழ் நிலத்திற்கு மிகவும் அருகில் இருக்கும் இலங்கை மண்ணில் ?.....
சிங்கள பவுத்த மதம்  VS  தமிழ்மக்களின் இந்துமதம் என்று தமிழ்த் தேசிய போராட்டத்தை திசைத் திருப்பிய ஒரு தவறானப் பார்வை கூட இருந்தது நினைவுக்கு வருகிறது.
இலங்கையில் போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியில் தான் கிறித்துவத்தை முழுவதுமாக பரப்ப அவர்கள்
பவுத்த விகார்களை இடித்தார்கள். பவுத்த துறவிகளைக் கொன்றொழித்தார்கள். உயிர்தப்பிய பவுத்த
பிக்குகள் சிலர் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள். அதன் பின் வந்த கிழக்கிந்திய கம்பேனிக்காரர்கள் இலங்கை வாழ் பவுத்த மக்களின் சமய சடங்குகளைச் செய்யவும் வழிபாடுகளை நடத்தவும் பவுத்த துறவிகள் இல்லை என்பதால் அன்றைய பர்மாவிலிருந்து ஆயிரக்கணக்கான பவுத்த பிக்குகளை இலங்கைக்கு கொண்டுவந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இந்தியாவிலும் கீழை நாடுகளிலும் பவுத்தம் பரவியதில் பெரும்பங்காற்றிய
பேரரசன் அசோகன் தன் மகனையும் மகளையும் பவுத்த நெறிப் பரப்ப இலங்கை
மண்ணுக்கு அனுப்புகிறான். இலங்கை வந்திறங்கும் அவர்களை இலங்கை அரச குடும்பமே
வரவேற்கிறது. அப்படியானால், இலங்கையில் புவுத்தம் அரண்மனை வாயிலாகவே
நுழைந்து மேலதட்டு மக்களின் வாழ்க்கையில் இடம் பிடித்ததா?
விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையில்  இலங்கை மண்ணின் பவுத்தநெறி
எம்மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தியது?

 அரண்மனை, ஆட்சி, அதிகாரம் இந்தப் பாதையில் இன்றுவரை பவுத்தம்
இலங்கையின் இன்னொரு முகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமா?
யோசித்துப் பார்க்கிறேன்....
இத்துடம் அனைத்தையும் பவுத்த நெறிக்குள் அடக்கிய பண்டித அயோத்திதாசரும்
பவுத்தம் தழுவ இலங்கை மண்ணுக்கு சென்று முறையாக பவுத்தத்துக்கு மாறியதாக
தகவல்கள் இருக்கின்றன.

வெளிப்படையாக தெரியும் இக்காரணிகள் தவிர்த்து இலங்கையில் புத்தமதம்
2000 ஆண்டுகள் பழமையைக் கொண்டிருப்பதும்
ஆட்சி அதிகாரத்துடன் இன்றுவரை தொடர்புடையதாக இருப்பதையும் கவனிக்கிறேன்.

புத்தரின் போதனைகள்  உடைந்துப்போன பல்லிலும் கொண்டுவந்து நடப்பட்ட
போதிமரத்து கிளையின் அடையாளமாகவும் மட்டும் இருப்பது ஏன்?

கேள்வி எண் 2
---------------------
இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள்  65684 ஏக்கர் பரப்பில் தென்னை காணப்படுகின்றது.யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களும் இப் பிரதோசத்தின் தென்னைச் செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 60 வீதத்தை அடக்கியுள்ள(இலங்கையில் தமிழ்ர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும் இரா. சிவச்சந்திரன். எம். ஏ)
அண்மையில் இலங்கைப் பயணத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இளநீர்
பருகலாம் என்று விலை கேட்டால் அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு பெரிய இளநீர் விலை இலங்கை ரூபாய்க்கு 100 முதல் 120 வரை
சிறிய இளநீர் 80 ரூபாய். இந்தியாவில் ஒரு பெரிய இளநீர் விலை 40 ரூபாய்.(அதாவது
இலங்கை ரூபாய் மதிப்பு ரூ 80 (அதுவும் பெருநகரம்
மும்பையில். சற்றொப்ப அதே விலை அல்லது அதைவிட அதிகவிலை இலங்கையில்,
தென்னைமரங்கள் அதிகம் இருக்கும் பகுதியில் என்பது எதைக் காட்டுகிறது?
போருக்குப் பின் ஏற்பட்டிருக்கும் பொருளாதர சீரழிவைக் காட்டுகிறது.
இவ்வளவு விலை கொடுத்து பொதுமக்கள் தங்களின் அன்றாட பொருட்களை
எப்படி வாங்குகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
யாழ்ப்பணத்தில் வாழும் இளைஞர்கள் அனைவருக்கும் வெளிநாடு செல்வது மட்டுமே
கனவாக இருக்கிறது. வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கலாமோ ,
அவர்கள் அனுப்பும் பணத்தில் இங்கே இவர்கள் தங்கள் சொந்த மண்ணின்
பொருளாதரம் குறித்தோ விலைவாசி உயர்வு குறித்தோ பிரக்ஞை இல்லாமல்
இருக்கிறார்களோ? அல்லது இந்தப் பொருளாதார சிரழிவை போருக்குப் பின்னரான
ஒரு நாட்டின் பொருளாதர சீரழிவாக மட்டுமே பார்க்க வேண்டுமா?
இது குறித்து இலங்கை மண்ணில் வாழும் பொருளாதார வல்லுநர்கள் என்ன
சொல்கிறார்கள்?
தங்கள் இருத்தலுக்கான நித்தமும் நடக்கும் போராட்டத்தில் வீட்டில்
உடைக்கப்பட்ட கதவுகளும் திருடப்பட்ட வளங்களும் பற்றி யோசிக்கவும்
முடியாத நிலைதான் என்று இப்போதைக்கு சமாதானம் சொல்லிக் கொள்வது
மட்டுமே அதிபுத்திசாலித்தனம் என்று விட்டுவிடலாமா!




Friday, May 22, 2015

திருக்குறள் தமிழ்நூல் என்றால் தமிழ்நாட்டில் தண்டனை???




சென்னை, தியாகராய நகரில் (மேட்லி தெருவில் காவல் நிலையம் அருகில்) உள்ளது  சிரீ சங்கர்லால் சுந்தர்பாய் சாசன்  சமணர்(செயின்) பெண்கள் கல்லூரி. இக்கல்லூரியில் 21.02.2015 அன்று நடைபெற்ற  கருணா பன்னாட்டுக் கலைவிழா என நடைபெற்ற விழாவில்,  ஒரு மாணவி  திருவள்ளுவர் திருக்குறளைச் சமணநூல் ஒன்றில் இருந்து மொழிபெயர்த்து எழுதியுள்ளார் எனப் பேசியுள்ளார். இதைக் கேட்டதும் கல்லூரி ஆட்சிக்குழுவினரும் முதல்வர் முதலான ஆசிரியர் கூட்டமும் கைதட்டி வரவேற்பு தெரிவித்ததும் மாணவர்களும்  கைதட்டி வரவேற்றுள்ளனர். ஆனால், பிரிதிவி என்னும் ஒரு மாணவி இதகை் கேட்டதும் அதிர்ச்சியுற்றார்.
திருக்குறளை மற்றொன்று மொழி பெயர்ப்பு நூல்  என்று  தவறாகச் சொன்னதும் உடனே மறுத்துள்ளார். ஆனால், இவரது மறுப்பைக் கல்லூரிக் குழுவினர் பொருட்படுத்தவில்லை. இவர் தகவல் தொடர்பியல் துறையின் இரண்டாமாண்டு மாணவி. கல்லூரியின் பெரும்பாலான கணிணி சார்ந்த வேலைகளையும் ஒளிப்பட வேலைகளையும் இவரின் திறமையால் இவரிடமே கல்லூரி ஒப்படைத்திருந்தது. அந்த வகையில் அந்த விழாவின் ஒளிப்படக் கலைஞராகப் படம் எடுத்துக் கொண்டிருந்தார். எனவே, தன் எதிர்ப்பைக்  காட்டாவிட்டால், தான் திருக்குறளைப்பயின்று பயனில்லை என ஒளிப்படம் எடுக்கும் வேலையை விட்டுவிட்டு விழா அரங்கிலிருந்து வெளியேறிவிட்டார்.
தங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த மாணவி கல்லூரியில் இருந்தால் நல்லது  அல்ல என்ற முடிவிற்கு வந்த கல்லூரியினர்,  எவ்வாறு கல்லூரியில் இருந்து நீக்குவது என எண்ணியுள்ளனர்.  எனவே, பிற மாணவிகள்  மூலம் மாணவி பிரிதிவிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இம்மாணவியையும் இவரின் தாயாரையும் ஒரு மாணவி தகாச் சொற்களால் ஏசியுள்ளார். இது தொடர்பில் வருமாறு 11.3.15 அன்று அழைத்து மாணவி பிரிதிவியிடம் அப்பெண்ணை அடித்ததாகக் கூறியுள்ளனர்; இவரிடம் மன்னிப்பு கேட்குமாறு தெரிவித்துள்ளனர்.  திருக்குறளைப்பற்றிய தவறான கருத்திற்குத்தான் எதிர்ப்பு தெரிவித்தது உண்மைதான் என்று கூறி, அதற்காகவும் அடிக்காததற்காகவும் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். உண்மையிலேயே திட்டிய மாணவிமீது, அவ்வாறு திட்டியதை ஒப்புக்கொள்ளும் கல்லூரியினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அடித்ததாகப் பொய்யான குற்றம் சுமத்தி  ஏற்கெனவே ஆயத்தமாக வைத்திருந்த இடை நீக்க ஆணையை அளித்துள்ளனர். அதற்கு அடுத்த இரு நாளில் முழுமையாகக் கல்லூரியில் இருந்து நீக்கித் தேர்வு எழுத முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
விண் தொலைக்காட்சி  வைகாசி 05, 2046 / 19.05.15 செவ்வாயன்று, நீதிக்காக  நிகழ்ச்சி மூலம் இதனை மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. விண் தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சி நடத்துநர் திரு துரைபாரதிக்கும் ஏற்பாட்டாளர் திரு மோனிசு கண்ணனுக்கும் தமிழ் உள்ளங்களின் சார்பில் நன்றி. எனக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று  இதன் மூலம், திருவள்ளுவர் தமிழர்க்காகத் தமிழில் எழுதிய நூலே திருக்குறள் என்பதையும்  இன்பத்துப்பால் எனத் தனியே இல்லற இன்பம் குறித்து உலகப்புலவர் திருவள்ளுவர் கூறியுள்ளதால், சமணச்சார்பில்லை என்பதையும் விளக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது என்று தமிழ் உலகம் மடலாற் குழுவில் பதிவு செய்திருக்கிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.

திருக்குறள் சமணநூல் என்று சொல்ல சமணக்கல்லூரிக்கும் அந்த மாணவிக்கும் இருக்கும் உரிமையை நான் மறுக்கவில்லை. இம்மாதிரியான கருத்துகள் திருக்குறளுக்கோ தமிழ் ஆய்வு உலகிற்கோ புதிதல்ல. ஆனால் 'திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலல்ல, அது தமிழன் எழுதிய தமிழர் வாழ்வியல் நூல் " என்று சொல்லவும் வாதிடவும்  பிரிதிவிக்கு அதைவிட அதிக உரிமை இருக்கிறது. அந்த உரிமையை மீது தன் அதிகாரத்தைக் காட்டும் கல்லூரியையும் கல்லூரி நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன். 
கல்லூரியைத்  தொடர்பு கொண்டு (044 - 2432 8506 / 2432 8507 ; 044 - 4286 8246 / 4286 8247)  கண்டனம் தெரிவித்து, மாணவியை மீளச் சேர்க்கவும் தேர்வு எழுதச் செய்யவும் வற்புறுத்துங்கள்.

சரி.. தேடுங்கள்..இப்போது

எங்கே போனார்கள்  நம் தமிழினக்காவலர்கள்?

Monday, May 18, 2015

போய்விடு அருணா


அருணா ...
நீ இன்று விடைபெறுகிறாய்..
நியாயங்களை எந்தப்பெண்ணும்
பேசக்கூடாது என்று சொல்லும் நம் சமூகத்தில்
வாழ்வது கூட ஒவ்வொரு நாட்களும்
பெரிய தண்டனைதான்.
அந்த தண்டனையிலிருந்து
உன்னை விடுவிக்கும்
உன் மரணம் அழகானது.
போய் விடு அருணா..
போய்விடு..
உன் கடைசிப்பயணத்தில்
இந்த நாள் வரை
காயப்பட்ட உன் பெண்ணுடலில்
தன்னைக் கண்டு
ஒரு நாள் அல்ல... ஒரு மாதம் அல்ல..
ஓராண்டும் அல்ல.. 42 வருடங்கள்
படுக்கையில் இருந்த அந்தப்பெண்ணுடலை
தன்னுடலாக கவனித்த
மருத்துவமனை செவிலியர் அனைவரையும்..
அவள் சார்பாக..
உங்கள் கைகளைப் ப்டித்து முத்தமிட்டு
நன்றி சொல்லுகிறேன்..
நம் தோழி.., அருணா ..
தன்  கடைசிப்பயணத்தில் கேட்கிறாள்..
முகம் தெரியாத அருணாக்களுக்காக
நம்மைப் போராட சொல்லி..
..
தெரியாமல் எத்தனையோ அருணாக்கள் ஓர்மையின் அடர்ந்த பனிமலையில் மயங்கி கிடக்கிறார்களோ...? என்ற என் தோழி மீரா நிறம் அவர்களின் வரிகளுடன்..

அருணா குறித்த என் பதிவுகள்:

http://puthiyamaadhavi.blogspot.in/2011/03/blog-post_03.html



http://puthiyamaadhavi.blogspot.in/2010/08/blog-post_05.html


Saturday, May 16, 2015

நாளையும் நான் வாழவேண்டும்




யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை
குண்டுமழைக் குளிப்பில்
குருதியுறைந்த வீதிகளில்
நிணவாடை கலந்த சுவாசிப்புகளில்
வெறுப்படைகிறேன்.

குண்டுகளின் அதிர்வோசை
கேட்காத ஒரு தேசத்தை
இங்கே தேடுகிறேன்.
வெறிச்சோடிப் போன வீதிகளிலும்
முட்புதர் படர்ந்த வயல்களிலும்
மீண்டும் குதூகலம் கொப்பளிக்க
ஒரு மயானத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட
மகிழ்வோடு பூரிக்கும்
என் தேசத்தைத் தேடி
கால்கள் விரைகின்றன.

நான் இன்னமும் மரணிக்கவில்லை
எப்பொழுதும்..
- போராளி அம்புலி.

அம்மா ..
இன்று நான் உன்னிடம் வந்தபோது
வீட்டு முற்றத்தில் பதிந்த என்
பாதச்சுவடுகளை
பாதுகாத்து வை.
நாளை நான் வருவேன் என்பது
என்ன நிச்சயம்?
 -போராளி ரூபி மார்க்கிரட் - 1992)

அழகிய மன்னம்பேரி
அவள் ஒரு போராளி
அவளை அவர்கள் பிடித்தனர்
ஒரு அழகி என்பதால்
அவளிடம் ரகசியங்கள் இருந்ததால்
அவளை அவர்கள் சிதைத்தனர்
நிர்வாணமாக குறையுயிராக
தெருவிலே விட்டுச்சென்றனர்..
அழகிய மன்னம்பேரி
ஆனால் அவளைப் போல
அவளது மரணம் அழகானதேயல்ல..

(எழுதியவர் பெயர் தெரியவில்லை. 31/10/96 செம்மணி புதைகுழி
துண்டுப்பிரசுரத்தில் இடம் பெற்ற கவிதை)

"எழுதுங்களேன்
நான் எழுதாது செல்லும்
என் கவிதையை எழுதுங்களேன்"

-கேப்டன் வானதி(யின் கடைசி வரிகள்)

எழுதாத உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது.
உனக்கான அஞ்சலியாய் ..
போராளிகளே..
நீங்கள் எப்போதும் மரணிக்கவில்லை.



Tuesday, May 5, 2015

மலையகத்தின் முதல் தொழிற்சங்க பெண் அரசியல்வாதி





(புகைப்படத்தில் பார்வையாளர் வரிசையில் விவாதத்தில் சரஸ்வதி சிவகுரு)

இலங்கை மலையகத்தில் கடந்த ஏப் 25 மற்றும் 26ல் நடந்த
பெண்ணிய சந்திப்பு & பெண்ணிய உரையாடல் கருத்தரங்க நிகழ்வில்  சிலர்  என்னை ஆச்சரியப்படுத்திவிட்டார்கள்.
ஒரு சிலரில் சில நடவடிக்கைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் அதிர்ச்சி தருவதாகவும் வருத்தமளிப்தாகவும் இருந்ததும் உண்மைதான். வருத்தப்பட்ட விடயங்களைப் பற்றி பேசுவதில் பலனில்லை. எனவே என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு பெண்மணியைப் பற்றி முதலில் பேசலாம் என்று நினைக்கிறேன்.
அப்பெண்மணி ஒர் அரசியல்வாதி என்பதால் என் கவனத்திற்கான காரணமாகவும் இருந்திருக்கலாம்.
அவர் பெயர் சரஸ்வதி சிவகுரு.

தோட்டத்தொழிலாளியின் மகளாக முதல் பெண்  மகாணசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சரஸ்வதி சிவகுரு தேசிய தொழிற்சங்க அரசியல் வரலாற்றில் முதல் பெண் அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர். இன்று இலங்கையை ஆளும் மைத்திரி அரசுக்கு ஆதரவு கொடுக்கும் அரசியல் நிலைப்பாட்டில் இருக்கும் ஓர் ஆளும்கட்சியின் அரசியல்வாதி என்பது இன்னும் கூடுதல் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

இரண்டு நாட்கள் நிகழ்விலும் அவர் பார்வையாளராக மட்டுமே அமர்ந்திருந்தார். மலையகம்  குறித்த கருத்தரங்க  விவாதங்களில் காத்திரமான பங்களிப்பையும் செய்தார். ஆதாரங்களுடன் தன் செய்திகளைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினார். எவ்வித உணர்ச்சி அரசியலையும் அவர் நடத்தவில்லை. மொத்தத்தில் ரொம்பவும் எளிமையானவராகவும் அதனாலெயே இனிமையானவாரகவும் காட்சி அளித்தார்.
ஓர் அரசியல்வாதி, அதுவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகாண சபை உறுப்பினர், நுவரோலி மலையகப்பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. எவ்வித ஆடம்பரமோ விளம்பரமோ
காட்டாமல்  பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார்.
நிகழ்வில் எந்த ஒரு அமர்விலும் அவர் தலைமை ஏற்கவும் இல்லை.
அரசியல்வாதி தலைமை ஏற்றால் இக்கருத்தரங்கிற்கு அரசியல் முலாம் பூசப்பட்டுவிடும் அபாயம் ஏற்பட்டுவிடலாம் என்பதால்
அதுவும் தவிர்க்கப்பட்டிருந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்பொதுதான் நம் ஊர் அரசியல்வாதிகள் நினைவுக்கு வந்தார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவரை விடுங்கள்.. அரசியல் கட்சியின் மாவட்டம், வட்டங்கள் கூட எப்படி எல்லாம் அலட்டுவார்கள் .. இம்மாதிரி எல்லாம் ஒரு கருத்தரங்க நிகழ்வில் ஒரு அரசியல் பிரபலம்  கூட்டத்தில் உட்கார்ந்து நிகழ்வைக் கேட்டுக்கொண்டு இருப்பார் என்பதை எவராலும் கற்பனை செய்ய முடியுமா???!!!

எனக்கு சரஸ்வதி சிவகுரு அவர்களின் அரசியல் நிலைப்பாடு, அவர் சார்ந்த அரசியல் கட்சியின் வாக்குறுதிகள், இலட்சியங்கள் இவை
எல்லாம் ஓரளவு தான் தெரியும். அதுவும் தினகரன், தினக்குரல் உபயம்.. அவ்வளவுதான். ஆனால் அப்பெண்மணி இக்கருத்தரங்கில் கலந்துகொண்டதும் அப்போதைய அவர் செயல்பாடுகளும் என்னை வியப்பில் ஆழ்த்தின.
சரஸ்வதி சிவகுரு அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பேசியது நினைவுக்கு வருகிறது.
"தோட்டத்தொழிலாளியின் மகளாக முதலாவது பெண் பிரதிநிதியாக மகாண சபையில் அங்கம் வகிக்க கிடைத்தமை பெரும்பாக்கியமாகும். எனது வெற்றி உழைக்கும் பெருந்தோட்டப் பெண்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். எனக்காக வாக்களித்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மலையகப் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள், ஆசிரியைகள், ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரியும் யுவதிகள் போன்ற பெண்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்துவேன்"
இது வெறும் நன்றி சொல்லும் அரசியல்வாதியின் அறிக்கையாக இல்லாமல் மலையக அரசியல் வாழ்வில் அதிலும் குறிப்பாக பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு பயணமாக உங்கள் அரசியல் வாழ்வு இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்..

இலங்கை மகாண சபை குறித்த விவரங்கள்:
 இலங்கையில் மாகாண சபைகள் (Provincial Councils) என்பது இலங்கை மாகாணங்களுக்கான சட்டவாக்க அவைஆகும்.[1] இலங்கை அரசியலமைப்பின் படி, மாகாண சபை ஆனது குறிப்பிட்ட மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் மத்திய அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. மாகாண சபைக்கு தேர்தல்மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
1987 சூலை 29 இல் கையெழுத்திடப்பட்டஇலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்  (rajiv- JR Jeyawardana) படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[2] 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.
மாகாண சபைகள் அமைக்கப்பதற்கான நோக்கம் என்னவென இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் முகவுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

1.    இலங்கையின் இறைமையையும், தன்னாதிக்கத்தையும் ஒற்றை ஆட்சியையும் பாதுகாப்பதற்காகவும்,

2.    இலங்கையில் பல்லின மக்கள்  வாழும் நாடாதலாலும், பல மொழி பேசும் ஒரு நாடாக ஏற்றுக் கொள்வதாலும்,

3.    பல்லின மக்கள் வாழ்வதால் அவ்வவ் இனத்திற்கு வெவ்வேறான மொழி, கலாசாரம், என்பன உண்டு என்பதை அங்கீகரிப்பதாலும்,

4.    தமிழ் மொழி பேசுபவர்கள் இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒன்றாகக் கலந்து வசிப்பதுடன், வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக வசிப்பதால் அவ்வடக்கு கிழக்கு அவர்களது பூர்வீக பூமி என ஏற்றுக் கொள்வதாலும்,

5.    இலங்கை சுதந்திரமும், இறைமையும் தன்னாஅதிக்கமும் கொண்ட ஒற்றையாட்சி என்பதாலும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியிருப்பதாலும்,
மாகாண சபைகள் அமைப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது)

மலையக அரசியல் குறித்த விவரங்களுக்கு: