Saturday, August 7, 2010

நன்றி சொல்லும் தருணம்


மும்பையின் ஜனநெரிசலில் கரைந்துப் போகாமல்
பிரமாண்டங்களின் வெளிச்சத்தில் சோர்ந்துப் போகாமல்
எப்போதும் என்னுடன் கை கோத்து பயணம் செய்கிறது
என் எழுத்தும் எழுத்து எனக்குத் தந்த நட்பு வட்டமும்.

எப்போதும் உணர்கிறேன்
நன்றி என்ற சொல்லின் போதாமையை ...

மழைப்பொழியும் மாலையில்
சூடானத் தேநீருடன் உங்கள் முகம் பார்த்துப் பேசாமல்..

எப்படி இருக்கிறாய்.. நலமா.. என்பதை மவுனமாய்
உள்ளங்கை அழுந்த ஒரு கைகுலுக்கலில் கேட்காமல்..-

அடடே ஹைக்கூ என்று சொல்லியிருக்கக் கூடாதா?
நான் விடுகதையாக்கும் என்றல்லவா நினைத்தேன்
என்று பொய்முகம் காட்டிச் சிரிக்காமல் -

ஸ்நேகம் வளர்க்கும் புன்னகை மலர்களைப்
பரிமாறிக்கொள்ளாமல்...

தமிழ்மணம் நிர்வாகிகள்,
வாசித்தவர்கள்,
வாசித்துப் பின்னூட்டம் எழுதியவர்கள்/ எழுதப் போகிறவர்கள்
வாசிக்காதவர்கள்/ இனி வாசிக்க இருப்பவர்கள்..
அனைவருக்கும்
அரபிக்கடலோரமிருந்து .
"நன்றி"
என்ற ஒற்றை வார்த்தையில் விடைபெறும் தருணத்தில்
உருதுக்கவிஞர் தருன்நும் ரியாஷின் "பழைய புத்தகம்"
கவிதை வரிகளை மீண்டும் வாசிக்கிறேன்.

புதிய ஒளி,
புரியாதச் சுவை
அறிமுகமில்லாத அறிமுகம்
இன்னும் தெரியவில்லை
நீ யாரென்று!
ஆனாலும்
இனிய நினைவுகள் மட்டும்
பழையப் புத்தகத்தின்
வாசனையைப் போல
என் உள்ளத்தில்.

லேட்டஸ்ட் கணபதி புராணக்கதை


கண்பதி பப்பா மோரியா
மோரியாரே பப்பா மோரியாரே
கண்பதி பப்பா மோரியா..
புடுச்சா வருஷி லவுக்கரியா
கண்பதி பப்பா மோரியா..

எங்கள் ஊரு கணபதி திருவிழாவுக்கும் ரெடி ஆகிக்கொண்டிருக்கிறது.
கணபதி விழா என்பது எங்கள் ஊரு மக்களுக்கு பக்திக்கு அப்பாற்பட்ட
கொண்டாட்டங்களின் உற்சவம்.
கணபதி திருவுருவச்சிலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
தொன்மங்களின் அடையாளமாய், புராணக்கதைகளின் ஊடாகப்
பயணித்து கணபதியின் வாகனமான எலி கணினியின் மவுசாகி
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நடுவில் எங்கள் கணபதி
இப்போதெல்லாம் காட்சித்தர ஆரம்பித்திருக்கிறார்.
கணபதி சிலைகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணமும்
கற்பனையும் ஒவ்வொரு வருடமும் கண்கொள்ளாக் காட்சியாக...
விரிகிறது.

இந்தக் கலைஞர்கள் உருவாக்கிய கணபதி சிலைகள் இறுதியில்
தண்ணீரில் கரைக்கப்படுகின்றன.
அவர்கள் பார்த்து பார்த்து உருவாக்கிய சிலை, கற்பனையை
விரித்து அவர்கள் படைத்த வண்ணங்களின் கலவை...
10 நாட்களுக்குப் பின் ... தண்ணீருடன் கலந்துவிடுகிறது.
இந்தக் காட்சி அவர்களுக்கு என்ன மாதிரியான மனநிலையைக்
கொடுக்கும்?
கணபதி சிலையைக் கரைக்கும் இடத்தில் தான் உருவாக்கிய சிலை
தண்ணீரில் கரைந்து போவதைப் பார்த்துவிட்டு வந்து கண்ணீருடன்
அந்தக் கலைஞன் படுத்திருக்கிறான்
...
வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை!

*
சொர்க்கலோகம் அவன் கனவில் காட்சியாக...
கலைஞர்கள் சோமபானம் அதிகம் பருகி.. உண்மையை
உலறிக்கொண்டிருக்கிறார்கள்..
வருகிறார் நாரதர்..
பேச்சு வார்த்தை வளர்கிறது..
உங்கள் கடவுளுக்கே மண்ணுலகில் வாழ்க்கைக் கொடுத்தது
எங்கள் கைகள்.
இந்தக் கலைஞர்கள் இல்லை என்றால்...
சிலைகள் ஏது? சிற்பங்கள் ஏது? ஓவியங்கள் ஏது?
இதெல்லாம் இல்லாமல் கோவில்கள் ஏது?
என்று கேட்கிறார்கள்.
விடுவாரா... நாரதர்.. அப்படியே பிரம்மா, விஷ்ணு, சிவனிடம் போய்
கலைஞர்கள் உலறியதை எல்லாம் தன் பங்குக்கு இன்னும் கொஞ்சம்
அதிகம் கலந்து காதில் போட்டு வைக்கிறார்.

விளைவு: கலைஞர்கள் மீண்டும் மண்ணுலகில் பிறக்கிறார்கள்!
அவர்கள் கைகள் படைக்கும் கலைப்படைப்புகள்
11 நாட்களுக்குள் தண்ணீரில் கரைக்கப்பட்டுவிடும் என்பதுதான் சாபம்!
கடவுள்களின் கூட்டணி சேர்ந்து ,
"உங்கள் கண்முன்னாலேயே உங்கள் படைப்புகள் அழியும், கரைந்துவிடும்.
ஆனால் நாங்கள் அழிவதில்லை.. கரைவதில்லை" என்று பாடம்
புகட்ட விரும்பினார்கள்!
இதில் ஒரு சிக்கல் வந்தது. யாருக்கு சிலை வடிக்கலாம் என்று?
வருடா வருடம் தண்ணீரில் கரைந்துவிட்டால் நம் கதி என்னவாகும்?
என்று மற்ற கடவுளர்கள் எல்லாம் தங்களுக்குச் சிலைகள் வேண்டாம்
என்று ஒதுங்கி விடுகிறார்கள். கண்பதி மட்டும் இந்த ரிஸ்க் எடுக்கிறார்.
அதில் ஜெயித்துவிடுகிறார். கணபதி இந்த ரிஸ்க் எடுக்கும் போது
'உன்னால் முடியும் கண்பதி... ஒவ்வொரு வருடமும் உன்னை
இந்த மண் வழியனுப்பினாலும் அடுத்த வருடமும் நீ வரவேண்டும்
என்று சொல்லித்தான் வழியனுப்புவார்கள் என்று ஊக்கம் கொடுத்த
கண்பதியின் தாயார் பார்வதிதேவிக்கும் தசராவில் இதே போல
தண்ணீரில் கரைக்கும் சடங்கு அதனால் தான் நடக்கிறது.
இதுதான் கண்பதி சிலையைக் கடலில்/நதியில்/ குளத்தில்
கரைக்கும் கதை..
*

கண்விழிக்கிறான் அந்தக் கலைஞன்.
10 நாட்களும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடிய
மக்கள் அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கண்பதி சிலை நல்ல விற்பனை!
வருகிற ஆண்டில் என்ன மாதிரி புது ஐடியாவில் கணபதி சிலையை
உருவாக்கலாம் என்று யோசித்துக் கொண்டே
அவன் கால்கள் வீட்டை நோக்கி நடக்கின்றன.

பி.கு: இந்தக் கதை எந்தப் புராணத்தில் ? என்று கேட்காதீர்கள்.
இனிமேல்தான் எந்தப் புராணத்தில் சேர்க்கலாம் என்பதைப்
பற்றி நான் யோசிக்க வேண்டும்.

நான் நீயானேன்


உண்ணாமல் உறங்காமல்
விரதங்கள் காத்தேன்.
கேட்டது கிடைக்க
உன்னைத் தேடி
உன் பாதங்கள் தேடி
ஓடிவந்தேன்.

கருவறையின் புழுக்கத்தில்
பக்தர்களின் பக்தி வியர்வையில்
என் குரல் அமுங்கிவிட்டது.
'தரிசனம்' முடிந்ததென்று
தள்ளிவிட்டார்கள்!

என் காலடியில்
'தாயே கருணைக்காட்டு"
உன் பிச்சையின் குரல்..
ஆத்மா... பரமாத்மா..
நான் நீயானேன்
நீ -
மீண்டும் சிலையானாய்.

Friday, August 6, 2010

எழுதாதக் கவிதை




அம்மா..
எங்கே போகிறாய்?
எனக்குத் தெரியும்
என்னை உன்னிலிருந்து
எடுத்து வீசப் போகிறாய்..

அம்மா..
எத்தனைக் கவிதைகள் எழுதியிருப்பாய்..?
என்னை மட்டும் ஏனம்மா
எழுத மறுக்கின்றாய்?

நான் உன் எழுத்தல்லவா
எனக்கு மட்டும் ஏன் உன் பக்கங்கள்
மூடிக் கொண்டன.?

எத்தனைச் சிந்தனைகளை
உன்னில் உருவாக்கி
மண்ணில் விதைக்கப் போராடுகிறாய்?
உன் உயிரணுவில்
கலந்துவிட்ட என்னை மட்டும்
ஏனம்மா..
கல்லறை இல்லாத கழிவறையில்
தள்ளுகின்றாய்..

அம்மா..
நான் உன் சிந்தனைத் துளி அல்லவா..
புரட்சியின் மனித ஆயுதமாக
என்னை மாற்ற வேண்டிய நீ...
மருத்துவச்சியின் கூராயுதங்களால்
என்னை வெடித்து
ரத்தப் பிண்டமாய்
ஏன் சிதறடிக்கப் போகிறாய்?

அம்மா..
இரண்டுக்கு மேல் வேண்டாம்
என்பதால் மட்டுமே
உன் முகம் காண
தடைச் சட்டமா?
உண்மையைச் சொல்..
இரண்டுக்கு மேல் வேண்டாம் என்றால்
ஏனம்மா நான் உன்
மகனா மகளா என
அறிந்துவிட துடித்தாய்?

என்னை அறியும்
சோதனைச் செய்யாமலேயே
என்னை நீ
கலைத்திருக்கலாம்..
அப்போது-
ரத்தப் பிண்டமாய்
சிதறும் போது மட்டும்தான்
வலித்திருக்கும்.
இப்போது..
அம்மா...
பிறப்பின் பிரபஞ்சமே வலிக்கிறது
உன் முகம் பார்க்கத் துடித்த
என் கவிதை
நீ வாசிக்காமலேயே
கிழிந்துப் போகிறது


தாய்ப் பார்க்காத முகம்
தமிழ்ப் படிக்காத எழுத்து
நீ எழுதாதக் கவிதை..
இதோ...
மரணத்தைக் கூட அனுபவிக்காத
வேதனையில்
மறைந்துவிட்டது..---

பெண்.>அதிகாரவெளி

ஒரு பிரச்சனையின்
இரண்டு முகங்கள்
-----------------------

கடந்தவாரம் தொலைக்காட்சியில் (ராஜ்/பொதிகை என்று நினைக்கிறேன்)
பெண்ணுரிமைக் குறித்தக் கருத்தரங்கம் நடந்துக் கொண்டிருந்தது.
பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், அரங்க மல்லிகா என்று
என் நட்பு வட்டத்தின் முகங்களைப் பார்த்தவுடன் அவர்கள்
கருத்துகளைக் கேட்கும் ஆர்வத்தில் உட்கார்ந்திருந்தேன்,

பெண் விடுதலை என்பது
"பெண் குறைந்தப்பட்சம் அவள் சார்ந்தப் பிரச்சனைகளுக்கு
அவளுக்கு இருக்கும் முடிவு எடுக்கும் அதிகாரவெளி" என்று
அடையாளப்படுத்தப் பட்டது. உண்மைதான்.
இந்தக் கருத்தின் உள்ளும் புறமும் பயணம் செய்யும் போது
' இந்த முடிவு எடுக்கும் அதிகாரம்' என்பதைப் பற்றிய
பல்வேறு முகங்களை நாம் பார்க்க முடியும்.

ஷாஜஹானைத் தன் அழகால் மட்டுமல்ல தன் அறிவுக்கூர்மையாலும்
மும்தாஜ் ஆட்சி செய்துக் கொண்டிருந்தாள் என்கிறார்கள்.
இன்றைக்கும் கூட அரசியல் தலைவர்களின் அதிகாரத்தை
தீர்மானிக்கும் "கிட்சன் கேபினெட்" பற்றி எழுத ஆரம்பித்தால்
மெகா தொடர் எழுதலாம்!
அக்காமார்கள் (தஞ்சை மராத்திய அரசில் தேவதாசிகள்)அரசனுக்கு வட்டிக்கு
கடன் கொடுத்த வரலாறு குறித்த ஆவணங்கள் தஞ்சை சரஸ்வதி
மஹால் நூலகத்தில் இருப்பதாகவும் அவர்களைப் பற்றி நான்
வாசித்து எழுத வேண்டும் என்றும் அழைக்கிறார் என் நண்பர் ஒருவர்.

பெண்களின் ஒரு பக்கம் இப்படி இருந்தால் இன்றைக்கும்
பெண்ணை மட்டும் மண்ணென்ணெய் ஊற்றி எரித்தச் செய்திகளால்
நிரம்பி வழிகிறது நம் நிகழ்காலம்.
இத்தனை எண்ணங்களும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது
வந்து அலைமோதிக்கொண்டிருந்தன..

அப்போதுதான் அந்த இரண்டு பெண்களின் கருத்தும்
என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது.
ஒருவர் தொழிலதிபராக தன்னை வளர்த்துக் கொண்ட பெண்.
தன் கணவர் இறந்தப் பின் தான் மறுமணம் செய்துக் கொண்டதையும்
அந்த மறுமணத்திற்கு ஆதரவாக இருந்தது மட்டுமல்ல,
மறுமணத்தின் தேவையை எனக்குப் புரிய வைத்தவர்களும் என்
பிள்ளைகள் தான் என பெருமையுடன் சொன்னார்.
அப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்தக் கம்பீரம்..
மகிழ்ச்சி..., அவர் வார்த்தைகளின் சத்தியத்தை வெளிச்சமிட்டது
என்று தான் சொல்ல வேண்டும்.

உடனே எதிர்முனையில் இருந்த இன்னொரு பெண் பேச ஆரம்பித்தார்.
"எனக்கும் மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தான். மறுமணத்தின்
தேவையை நான் உணர்ந்திருக்கிறேன்.
என்றாலும் என்னால் மறுமணம் செய்வதென்பது சாத்தியப்படாது" என்றார்.
'விருப்பம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்,
தேவையை ஆதரிக்கிறீர்கள்.. ஆனால் செய்து கொள்ள முடியாது ...
என்றால் உங்களுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லையா?'
என்ற கேள்வியை முதல் பெண்மணி கேட்கிறார்.
இவர் சொன்னார்...விரக்தியான ஒரு புன்னகையைத் தவளவிட்டு..

'உங்களுக்கு இருப்பது ஆண் மக்கள், எனக்கு இருப்பது பெண் மக்கள்..'
இவ்வளவு தான்..
அதற்கு மேல் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை விட்டு
நான் வெளியில் வந்துவிட்டேன்.
அந்த இரண்டாவது பெண்ணின் முகமும் கண்களும் அவர் சொன்னக்
காரணமும் இன்னும் என்னைத் துரத்துகிறது..


ஜெர்மன் கல்சுருகியில் தோழி தேவா ஹெரால்ட் இல்லத்தில் தங்கி
இருந்தப்போது இதே விசயத்தைப் பற்றிப் பேசிய நினைவு வருகிறது.
ஜெர்மனியில் குடும்பநல வழக்குகளில் தமிழ்-ஜெர்மன்
மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார் தேவா
புலம்பெயர்ந்தப் பெண்கள் சிலரின் மறுமணத்தில் அப்பெண்களின்
மூத்தக் கணவருக்குப் பிறந்தப் பெண்குழந்தைகள் அனுபவிக்கும்
பாலியல் கொடுமைகளைப் பகிர்ந்து கொண்டார்.
கணவன், தன் குழந்தைகள் என்று இருவருக்கும் நடுவில் மறுமணம்
செய்து கொண்ட அந்தப் பெண்கள் அனுபவிக்கும் மன உறுத்தல்
வல்லாங்கை விட கொடுமையானது.

முடிவு எடுக்கும் அதிகாரத்தைப் பெறும் வழித்தடத்தை
யார் தீர்மானிக்கிறார்கள்?
பெண் என்பவள் அவள் மட்டும்தானா?

அவளைச் சுற்றி எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்
கோள்களின் விசையே அவள் விசையைத் தீர்மானிக்கிறதா?

Thursday, August 5, 2010

CERI SHORT CLIPS

இந்தியாவில் மக்களாட்சியா..?!!



what is democracy?
the word democracy is two words of Greek - demo + kratein
demo means the people.
kratein means to rule.

Democracy - மக்களாட்சி.
one man one vote இந்தியாவின் மிகச்சிறந்த மனித உரிமையாக மதிக்கப்படுகிறது.
உலக நாடுகளில் மிகச்சிறந்த, மிகப்பெரிய மக்களாட்சி அடையாளத்தை
எப்போதும் பெருமையுடன் கீரிடமாக அணிந்து வலம் வருகிறது இந்தியா.

அதிக வாக்குகள் பெற்றவரே வெற்றி பெற்று நாடாளுமன்றம்
செல்வது சரிதானே என்று மேம்போக்காக வெற்றி/தோல்வி குறித்த
கருத்துகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு இந்தியாவின் மக்களாட்சி
மகத்துவமானதாகத் தெரியும். தெரிகிறது! ஆனால் இந்த வெற்றி/தோல்வியின்
உள்ளீடுகளைப் பார்த்தால் இந்திய மக்களாட்சியின் சாயம் வெளுத்துப் போகும்.

உதாரணமாக ஒரு தொகுதியில் ஒரு இலட்சம் வாக்களர்கள் இருப்பதாக
வைத்துக் கொள்வோம்.ன் அதிகமாக வாக்குப்பதிவு பெற்ற தொகுதியாக
கற்பனைச் செய்து கொண்டு 70% ஓட்டுப் பதிவு என்று கணக்கில் வைத்துக்
கொண்டாலும்

காங்கிரசு + திமுக கூட்டணி - 20,000
பி.ஜே.பி கூட்டணி - 15,000
அதிமுக கூட்டணி - 18,000
தேதிமுக +இதரக்கட்சி - 12,000
சுயேட்சை +
செல்லாத ஓட்டுகள் - 5,000

மொத்தம் பதிவான ஓட்டுகள் - 70,000


ஒரு இலட்சம் வாக்குகள் உள்ள தொகுதியில் ஓட்டுப்போடாத 30,000
தவிர்த்து ஓட்டுப் போட்டவர்களில் வெறும் 20,000 பேர் தேர்ந்தெடுத்த
வேட்பாளர் மீதி 50,000 வாக்காளர்களின் ஒப்புதலின்றி அந்தத் தொகுதியின்
வேட்பாளராக நாடாளுமன்றமோ/சட்டசபையோ செல்லுகிறார்.
இந்த 50000 வாக்காளர்களும் இந்த வெற்றி பெற்றவரை ஏற்றுக்கொள்ளவில்லை
அல்லது அவர் தகுதியானவரல்ல என்று தீர்மானித்தார்கள்.

பெரும்பான்மையால் தகுதியற்றவராக தீர்மானிக்கப்பட்ட ஒருவர்
வெற்றி பெற்று தகுதியானவராக ஆக்கப்படுகிறார் என்றால்
இந்த தேர்தல் முறை எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்
?

இவரும் இவரைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும்தான்
இந்தியாவை ஆளும் மக்களாட்சி.
இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சியாளர்கள்.
இது எவ்வளவு கேலிக்கூத்து?
இது மக்களாட்சிதானா?
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ! என்றெல்லாம் நாம் அடிக்கடி சொல்லிக்கொள்கிறோமே..
இதெல்லாம் எவ்வளவு கடைந்தெடுத்தக் காலித்தனமான
ஏமாற்று வித்தை..
மேலே சொல்லியிருக்கும் எடுத்துக்காட்டு ஒரு கற்பனை அல்ல.,
இதோ சில உண்மையான புள்ளிவிவரங்கள்:

*இன்றைக்கு ஆளும் காங்கிரசு பெற்ற மொத்த வாக்குகள் 28.6% .
இது 2004ல் காங்கிரசு பெற்ற வாக்குகளை விட 2% அதிகம்.
அவ்வளவுதான்.

* பீகாரில் நாவ்டா பார்லிமெண்ட் தொகுதியில் வெற்றி பெற்ற
பி.ஜே.பி வேட்பாளார் போலாசிங் பெற்ற வாக்குகள் வெறும் 10% தான்.

*முரளி மனோகர் ஜோஷி, லால்ஜி தாண்டன், குக்கும்தேவ் நாராயண்
சல்மான் குர்ஷித், பரூக் அப்துல்லா ஆகியோர் வெற்றி பெற்றது 1/8 வாக்குகள் மூலம்தான்.

* மீராகுமார் பெற்ற வாக்குகள் 1/8

* 50% வாக்குகள் பெற்று நாடளுமன்றம் வந்திருப்பவர்கள் மொத்தமே 5 பேர்தான்
நாகாலந்து, சிக்கிம், வங்காளம் தாலா ஒருவரும் திரிபுராவிலிருந்து 2 பேரும்.

* 145/573 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20%க்கும் குறைவாக ஓட்டுகள் பெற்று
நாடாளுமன்றம் வந்தவர்கள்.

அப்படியானால் 20 அல்லது 30 விழுக்காடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
மீதி 80 அல்லது 70 விழுக்காடு மக்களையும் சேர்த்தே ஆட்சி செய்கிறார்கள்
மக்களாட்சி என்ற பெயரால்!.

*
அடிக்கடி தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம் நம் அரசியல்
தலைவர்கள் சில உண்மைகளை உதிர்ப்பார்கள்...
"நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என்று நினைக்காதீர்கள்.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் நாங்கள் பெற்ற வாக்குகள் அதிகம்
என்ற உண்மை மக்களிடம் எங்களுக்கிருக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது"
இத்தியாதி வசனங்கள் எழுதப்படும்.

நம் அரசியல் தலைவர்கள் சொல்வதில் எதில் உண்மையிருக்கிறதோ இல்லையோ
இது மட்டும் உண்மைதான்
!!

- 2001ல் தமிழ்நாட்டில் அதிமுகவும் திமுகாவும் பெற்ற வாக்குகள் 31%.
ஆனால் திமுக வெற்றி பெற்ற இடங்கள் 31, அதிமுக பெற்ற இடங்கள் 132.
எனவே அதிமுக ஆட்சி.

- 2006ல் திமுக பெற்ற வாக்குகள் 26.5%, - வெற்றி பெற்றது 96 இடங்கள்
ஆனால் அதிமுக பெற்ற வாக்குகள் 32.6% -வெற்றி பெற்றது 61 இடங்கள்.

மக்களாட்சி என்ற பெயரால் -
யாரை நாம் ஏமாற்றுகிறோம்?
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா?
நம் தேர்தல் முறையை நாம் உண்மையாகவே மக்களாட்சிக்கு மிகவும்
நெருக்கமான முடிவுகளைத் தரும் தேர்தல் முறையாக மாற்ற வேண்டிய
தருணம் வந்துவிட்டது.

(தகவல்கள்: M C RAJ, CERI)


http://www.youtube.com/watch?v=raP1kbQ5uZA

உண்மையின் ஊர்வலங்கள்

உண்மையின் ஊர்வலங்கள்
++++++++++++++++++++++ தொடர்

ஊர்வலம் 2
----------->>



(அருணாவின் புகைப்படம்)

37 வருடங்களுக்கு முன்பு நடந்த அருணாவின் சோகக்கதை.
வழக்கம்போல டைம்ஸ் ஆ·ப் இந்தியா ஞாயிறு மலரைப் புரட்டிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி புகைப்படத்துடன்.(written by Pinki Virani, a columnist.)

இப்போதும் அந்தச் செய்தியின் தாக்கத்தையும் அந்தச் செய்தி தந்த மனவுளைச்சலையும் தாண்டி வரமுடியவில்லை.
எப்போதாவது அருணாவின் நினைப்பு வரும். அப்போதெல்லாம் அவள் இன்னும்
இருக்கிறாளா என்பதை அறிய மனம் விரும்பும். அதே நேரத்தில் அவள் இன்னும்
உயிருடம் இருக்கக்கூடாது என்று உள்மனம் மவுனத்தில் அழும். அப்போதெல்லாம்
உடைந்து போகும் வாழ்வின் நியாயங்களும் தர்மச் சிந்தனைகளும்.

கர்நாடக மாநிலத்தின் ஹல்திபூரிலிருந்து வந்த எத்தனையோ நர்ஸ்களைப்போலவேதான் அவளும் மும்பை மண்ணில் கனவுகளுடன் கால் வைத்தாள். அவள் விரும்பியது போலவே மும்பையின் புகழ்பெற்ற கே.இ.எம்
மருத்துவமனையில் வேலை கிடைத்தது.(King Edward VII memorial hospital). மருத்துவமனையிலிருக்கும் ஆய்வுக்கூடத்தில் அருணாவுக்கு வேலை.
அந்த ஆய்வுக்கூடத்தில் நாய்கள் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அந்த நாய்களுக்குரிய உணவு வகைகளையும் பாலையும் திருடிக்கொண்டிருந்தான் அங்கே வார்ட் பா·யாக வேலைப்பார்க்கும்
சோகன்லால் பாரத வால்மீகி. அவனைப் பலமுறை கண்டித்துப் பார்த்தாள்
அருணா. அவனோ அவளை அதனாலேயே பழிவாங்கத் துடித்தான்.

தான் விரும்பிய டாக்டருடன் திருமணம் செய்ய இருக்கும் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருந்த அருணா எப்போதும் சோகன்லாலைப் பற்றியும் அவன் பலமுறை
அவளை ஏதாவது சிக்கலில் மாட்டிவிட முயற்சி செய்வது பற்றியும் சொன்னாள்.
அப்போதெல்லாம் "அவனை எதுவும் கண்டு கொள்ளாதே!" என்று டாக்டர் அவளுக்குச் சொல்லியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கண்முன்னால் நடக்கிற திருட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது அந்த திருட்டுக்கு
தானும் உடந்தையாக இருப்பதாகத்தானே அர்த்தம் என்று நினைத்தாள்.
அன்றும் அப்படித்தான்.. சோகன்லால் கையும் களவுமாக அவளிடம் பிடிபட்டுவிட்டான். எப்படியும் அவள் மேலதிகாரிகளிடம் முறையிடுவாள் என்பதை
அவன் அறிவான். வெறி நாயாக அவன் அவள் பின்னால் மோப்பம் பிடித்து
அலைந்து கொண்டிருந்தான்.

அன்று 27 நவம்பர் 1973..மாலை மணி 4.50 இருக்கும் மருத்துவமனையின் பேஸ்மெண்ட் பகுதியில் அவள் தன் நர்ஸ் உடைகளைக் களைந்து லாண்டரியிலிருந்து சலவை செய்து வந்திருக்கும் ராணிபிங்க் கலர் புடவையை மாற்றிக்கொண்டிருந்தாள். உடைந்த மரச்சாமான்களும் கோப்புகளும் அடைந்து கிடக்கும் இருண்ட அறையில் அவளுக்கு முன்பே அவன் நுழைந்து அந்த இருட்டில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
தன் காக்கி கலர் பேண்ட் பாக்கெட்டிலிருந்து நாய்களின் கழுத்தில் மாட்டும் இரும்பு செயினை உருவி எடுத்து அவள் கழுத்தை நெருக்கினான்.
திடகாத்திரமான சோகன்லாலின் உடல் அவள் மெல்லிய உடலைத் தின்று
தன் மிருகப்பசியைத் தீர்த்துக்கொண்டது. அந்தப் போராட்டத்தில் அவன் வலது
கன்னத்தில் மூன்று முறை பலம் கொண்ட மட்டும் கடித்து அந்த நாயை விரட்ட
அருணா போராடிய போராட்டம் நடந்தது. அந்த நாய் அருணாவின் கழுத்திலிருந்த தங்கச்செயினையும் வாட்சையும் அவள் கைப்பையில் இருந்த சில்லறை பணத்தையும் எடுத்துக்கொண்டு..ஏன் அவளுடைய புடவையும் உருவி எடுத்துக்கொண்டு கதவைச் சத்தமில்லாமல் இழுத்துப் பூட்டிவிட்டு நடந்தது.அப்போது மாலை நேரம் 5.40..
அந்தப் போராட்டத்தில் அருணா இறந்து போயிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. இரத்த வெள்ளத்தில் கழுத்து நெறிக்கப்பட்டு கிடந்த அருணாவின்
மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டன. அவள் பார்வை இழந்தாள். ஊமையானாள்.
உணர்வுகள் இழந்த உயிர்ப் பிண்டமாய் 37 வருடங்களுக்கு மேலாக மருத்துவமனைக் கட்டிலில் கிடக்கிறாள். இப்போதும் ஆணின் குரல் கேட்டால் மட்டும் அவள் உடல் நடுங்குகிறது.. தங்களுடன் ஒருத்தியாய் பணி புரிந்தவளை
, துடைத்து எடுத்து நித்தமும் உடை மாற்றி நோயுண்னிகள் வராமல் கவனிக்கிறார்கள் மருத்துவமனையில் இருக்கும் மற்ற நர்சுகள்.

அவளை விரும்பிய அவள் காதலன் இப்போது திருமணமாகி குழந்தைகளுடன்.
அருணாவைப் பற்றிய நினைவுகளை மறக்க நினைக்கும் போராட்டத்தில் அவர் யாருடனும் அருணாவைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. மும்பையிலேயே டாக்டராக க்ளினிக் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஏன் அவருடைய மனைவி,
குழந்தைகளுக்கு கூட அருணாவைப் பற்றி எதுவும் தெரியாது என்பது தான் உண்மை!

அருணாவின் தங்கை வொர்லி பகுதியில் இருக்கும் (B.D.D. chawl) பி.டி.டி.
சால் பகுதியில் வசித்து வருகிறார். அருணாவைப் பற்றி அவரும் எதுவும் பேச
விரும்புவதில்லை.
சோகன்லால் அருணாவைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை! ஆம் சோகன்லால் மீது திருட்டு குற்றம் மட்டுமே சுமத்தப்பட்டது.
அதற்கான தண்டனையாக ஆறு ஆண்டுகள் சிறைவாசம் மட்டும்தான். இன்று சோகன்லால் டில்லி மருத்துவமனை ஒன்றில் வார்டு ·பாயாக வேலை பார்க்கிறான்..
அவனுடைய அடையாளம் அவன் வலது கையில் அவனுடைய பெயரை அவன் பச்சைக் குத்தி இருப்பான். அவன் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்...

ஆனால் எங்கள் அருணா இப்போது என்னவாக இருக்கிறாள்?
அருணா இப்போது உயிருடன் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டால்
அந்த வேதனை மீண்டும் மீண்டும் இரவுகளைத் தூக்கமின்றி அடிக்கும்.
அவள் உயிருடனிருந்தாலும் அவளை இப்போது நேரில் போய்ப் பார்க்க நெஞ்சில்
உரமுமில்லை.

என்னவளே
பெருநகர மாயப்பிசாசுகள்
நாய்களுக்குப் போட்டியாய்
நடமாடும் நகரமிது.

தர்மங்கள் நிலைநிறுத்த
நீ கொடுத்த விலை
அதிகம் தாயே

உயிர்ப்பிண்டமாய்
கட்டிலில் கிடக்கும்
உன் சதைநார்களில்
இன்னும்
ஒட்டிக்கொண்டிருக்கிறதா
நியாயங்களின் சுவாசம்?

------------------------
பி.கு

அருணாவின் முழுக்கதையும் பிங்கி விரானி புத்தகமாக எழுதியிருக்கிறார்.
(The True Account of a Rape and its Aftermath, written by Pinki Virani, a columnist.)

மும்பையின் டோபி க்காட் (DHOBY GHAT)




இப்போதெல்லாம் நான் இஸ்திரிக்குப் போட்ட காட்டன் புடவை கிழிந்திருந்தால்கோபப்படுவதில்லை. ஏன் ட்ரை க்ளீனிங் போட்ட ஃபேப் இண்டியா காட்டன்சுடிதாரை எங்கள் இஸ்திரி சாச்சா தொலைத்துவிட்டு வந்து நின்றாலும்என் ஃபிரஷர் கூடுவதில்லை! இதற்காக எல்லாம் எந்த தியானமும் நான்செய்யவில்லை. நான் செய்ததெல்லாம் எங்க ஊரு டோபிக்காட் பற்றியஒரு வெளிநாட்டுக்காரர் புத்தகத்தைப் படித்துவிட்டு..'அடடா.. நம்ம மும்பையிலே இருக்கும் இந்த இடத்தைப் பற்றி நாமதெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே' என்று நொந்துப்போய் அந்தஇடத்திற்கே நேரில் சென்று பார்த்ததால் வந்த ஞானோதயம் தான்.( உள்ளே நுழைய முடியவில்லை. மேம்பாலத்திலிருந்து பார்த்தது தான்.ஆ.. ஊ.. என்று வரிந்துக் கட்டிக்கொண்டு உழைப்பாளர்கள் குறித்து பேசும்-எழுதும்- என் முகம் டோபிக்கட்டில் வெளுத்துப் போனது இன்னொருஉண்மை!)
துணி துவைப்பது குறித்து வாஷிங் மெஷின் , சலவைக்கட்டிகள், சலவைத்தூள்கள்என்று நம் வீட்டு தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் விளம்பரங்கள் எல்லாம்துணிதுவைப்பது என்னவொ பூ பறிப்பது மாதிரி காட்டுகின்றன. ஆனால் இவர்களில் யாருமே இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களைப்பற்றி எதுவும் மூச்சு விடுவதில்லை.
உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி துணிச்சலவை இடம் மும்பையின்டோபிக்கட் தான் என்கிறார்கள் வெளிநாட்டு எழுத்தாளர்கள்.பிரிட்டிஷ் ஆட்சியில் படைவீரர்களின் சீருடையை வெளுப்பதற்கு இந்த இடத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். குடிசைப் பகுதியான இந்தகுடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழிலையேதலைமுறை தலைமுறையாய் செய்து வருகிறார்கள். 700 துணிதுவைக்கும்தொட்டிகளும் துணிகளை அடித்துத் துவைக்கும் கல்மேடைகளும் இருக்கின்றன.ஒரே நேரத்தில் அத்தனைப் பேரும் துணிகளைக் கல்மேடையில் அடித்துத்துவைக்கும் காட்சியும் அந்த ஓசையும் நம்மை என்னவொ செய்யும்!என் அன்புத்தோழி அ.மங்கை இந்த துணிதுவைக்கும் ஓசைகளின்பின்புலத்தில் "வெள்ளாவி" என்ற நாடகத்தை இயக்கி இருக்கிறார்.
மும்பையில் மகாலட்சுமிக்கு அருகில் மேம்பாலத்திலிருந்து பார்த்தால்டோபிக்காட் தெரியும்.பொதுவாக எல்லோருமே அங்கிருந்து தான் பார்த்துவிட்டு வருவார்கள்.மும்பையில் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் ஓரிடம். மும்பை டாக்ஸிடிரைவர் எல்லோருக்கும் டோபிக்கட் என்றால் தெரியும். சரியாயப் பயணிகளைக்கொண்டு விட்டுவிடுவார்கள். நம்மவர்கள்தான் மும்பை வந்தால் கேட் வே ஆஃப் இந்தியாவும் தாஜ் ஹோட்டலும் பார்த்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
என் வீடு தேடி வந்து துணிகளை வாங்கிச்செல்லும் இஸ்திரி சாச்சாவுக்குப்பின்னால் ஒரு பெரிய குழுவே இருக்கிறது.இஸ்திரி சாச்சா துணி வாங்கிச்செல்வார்.அதன்பின் துணிகளில் சில குறியீடுகள் இடப்படும்.அந்தக் குறியீடுகள் அவர் அனுப்பும் துணிகள் என்பதற்கான "பார்கோட்".டோபிக்காட்டுக்கு துணிகள் அனுப்பப்படும். அங்கே துணிகள் தரத்திற்குஏற்ப பிரிக்கப்பட்டு துவைக்கப்பட்டு, கஞ்சிப் போட்டு காயப்போட்டு இஸ்திரி ஆகியோ/ இஸ்திரி செய்யாமலோ துணிகள் அந்தந்த இடத்திற்குஅனுப்பப்படும். வந்த துணிகளை பில்டிங், வீட்டு எண் அடையாளத்துடன்நம்மிடம் வாங்கிய இஸ்திரி சாச்சா நம் வீட்டில் வந்து கொடுப்பார்.ஒரு நாளைக்கு டோபிக்காட் வெளுக்கும் துணிகள் குறைந்தது5 இலட்சம் இருக்கும்! எம்மாடியோவ்! இந்த 5 இலட்சத்தில் நம் துணி நம்மிடம் வருவது எப்போதாவதுமிஸ் ஆனால் அது ஒன்றும் ஆயுள்தண்டனைக்கான குற்றமில்லையே!துணிதுவைக்கும் இவர்கள் துணிகளில் இடும் அடையாளக்குறிகள்உலகப் புகழ் பெற்றவை. மும்பையின் டோபிக்காட் , டப்பாவாலாஅடையாளக்குறிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் ஆய்வு செய்வதிலும்வெளிநாட்டு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். வெளிநாட்டுபயணிகளின் பயணக்குறிப்பு புத்தகங்கள்தான் இந்த உலகம் போற்றும்திறமையை வெளிக்கொணர்ந்தன.






தமிழ்நாடு


-------------





தமிழ்நாட்டில் வெள்ளாவி எப்படி இருக்கிறது? சென்னையில் இன்றும் பழையவண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை என்ற பெயர்கள் சாட்சிகளாகஇருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் வைகை நதிக்கரையில் வாழும்5000 சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் தான் இவர்கள் அதிகம்வாழும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் குறித்த ஆய்வுகளும் பதிவுச்செய்யப்பட்டுள்ளன.நதிநீரை நம்பி மட்டுமே தங்கள் தொழிலைத் தொடர முடியாததால் வண்டையூரில்இவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கிணறு வெட்டி வெள்ளாவி அடுப்பு வைத்துதொழில் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உடல் உழைப்பு சார்ந்த75% வேலைகளைப் பெண்கள் தான் செய்கிறார்கள்.ஆண்கள் இஸ்திரி போடுவதும்துணிகளை வாங்கிவருவதும் கொடுப்பதுமான வேலைகளையே அதிகம் செய்வதாகதெரிகிறது.வெள்ளாவி என்பது உவர்மண்ணுடன் கலந்து துணிகளை நீராவியில் சூடுபண்ணும் முறை. மார்க்கிங் இங்க் பவுடரை க்காஸ்டிக் சோடாவுடம் கலந்துசூடு பண்ணி குளிர வைத்து காற்றுப்புகமுடியாத பாட்டிலில் அடைத்து வைத்துதங்களுக்கான அடையாளக்குறியீடு மையைத் தயாரித்துக் கொள்கிறார்கள்.ஜவ்வரிசையை பவுடராக்கி ஸ்டார்ச் பவுடரையும் தயாரித்துக் கொள்கிறார்கள்.





வரலாறு/புராண செய்திகள்


-----------------------------


*சிதம்பரத்தில் கிடைத்திருக்கும் செப்புத்தகடு தான் இவர்களைப் பற்றியமிகச்சிறந்த வரலாற்று ஆவணமாக இருக்கிறது. கிருஷ்ணதேவராயர்சிதம்பர நடராஜ பகவான் தரிசனத்திற்காக வந்தப் போது இவர்கள் வாழ்க்கையைக் கண்டு இவர்களுக்கு குடியிருப்பு நிலம் வழங்கஆணையிட்டார். இவர்களுக்கு உதவுவது என்பது கங்கையில் புனிதநீராடிய புண்ணியத்தைக் கொடுக்கும் என்கிறது இன்னொரு செப்பேடு.


*சிவபுராணத்தில் தக்கனின் யாகத்தை அழித்த வீரபத்திரனின் ஆடையில் இரத்தக் கறைகள் இருந்ததாம். அதைச் சலவைச் செய்ய தன் மார்பிலிருந்துஉருவாக்கியர்கள் தான் சலவைத் தொழிலாளர்கள் என்கிறது கதை.64 நாயன்மார்களில் ஒருவரான 'திருக்குறிப்பு தொண்டர்' இச்சமூகத்தைச்சார்ந்தவர்.


* மாரியம்மன் விழாக்களிலோ இன்றும் இவர்களிடமிருந்து அரிசி வாங்கித்தான்பிரசாதம் படைக்கிறார்கள். காப்புக்கட்டுவதும் இச்சமூகத்தைச் சார்ந்தவருக்குத்தான்.இவை அனைத்தும் மாரியம்மனிடம் இவர்களுக்கான உரிமையைக் காட்டுவதாகச்சமூகவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.


*மாரியம்மன் கதைப்படி பரசுராமனின் அப்பா கவுசிக முனி தன் மனைவிக்குகொடுத்த தண்டனை இது. பரசுராமனின் தாய் ஆற்றுமணலில் குடம் செய்துமுனிவரின் பூசைக்கு நீரெடுத்து வருவாராம். ஒருநாள் அப்படி நீரெடுக்கும் போதுசூரியனின் அழகில் கொஞ்சம் மயங்கிவிட குடம் உடைகிறது. பெண்ணின் கற்புபுனிதம் சிதைந்துவிடுகிறதாம்!! கவுசிக முனி இதை அறிந்தவுடன் கோபத்தில்மகனுக்கு ஆணையிடுகிறார். தாயின் தலையைச் சீவ. அந்தத் தாய் ஓடுகிறாள்.ஒரு துணிவெளுப்பவரின் இல்லத்தில் ஒளிந்து கொள்கிறாள். அதை அறியாதஅவன் மனைவி பரசுராமனிடம் அவள் தன் வீட்டில் இல்லை என்கிறாள்.கோபத்தில் வாளை எடுத்து மிரட்டுகிறான். ஒளிந்திருக்கும் தாய் ஓடி வருகிறாள்.இருவரின் தலையையும் வாளால் சீவி வீசுகிறான். மகன் தன் ஆணையை நிறைவேற்றியதால் மகிழ்ந்த கவுசிக முனி மகனுக்குஎன்ன வரம் வேண்டும் என்று கேட்ட 'பெற்ற தாய்க்கு உயிர்ப்பிச்சைக் கேட்கிறான்மகன்." கவுசிக முனி வரம் வழங்க ஓடிப் போய் தலையை ஓட்ட வைக்கும் போதுபதற்றத்தில் தலைகளை மாற்றி வைத்துவிட... விளைவு..?பரசுராமனின் மனைவி தலை + துணிவெளுக்கும் பெண்ணின் உடல் =மாரியம்மன்


* ரங்கநாதப்பெருமாளைத் தேடிக்கொடுத்தவர்கள் இவர்கள் என்ற வரலாற்று/புராணமும் உண்டு. திப்புசுல்தான் திருச்சியில் ரங்கநாதப் பெருமாள் சிலையைஎடுத்துச் செல்ல பக்தர்கள் கவலைத் தீர்க்க முன்வந்த சலவைத் தொழிலாளிதிப்புவின் அந்தப்புரத்தில் திப்புவின் மகள் ரெங்கநாதப்பெருமாள் சிலையைபொம்மையாக்கி விளையாண்டுக்கொண்டிருப்பதை அந்தப்புரத்திலிருந்துசலவைக்கு வந்த துணியின் சுகந்த நறுமணத்தின் மூலம் கண்டறிந்துபின் மீட்டார்களாம்!
இந்தக் கதைகள் செய்திகள் ஒரு தகவலுக்குத்தான்.


.சலவைத்தொழிலாளர்களிடம் இருக்கும் டீம் ஓர்க், டைம் மேனேஜ்மெண்ட்,கஸ்டமர் சர்வீஸ், சங்கிலித் தொடர்புகள் இவைகளுக்கெல்லாம் ஆதரமாய்அவர்களே உருவாக்கி வழக்கில் இன்றுவரை மிகவும் திறமையுடன்கையாளும் குறியீட்டு முறை! இதைப் பற்றி எல்லாம் என்றைக்காவதுநாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமோ?உடல் சார்ந்த உழைப்பும் அந்த உழைப்பில் புதைந்திருக்கும் அறிவுக்கொடையும்நமக்கு ஏன் தீண்டாமையாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது?
இப்போதெல்லாம் எனக்கு எங்கள் இஸ்திரி மீசைக்கார சாச்சாஒரு கணினி ப்ரோகிராமருக்கு ஒப்பானவராக தெரிகிறார்.....உங்களுக்கு?


Wednesday, August 4, 2010

பாலியல் தொழிலாளர்கள்



மின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனுமதிக்கப்படாத நிறைய விளம்பரங்கள் மின்சாரவண்டிகளில் பார்க்கலாம். சேல்ஸ் கேர்ள் வாண்டட் என்ற விளம்பரத்திலிருந்து "எங்கள் மசாஜில் உங்களுக்கு முழுத்திருப்தி
கிடைக்கும், வீட்டுக்கு வந்து மசாஜ் செய்ய தனிக்கட்டணம்.."
இத்தியாதி சில விளம்பரங்களைப் பார்க்கலாம்.
இந்த விளம்பரங்கள் பெரும்பாலானவை
(பெரும்பாலானவை.. விதிவிலக்குகள் உண்டு)
பாலியல் தொழில் சார்ந்த விளம்பரங்கள் என்பதுதான் அதிர்ச்சி தரும்
உண்மை.

பாலியல் தொழில் குறித்து நாம் வெளிப்படையாக பேசவோ எழுதவோ
தயக்கம் காட்டியதில் சில நியாயங்கள் இருந்தன. நம்மில் பலர் -நான்
உள்பட - ஆண்-பெண் உறவு என்பது அவரவர் தனிப்பட்ட விசயம்.
இதைப் பற்றி சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் பேசுவது அவசியமில்லை
என்றெல்லாம் நினைத்ததும் உண்டு. ஆனால் இன்று பாலியல் என்பது
தனிநபர் சார்ந்த விசயமல்ல.
எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு அரசு செலவு செய்யும் தொகை,
கர்ப்பத்தடைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை,
அமெரிக்கப் பெண்கள் நிராகரித்த பெண்கள் கருத்தடைச் சாதனத்தை
இந்தியப் பெண்களுக்கு 'ஆஹோ ஓஹோ '
என்று புகழ்ந்து அறிமுகம் செய்த இந்தியச் சந்தை..
இப்படியாக ஆண்-பெண் உறவு என்பதும் , பாலியல் தொழில் என்பதும்

அரசு கவலையுடன் கவனிக்க வேண்டியதாகி உலகியல் சந்தையாகி
..என்னவெல்லாமோ ஆகிக்கொண்டிருக்கிறது
.
இந்தச் சூழலில் இவைச் சார்ந்த செய்திகளையும் உண்மைகளையும்
சமூகநலனும் அக்கறையும் கொண்ட அனைவரும் பேச வேண்டிய
தருணம் வந்துவிட்டது.

மின்சாரரயில்கள் விளம்பரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தப் போது
இதைப் பற்றிய கள ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதி இருக்கும்
மராத்திய எழுத்தாளர், தோழி கவிதா மகாஜன் நிறைய உண்மைகளைப்
பகிர்ந்து கொண்டார்.







*மும்பை காமட்டிபுரம் 1889ல் வெள்ளையருக்காக உருவாக்கப்பட்டது.
1928ல் அரசு லைசன்ஸ் வழங்கப்படது. 1950ல் லைசன்ஸ் ரத்து செய்யப்படது.
100000 பேர் இத்தொழிலில்.


* பாண்டூப் மேற்குப் பகுதியில் சோனாப்பூரில் பாலியல் பெண் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் இருப்பிடத்தின் அமைப்பு:
ஒரு நீளமான வராந்தா. கடப்பா கல்மேடை. அந்த கல்மேடைதான் கட்டில்.
அப்பகுதி தகரத் தடுப்புகளால் அறைகளாக மாற்றப்பட்டிருக்கும். அந்த அறைகளில் இருவர் நிற்க முடியாது. கல்மேடைக்கு கீழே பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் உடந்தைகள். என்ன பெரிதாகா..இரண்டு பைகள் இருக்கும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 வாடிக்கையாளர்கள் வருவார்கள்
என்கிறார் அந்தப் பெண்.

*பாலியல் தொழிலை நடத்தும் பெண் முதலாளி அந்தப் பெண்கள் கர்ப்பமாக
அனுமதிப்பதில்லை. ஆனால் அதையும் மீறி குழந்தையைப் பெற்றுக்கொள்ளவே அவர்களில் சிலர் விரும்புகிறார்கள். ஏனேனில் அவர்களுக்கு என்று உரிமை எதுவுமில்லை. அவர்கள் உடல் கூட அவர்களுக்கானதாக இல்லை.
தாய்-குழந்தை என்ற ஓர் உறவு அவர்களுக்கான ஓர் உரிமைச் சார்ந்த
உணர்வாக இருக்கிறது.

*கர்ப்பம் தரித்திருப்பதை அவர்கள் குறைந்தது 5 மாதமாவது மறைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டால் கர்ப்பம் கலைக்கப்படும்.

* இப்படிக் குழந்தைக்குத் தாயான பெண் ஒருத்தி தினமும் தன்னிடம் மட்டுமே
வரும் வாடிக்கையாளரை ஒரு நாள் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லி
இருக்கிறார். வெளியில் வந்தவுடன் வாடிக்கையாளரைக் காணவில்லை.
சிறிதுநேரத்தில் தன் குழந்தையையும் காணவில்லை என்பதைக் கண்டு
அதிர்ச்சியில் தேடி இருக்கிறார். குழந்தை கல்மேடைக்கு கீழே
கிடைத்தது.. குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வழிய.
தொண்டைக்குழி வரை குழந்தைக் காயத்துடன். மருத்துவ உதவிக்கு
போனபோது குழந்தையின் நிலமையைக் கண்ட மருத்துவர் மயங்கி
விழுந்தார்.. !கொடுமையிலும் கொடுமை. நம் கற்பனைக்கு அடங்காத
மிருகக்கொடூரம்.

*ஆண் பாலியல் தொழிலாளர்கள்
-----------------------------------
*மும்பையில் அதிகம் ரேட் வாங்குபவர்கள் இவர்கள்

*விளம்பரம், சினிமா ஆசை என்று வந்தவர்களின் மறுபக்கம் இது.

*ஒரு நாளைக்கு 5000 முதல் 50000 வரை வாங்குகிறார்கள்.

* விடுமுறை நாட்களில் மொரிசியஸ், பாங்காக் என்று அழைத்துச்
செல்லப்படுகிறார்கள். அதற்குத் தனி சார்ஜ் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

* மேல்தட்டு வர்க்க பெண்களுக்கான உடல் தேவையாகவே இவர்கள்
பயன்படுத்தப்படுகிறார்கள்.

இதில் பெண் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமே 40 வயதுக்குப் பின்
பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அல்லது பிச்சை எடுக்கும் குரூப் லீடரிடம் விற்கப்படுகிறார்கள்.

பாலியல் தொழிலிருந்து மீட்கப்பட்ட சில பெண்கள் மீண்டும் அத்தொழிலுக்கே
வந்துவிட்டார்கள் என்பதும் இன்னொரு அதிர்ச்சியான உண்மை.

மண், பெண்ணுடல், நிறுவனமயம் என்ற புத்தகத்தில் ம.செந்தமிழன்
அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவு வருவதற்கு
முன் பல ஆண்களுடன் உறவு கொள்ளும் பெண்களில் ஒரு சாரார்
ஓர் ஆண்+ ஒரு பெண் சமூக கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்தார்கள்
என்றும் அவர்கள் தான் பரத்தையர் என்றும் எழுதி இருக்கிறார்.
இன்று நாம் கொள்ளும் பரத்தையர் - உடலைப் பணத்திற்காக
விற்கும் பாலியல் தொழில் செய்வோர். ஆரம்பத்தில் அப்படி இல்லை
என்கிறார்.

பாலியல் தொழில் இன்று நேற்று உருவானதல்ல. எல்லா நாடுகளிலும்
அனைத்து நாகரிகச் சமுதாயத்திலும் இத்தொழில் தொடர்ந்து வந்திருக்கிறது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பாலியல் உறவுகள் குறித்தக் கிளுகிளுப்பும்
சிலருக்கு மிருக உணர்வுகளின் மரபணு தொடர்ச்சியும் இருக்கிறது.
வார, மாத, நாளிதழ்களில் எப்போதும் யாருமே எழுதி அனுப்பாத
மருத்துவர் கேள்வி - பதில் பகுதி வெளிவந்துக் கொண்டுதானிருக்கிறது!
கிட்டத்தட்ட 98% வாசகர்கள் என்னவொ அப்படியே மேம்போக்காக
அந்தப் பக்கத்தைப் புரட்டுகிற மாதிரி பாலியல் சார்ந்த கேள்வி பதில்களை
வாசிக்கத்தான் செய்கிறார்கள்.

அண்மையில் சமூகம் அங்கீகரிக்காதப் பாலியல் உறவு சார்ந்த செய்திகள்
அதிகமாகப் பத்திரிகைகளில் வருகின்றன. குறிப்பாக தந்தை- மகள்
பாலியல் கொடுமை. இவைகளுக்கான காரணங்களை உள ரீதியாகவும்
புற காரணிகள் ரீதியாகவும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

----------------------

நெல்லிக்கனி



என் நண்பனே,
எங்கே நீ ஒளிந்து கொண்டாய்?
துயரங்கள் சுமையாகும் போது
உன் தோள்களைத் தேடுகின்றேன்.

சுமைகளைத் தூக்க அல்ல
சுமைதாங்கி இளைப்பாற.

பூமி உருண்டையில்
நாம் மீண்டும் சந்திப்போம்- என்றாய்.

பூமி உருண்டை
என்பது உண்மைதான்.
ஆனால் நம் சந்திப்பு மட்டும்
எப்படிப் பொய்யானது?

வேண்டியவர்கள்
வேண்டாதவர்கள்
பெரியவர்கள்
சிறியவர்கள்
எல்லோருடனும்
பேசி- சிரித்து
உண்டு - உறங்கி
ஏறி - இறங்கி
பயணம் செய்து
களைத்துப் போய்
கண்மூடி..
கனவில் என்னுடன்
நீ பயணம் செய்வாய்
என்ற நப்பாசையில்.

ராக்கி கட்டி
நம் நட்பை
சகோதரப் பாசமாக
பரிணாமம் செய்ய நினைத்தேன்.

நம் நட்பு
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும் விட
மேலானது என்று
புன்னகையுடன் சொன்னாய்.

நட்பு மேலானது
என்பதால் தான்
எட்டாத வானத்தில் நீ
உன்னை எட்டிவிடும்
கனவுகளில் நான்.

நாம் மூவேந்தர் வளர்த்த
தமிழ் என்றாய்.
மூவேந்தர்களிடன்
நட்பு வாழ்ந்ததில்லையே
என்றேன்.
நீயோ
-யார் அந்த மூன்றாவது வேந்தன்?-
என்றாய்.

முத்தமிழ் என்றும்
பிரிந்ததில்லை
என்றேன்.
ஆம்.
நான் இயல்
நீ இசை
என்றாய்.
நம் நட்பு நாடகம்
என்று
சொல்லாமல்
விட்டுவிட்டாய்!

நான் அவ்வை
நீ என் அதியமான்
என்றேன்
எங்கே என் நெல்லிக்கனி?
என்றாய்.

தொலைந்துப்போன
நெல்லிக்கனியைத்
தேடி அலைகின்றேன்.

(என் கவிதை நூல் - ஹேராம்- தொகுப்பில்
நெல்லிக்கனி கவிதையில் சில வரிகள்..)

கோவிந்தா !.க்கோவிந்தா!! .. யாருக்கு?




திருப்பதி பாலாஜிக்குச் சொந்தமான நகைகளின் மதிப்பு ரூபாய் 35000 கோடி.
ஆபரணங்களைத் தவிர்த்து பாலாஜிக்குச் சொந்தமான அசையும், அசையா
சொத்துகளை எல்லாம் சேர்த்து கூட்டிக்கழித்தால் இன்றைக்கு ஒரு தனி மாநிலத்தின் வருவாயை விட அதிகம் வருவாய் ஈட்டும் நபர்
திருப்பதி பாலாஜிதான்!
பாவாம் இவ்வளவு வருவாய் வந்தும் அவர் குபேரனிடம் வாங்கிய கடனுக்கு
வட்டியைத் தான் கட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது!

இப்போதெல்லாம் அடிக்கடி பாலாஜியின் சொத்து மதிப்புகள் குறித்து
பத்திரிகைகள் எழுதி எழுதி என்னைப் போன்றவர்களையும் பாலாஜியைப்
பற்றி நினைக்க வைத்துவிட்டார்கள்.
மனவளக்கலை வேதாந்திரி ஷேசாத்திரி அவர்கள் மலையில் சமாதியான மகானின் அருள் சூழ்ந்த தளமாக திருப்பதியைக் காட்டுகிறார்.
கொஞ்சம் அறிவியலும் கொஞ்சம் தத்துவமும் கலந்து கொடுக்கும்
சித்த மருத்துவம் அது
.

புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
பிட்சுகளும் பிக்குகளும் திருப்பதி மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள்.
கூட்டம் இல்லை. மலைச்சூழந்த அந்த தளத்தில் மனம் தியானத்தில்
மிதக்கிறது. மயிலிறகாய் மலைக்காற்று நம்மைத் தொடுகிறது.
பெரிய பெரிய உண்டியல்கள் இல்லை. கருவறை தரிசனத்திற்கு காத்திருப்புகள் இல்லை. அருகில் சென்று சாந்தம் தவளும் புத்தனின் காலடியை மலர்களால் அர்ச்சித்த மனம் இலகுவாகிறது. திருப்பதியில் இருப்பது புத்தர்தான் என்று இன்றும் பவுத்தர்கள் உரக்கத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள்:

> திருப்பதி சிலையை யாரும் அலங்காரமில்லாமல் பார்க்க அனுமதி இல்லை.

> இந்தியாவிலேயே மனைவி/துணைவி இல்லாமல் தொண்டர்கள் வரிசை
இல்லாமல் தனித்திருக்கும் விஷ்ணு ,திருப்பதி பாலாஜி தான். ஏன்?

> மலையை விட்டு கீழே இறங்கியதும் திருச்சானூர் என்ற இடத்தில் தான்
பாலாஜியின் மனைவி பத்மாவதி இருப்பதாகக் காட்டுகிறார்கள்.

> விஷ்ணுவின் திருவுருவச்சிலைகளுக்கு நான்கு கைகள், அதில் இரண்டு
கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். ஆனால் திருப்பதி பாலாஜிக்கு
இருப்பது இரண்டு கைகள் மட்டும் தான். அதுவும் சங்கு சக்கரம் கைகளில் இல்லை. அவர் தோள்பட்டையில் தொற்றிக்கொண்டிருக்கிறது.

புவுத்தர்கள் சொல்லும் இக்காரணங்களை 'இந்துமதம் எங்கே போகிறது?'
கட்டுரைகளில் அக்னிஹோத்ரம் ராமனுஜ தாத்தாச்சாரியாரும் சொல்லுகிறார்.
ஆனால் அவர் திருப்பதி பாலாஜிக்குள் மறைந்திருப்பது மலைவாழ்
மக்களின் தெய்வம் "காளி அம்மன் " என்கிறார். மனிதர் இன்னும் கொஞ்சம்
ஓவர்டோஷாக திருப்பதி வேங்கடாஜலபதியை அருகில் சென்று ஒரு
யூதயுவதியுடன் பார்த்ததாகவும் திருப்பதி பெருமாளுக்கு அழகான கூந்தல்,
தலையைச் சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள்
என்றும் எழுதி இருக்கிறார்.
யூதப் பெண் இசையரசி எம்.எஸ்.க்கு வேண்டியவராம். தாத்தாச்சாரி சிற்சில
பராக்கிரமங்கள் நிகழ்த்தி யூத மதத்தைச் சார்ந்த பெண்ணைக் கோவில்
கருவறைக்குள் அழைத்துச் சென்று பெருமாளின் கூந்தல் ஆராய்ச்சி
செய்தாராம்!

காளி அம்மனை முதலில் ஆக்கிரமித்தவர்கள் சிவனடியார்கள் தானாம்.
காளி அம்மனை உருவாக்கி வழிபட்டு வாழ்ந்த காளி தெய்வத்தின் மக்கள்தான் இன்றைக்கு கோவிலுக்கு வெளியே தலைமுடி இறக்கும் தளத்தில் வரிசையாக இருக்கும் மக்கள் (அம்பட்டர்கள்)!

காளி அம்மன்-சிவனாகியாகக் கதை
அம்மனின் மக்களை அனாதைகள் ஆக்கியது.

ஸ்ரீராமானுஜர் புண்ணியத்தால் சிவன் விஷ்ணுவாகி..
சங்கு சக்கரத்துடன்...


இன்று திருப்பதி பாலாஜி பணக்கடலில் மிதக்கிறார்..
திருப்பதிக்குப் போனால் திருப்பம் ஏற்படும் என்று பக்தர்கள் கூட்டம்
அலை அலையாக..
இதை எல்லாம் கண்டும் காணாமல்
சித்தனின் சமாதியில் புத்தர் சிரிக்கிறார்
.

சத்ரபதி சிவாஜி மகாராஜ்




(1)
சிவாஜி பெயர்ப்பலகை:

மும்பையில் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர்
சத்ரபதி சிவாஜி மகாராஜ்.
விக்டோரியோ டெர்மினஸ் என்றழைக்கப்பட்ட VT ரயில்வே நிலையம்
சத்ரபதி சிவாஜி ரயில்வே நிலையமானது.
எல்லா ரயில்வே நிலையங்களிலும் 'சத்ரபதி சிவாஜி டெர்மினல்' செல்லும்
வண்டிகளைப் பற்றிய அறிவிப்புகள் மராத்தி, இந்தி, ஆங்கிலத்தில்
அலறிக் கொண்டிருக்க அறிவிப்பு பலகைகள் CST என்று மாற்றம் பெற
ஒரு வழியாக நாங்களும் VT யிலிருந்து CST க்கு மாறிவிட்டோம்.
அப்புறம் விட்டார்களா.. விமானநிலையத்திற்கும் சத்ரபதி சிவாஜி ஏர்போர்ட்
என்று பெயர் மாற்றினார்கள்.
பயணிகள் மகிழ்வூர்தியில் அமர்வதற்கு முன் மிகவும் கவனமாக சத்ரபதி
சிவாஜி ஏர்போர்டா, சத்ரபதி சிவாஜி ரெயில்வே ஸ்டேஷனா என்பதைத்
தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
வெளிநாட்டு பயணிகள் தான் ஆரம்பத்தில் இந்தக் குழப்பத்தில் மாட்டிக் கொண்டு
அவஸ்தைப் பட்டவர்கள்.
நம்மவர்களுக்கு இந்தக் குழப்பமே வரவில்லை.
ரயில்வே ஸ்டேஷன் என்றும் டொமஸ்டிக் ஏர்போர்ட் என்றும் இண்டர்நேஷனல்
ஏர்போர்ட் என்றும் தெளிவாகப் புரிந்து கொண்டு அப்படியே வழக்கப்படுத்திக்
கொண்டார்கள். யாரும் சத்ரபதி சிவாஜியைக் கண்டு கொள்ளவில்லை!

(2)
சிவாஜி ரசிகர்
---------------
எங்க ஊரிலிருந்து நாட்டாமை வந்திருந்தார். அந்தக் காலத்திலேயே
அவருக்கு வக்கீல் நாட்டாமை என்று பெயர். எந்த ஒரு பிரச்சனைக்கும்
வக்கீல் மாதிரி பாயிண்ட் பாயிண்டா பேசுவாராம்.
அவர் வந்திருந்தப் போது சிவாஜி ஜெயந்தி. சாலை எங்கும் சிவாஜிப்
புகைப்படங்கள், சிலைகள், மாலை மரியாதை, ஒரு சில இடங்களில்
ஊதுபத்தி மணத்துடன்..பிரசாதம் வழங்காதக் குறையாக பூசைகள் நடக்க
ஆரம்பித்திருந்தன. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
அவர் அமைதியாக எங்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
வழக்கம்போல மறுநாள் ஆபிசிலிருந்து வந்தவுடன் என் மகன்
(அவனுக்கு அப்போது 7 வயது இருக்கும்) சோபாவில் ஏறி
தன் சீருடையில் அணியும் பெல்டை எடுத்துச் சுழற்றி சுழற்றி வீசிக்கொண்டு
'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ' என்று தன் மழலைத் தமிழில்
பாடி அங்கும் இங்கும் தாவித் தாவி குதிக்கிறான்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மீசைக்காரத் தாத்தா அன்று பகல் முழுவதும் உட்கார்ந்து ஹீரோனா
சிவாஜி இல்ல எம்.ஜி.ஆரு தானு சொன்னாராம். அதுவும் எம்.ஜி.ஆர் பாடல்களை
பாடியும் ஆடியும் காட்டி வகுப்பு எடுத்திருக்கிறார் என்பது என் மகள் மூலம்
தெரியவந்தது. அவரும் என்னிடம் தன்னிலை விளக்கம் சொன்னார் பாருங்கள்..
'பின்னே என்னமா.. இந்த ஊருல சிவாஜியைக் கொண்டாடதீங்க..
நம்ம மக்கள் திலகம் எம்சிஆரை மறந்திட்டயளெ எல்லாரும்' னு வருத்தத்தோடு
சொன்னார்.!!
எனக்கு எப்படி இருந்திருக்கும்?






சிவாஜியின் ராய்காட் கோட்டை மர்மங்கள்
----------------------------------------





எழுத்தாளர் பாவண்ணனை மும்பைக்கு அழைத்திருந்தோம்.
இலக்கியக் கூட்டம் முடிந்து நண்பர்களுடன் சிவாஜியின் ராய்காட் போயிருந்தோம்.
நான், கே ஆர் மணி, ரவிப்பிள்ளை, சாருஸ்ரீஇ எங்களுடன்
பாவண்ணனும் அவர் மனைவி அமுதா பாவண்ணனும்.
மலைமீது கோட்டையில் ஏறுவதற்கு கொஞ்ச தூரம் ரோப்கார் வசதி உண்டு.
அதன் பின் நாம் நடந்துதான் ஏற வேண்டும்.

மலை மீது சிதிலமடைந்த கோட்டை. சிவாஜி 1656ல்
கோட்டையைக் கைப்பற்றி அதைப் பலப்படுத்துகிறான்.
தன் தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்கிறான்.
கோட்டையில் சந்தையும் இருக்கிறது. அந்தச் சந்தையில் கடைகளில்
பொருட்களை குதிரை மீதமர்ந்து வீரர்கள் வாங்குவதற்கு தோதாக
உயரமாகவும் வரிசையாகவும் இருக்கிறது. கோட்டையில் "டக்மக்டோக்"
என்ற முனையில் தான் குற்றமிழைத்தவனுக்கு மரண தண்டனையாக
அந்த முனையிலிருந்து பள்ளத்தில் உயிருடன் தள்ளிவிடுவார்களாம்!
இப்படியொரு தண்டனை அந்தக் காலத்தில்.
சிவாஜிக்கு எப்போதுமே தன் கோட்டையின் பாதுகாப்புகள் குறித்து
அதீத அக்கறை இருந்திருக்கிறது.
ஒருமுறை மலையடிவாரத்திலிருந்து வந்த இடையர்குலப்
பெண் மோர் விற்றுவிட்டு மாலையில் வழக்கம் போல வீடு திரும்ப
வரும்போது தாமதமாகிவிடுகிறது. கோட்டைக்கதவுகளை மாலையில்
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாத்திவிடுவார்கள். அதன் பின் மறுநாள்
காலையில்தான் கோட்டை வாசல்கள் திறக்கும். கோட்டைக் காவலர்கள்
அவள் எவ்வளவொ கெஞ்சியும் கதவுகளைத் திறந்துவிட மறுத்துவிடுகிறார்கள்.
அவளுக்கோ அவள் பிள்ளைகளின் நினைவு, குழந்தைகள் அவளைக் காணாமல்
தவிப்பார்களே என்று எண்ணி அவளும் தவிக்கிறாள்.
ஒவ்வொரு கதவாகச் சென்று கெஞ்சுகிறாள். எதுவும் நடக்கவில்லை.
ஆனால் மறுநாள் கோட்டைக் காவலர்கள் அவள் வழக்கம்போல
தலையில் மோர்ப்பானையுடன் மோர் விற்பதைக் கண்டு
"இவள் எப்படி மலையடிவாரம் சென்று திரும்பி இருக்கமுடியும்?"
என்று ஐயம் கொள்கிறார்கள்.
அவளும் இரவில் எப்படியோ ஒரு வழியில் மலையடிவாரம் போய்விட்டதாக
ஒப்புக்கொள்கிறாள்.
செய்தி சிவாஜி மகாராஜை எட்டுகிறது.
கோட்டையின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட பின்னரும் ஒரு பெண்ணால்
கோட்டையிலிருந்து வெளியில் செல்ல முடிந்திருக்கிறது என்ற செய்தி
கோட்டையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருப்பதாக நினைக்கிறான்.
கோட்டையைச் சீரமைத்தவர் அழைக்கப்படுகிறார். மீண்டும் கோட்டைப்
பலப்படுத்தப்படுகிறது...
ஆனால் அந்தோ பரிதாபம்... கோட்டைக்குள்ளேயே சிவாஜி
உயிராபத்து இருந்திருக்கிறது. அதுவும் அவருடைய இரண்டாவது மனைவி
சோயரபாய் மூலமாகவே!
அதிர்ச்சியாக இருந்தது கோட்டையைச் சுற்றிக்காட்டியவர் சொன்னபோது.
மூத்ததாரத்தின் மகன் சம்பாஜி அரசனானது சோயரபாய் தன் மகன் ராஜாராமுக்கு
மூடிசூட எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தையும் சம்பாஜி முறியடித்த
வரலாறை வாசிக்கும் போது உண்மையாக இருக்குமொ என்ற எண்ணம்
வரத்தான் செய்கிறது.

சிவாஜிக்கு 8 மனைவியர். அவர்கள் மூலம் 2 ஆண்மக்களும் 6 பெண்மக்களும்.
கோட்டையில் சிவாஜியின் எட்டு மனைவியருக்கும் இருந்த அந்தப்புரத்தை ராஜ்கோட்டில் பார்க்கலாம். .
ஒவ்வொரு குழு/குலத்திலிருந்தும் சிவாஜியின் திருமண உறவுகள்!
சிவாஜி இறக்கும்போது வயது 50 தான்.
சிவாஜியை உட்கார்ந்தாலும் தும்மினாலும் கொண்டாடும் மராத்திய மண்ணில்
இன்றுவரை சிவாஜியின் மரணம் ஒரு மர்மம்தான்.
----

பாட்டி என்ன சொல்லிவிட்டாள்?



எங்க ஊரிலே கல்யாணம்னு செய்தி வந்தவுடனேயே தீர்மானிச்சிட்டேன். இந்த தடவை எப்படியும் ஊருக்குப் போயிடறதுனு. ஊரிலே மழை வானத்தைக் கிழிச்சிச்கிட்டு ஊத்திச்சாம்..சொர்ணம் அத்தை கடிதம் எழுதியிருந்தா. நம்ம ஊரிலே வாய்க்காலும் ஆறும் நிரம்பிஆத்துப்பாலத்த்துக்கு மேலே தண்ணீ ஓடிச்சாம். நான் எட்டாவது படிக்கறப்போ அப்படிஎங்க ஊரு தாமிரபரணி ஆத்திலே தண்ணி ஓடிச்சி., அதைப் பாக்கறதுக்கு இந்தசொர்ணம் அத்தைக் கூட சேர்ந்து வீட்டுக்குத் தெரியாமா நாங்க ஒரு செட்டாபோனதை இன்னிக்கு நினைச்சாலும் மனசு குப்புனு மத்தாப்பு மாதிரி மேலே நோக்கிபூவா பூக்குது.

தண்ணியோட சேர்த்து பெரிய பெரிய மரமெல்லாம் அப்படியே வேரோடுவந்ததைப் பார்த்தப்போ கொஞ்சம் பயமாவும் இருந்திச்சி. பாட்டி கதையிலே வர்றவேதாளம் ஏறிய மரங்கள் இவைகளாகத்தான் இருக்கனும்னு தோணிச்சி.அப்படியே மரங்களுடன் சேர்ந்து மரத்தில் கூடு கட்டியிருக்கும் பறவைகளின் குஞ்சுகளூம் மிதந்து வந்துக் கொண்டிருந்தன. அப்புறம் காளை மாடுகளும்எருமை மாடுகளும் செத்துப் போய் மிதந்து வந்தக் காட்சியும் என்னை ரொம்பவேபயமுறுத்தியது. நிறைய நாட்கள் தூக்கமில்லாமல் அந்தக் காட்சிகள் என்னைத் தொந்தரவு செய்தது. ஆத்துக்குப் போனதும் வெள்ளம் பார்த்ததும் எல்லோருக்கும்தெரிந்துவிட அத்தைக்கு நல்ல திட்டு கிடைத்தது எல்லோரிடமும்.

'சமஞ்ச நாளக்கி உனக்கு கல்யாணமாகி இருந்த இதுக்குள்ள நீ நாலு பில்லைய பெத்திருப்பே புத்தி இருக்காட்டி உனக்கு 'என்று பாட்டி தன் பங்குக்கு அத்தையைத்திட்டினாள்.

'எல்லாம் மூதேவி உன்னாலே தானே' என்று அத்தை என்னிடம் பேசாமல் முகத்தைஉம்முனு தூக்கி வச்சிக்கிட்டு இருந்தாள் ரெண்டு நாளைக்கி.

எல்லாம் அத்தைக் கடிதாசி வந்தவுடன் நினைவுக்கு வந்தது.ஆத்துப் பாலத்துக்கு மேலே வெள்ளம் ஏறி கரை இரண்டும் நிரம்பி உடையற மாதிரிவேகமாக நுரைப் பொங்க ஓடினக் காட்சி மட்டும் ப்ரேம் போட்ட மாதிரி இப்பவும்நினப்பில் இருக்கத்தான் செய்தது.
இந்த முறை யாருக்காகவும் என் ஊருக்குப் போற ப்ளானை மாத்திக்கறதில்லேனுதீர்மானித்துக் கொண்டேன்.

ஊரும் ஆறும் வாய்க்காலும் வாய்க்கால் கரையில் வள்ர்ந்திருக்கும் தாழம்பூ புதர்களும் வாய்க்காலிம் நீச்சல் அடிச்சி கும்மாளம்போட்டதும் தினமும் நினைவில் வந்தது. இந்த 40 மாடிக்கட்டிடமும் செயறகையாதோட்டக்காரன் வளர்த்திருக்கும் புல்தரையும் செடிகளும் ஸும்மிங் பூலும் ஏன்இந்த ஆகாசம் கூட ஒரு வித செயற்கையாகவே இருந்தது.வாய்க்காலை நினைச்சவுடன் அப்படியே தாழம்பூவின் மணம் என்னைச் சுற்றிசுற்றி வந்தது.
ஊரில் போய் இறங்கியவுடன் தாழம்பூ பறிச்சி சடையில் வைத்து பின்னிக்கொள்ளவேண்டும் என்று ஆசை வந்தது. தாழம்பூ சடையில் என்னைப் பார்த்தால் என் பசங்களும் கணவரும் மும்பை நண்பர்களும் என்ன சொல்வார்கள் என்றுநினைத்து சிரித்துக் கொண்டேன்.

கல்யாண வீட்டில் எனக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பாட்டிதான் முன்பு போல நடமாட்டமில்லை. மூத்திரம் போவது தெரிவதில்லை. தினமும் போர்வையை நனைச்சிடறானு அவளுக்கு நார்க்கட்டிலில் ஒரு சேலையை விரித்து அதில்படுக்கை. அடிக்கடி அவள் சம்மந்தா சம்மந்தமில்லாமல் பேசுவதை யாருமே கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவள் தன் ப்ழைய கால நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. அவள் சொல்லும் பெயர்களும்உறவுகளும் சம்பவங்களும் எனக்குத் தெரியவில்லை. அவளுடன் உக்காந்து பேச வேண்டும் என்றால் யாரும் என்னைத் தனியாக விடுவதாக இல்லை.ரொம்ப வருசத்துக்குப் பின் வந்திருக்கிறேன். அப்பா அம்மா இறந்துவிட்டார்கள்.அவர்களின் சார்பில் நான் இந்த திருமணத்துக்கு வந்திருப்பதாக அவர்களாகவேசொல்லிக்கொண்டார்கள். அப்பா தாய்மாமன் . அவர் செய்ய வேண்டியதெல்லாம்நான் செய்ய வேண்டும் என்று வேறு சொல்லிக்கொண்டார்கள். சந்தோஷமாகசெய்துவிடலாம் என்று தலையசைத்தவுடன் இன்னும் கவனிப்பு அதிகமாகிவிட்டது.பாட்டி இருமிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் போய் சுடு தண்ணி வைத்துக் கொடுத்தேன்.

'ஆரு சரசுவா'
'ஆமாம் பாட்டி'
என் கைகளைப் ப்டித்து தடவிக்கொடுத்தாள். கையில் போட்டிருக்கும் தங்க வளையலைத் தடவி 'புது வளையலா.. கல்யாணத்தோட உனக்கு முத்து வளையல் டிசைனிலே தானேஉங்கப்பன் போட்டான்.. புதுசா பேரன் செய்து போட்டிச்சா..'எனக்கே மறந்துவிட்டது என் கல்யாணத்தில் அப்பா போட்ட முத்து வளையல் டிசைன். பாட்டிக்கு இன்னும் அதெல்லாம் நினைவு இருக்குதேனு ஆச்சரியமாஇருந்தது. ஆமாம் பாட்டினு சொன்னவுடன் பாட்டியின் முகத்தில் ஒரு சந்தோஷம் தெரிந்தது.

வாசலில் பந்தல் போட தெற்குத்தெரு ராமசாமி வந்திருந்தான். இரண்டு பக்கமும் குலை தள்ளிய வாழை மரங்கள், சிவப்பு வெள்ளையில் ஸாட்டின் துணியில் தைத்திருந்த பந்தல்செட். பக்கத்தில் போய் அவர்கள் பந்தல் கட்டும் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சைக்கிளில் வந்து இறங்கினான் இளங்கோ. அவனைப் பார்த்தவுடன்நான் அடையாளம் கண்டு பிடித்துவிட்டேன். அவன் தான் என்னை அடையாளம் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை, ஒரு வேளை தெரிந்தே தெரியாத மாதிரி நடந்து கொள்வது நல்லது என்று நினைத்திருப்ப்பானோ. அவன் பக்கத்தில் போய்
'என்ன இளங்கோ என்னைத் தெரியலையா?
'எங்கே தெரியலைனு சொல்லிடுவானோனு மனசு கிடந்து அடித்துக் கொண்டது.அவன் என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டு

'என்னிக்கி வந்தே. வூட்டிலே எல்லாரும் சுவமா'

'ம்ம்ம்'

'நீ எப்படி இருக்கே'

'எனக்கென்ன ...'

அதற்குமேல் எங்கள் இருவருக்குமே பேசிக்கொள்வதற்கு எதுவுமே இல்லை.ஒரு காலத்தில் நாங்கள் இருவரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம்.அவன் தான் பள்ளிக்கூடத்தில் ஹீரோ. படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரிஅவன் தான் ஃபர்ஸ்ட். அவனை அந்தக் கோலத்தில் பார்த்ததும் என் மனசில்அவனைப் பற்றிய எல்லா நினைவுகளும் வரத்தான் செய்தது. அது அவனுக்கும்வந்திருக்கும் என்பதை இறுகிய அவன் முகம் காட்டிக் கொடுத்தது.வசதியும் வாய்ப்பும் இருந்திருந்தால் இவன் திறமைக்கு இவன் எங்கேயோ போயிருப்பான்.. இப்படி பந்தல் நட்டுக்கொண்டு சைக்கிள் கடை வைத்துக்கொண்டுஇருந்திருக்க மாட்டான்..

மறுநாள்,கல்யாண மண்டபத்தில் பட்டுச்சேலையைக் கட்டி பாட்டியை ஒரு பக்கத்தில் உட்காரவைத்திருந்தேன். வேண்டாம் பாட்டி வீட்டிலேயே இருக்கட்டுமுனு சித்தி சித்தப்பாசித்தப்பா பிள்ளைகள் எல்லாம் சொன்னார்கள். எனக்கென்னவோ அது சரியா படலை.கல்யாணத்துக்கு சமான் வாங்க டவுணுக்குப் போனவர்களிடன் பெரியவர்களுக்கானஹக்கிஸ் வாங்கிட்டு வரச்சொல்லி நல்ல மாட்டி விட்டேன். பாட்டிக்கு மூத்திரம்வர்றது தெரியலைனுதானே வெளி இடத்துக்கு கூட்டிட்டு வர முடியலைனு அவர்கள்சொன்னதால் நான் இப்படி செய்தேன். கல்யாண வீட்டில் ஒவ்வொருவரா கூப்பிட்டுகூப்பிட்டு பாட்டி கதைப் பேசிக்கொண்டிருந்தாள்.

ஆறுமுகம் தாத்தாவின் பேரன் வந்திருந்தான். என்னைப் பார்த்தவுடன் வந்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தான். சென்னையில் இருப்பதாகவும் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை பாத்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னான். என் ப்சங்களுக்குத்தான் அடி போடுகிறான்னு சித்தி என்னிடம் சொன்னாள்.எப்படித்தான் எல்லாத்துக்கும் சித்தி ஒரு காரணம் கண்டுபிடிக்கிறாளே தெரியலை.இருக்கலாம் என்று சொல்லி அப்போதைக்கு அவளிடமிருந்து தப்பித்துக் கொண்டேன்.

அவன் போனவுடன் பாட்டி என்னிடம் கேட்டாள்.
'இப்போ பேசிட்டுப் போனது ஆரு'
'உனக்குத் தெரியாது பாட்டி'
பாட்டி விடுவதாக இல்லை.'நம்ம கீழூரு வாத்தியாரு மவன் மாதிரி இருந்திச்சே'
எப்படித்தான் பாட்டி கரெக்டா கண்டு பிடிச்சாளோ..
ஆமாம் பாட்டினு சொல்லிட்டு மற்றவர்களைப் பார்க்க போனேன்.அவள் என்னைச் சத்தமா கூப்பிட்டாள்...
'ஏய் சரசு.. அவனைக் கூப்பிடேன்.'
'அவரு சாப்பிட போயிட்டாரு பாட்டி'
'செரி செரி.. ஆத்தா என்னை அவங்கிட்ட கூட்டிட்டு போயேன்'
இது என்னடா வம்பா இருக்கு என்று நினைத்துக் கொண்டேன். முதல் மாடியில் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். பாட்டியை முதல் மாடிக்கு அழைத்துச் செல்லமுடியாதுனு அந்த இடத்தை விட்டு நைசாக நகர்ந்து விட்டேன்.
ஒரு அரை மணி நேரத்தில் சித்தியும் சித்தாப்பாவும் கத்திக் கொண் டிருந்தார்கள்.என்னடா என்று பார்த்தால் பாட்டி படிக்கட்டில் விழுந்து விட்டாள் என்று சொன்னார்கள்.
'இதுக்குத்தான் நான் படிச்சி படிச்சி சொன்னேன். மண்டபத்துக்கு கூட்டிட்டு வர வேண்டாம்னு .. யாரு நான் சொல்றதைக் கேட்கா' என்று சித்தி அலுத்துக் கொண்டாள்.அத்தையும் நானும் அதற்குள் ஓடி வந்துவிட்டோம்.பாட்டி பாட்டி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.சித்தப்பாவின் முகம் கோபத்தில் சிவதிருந்தது.எல்லாம் உன்னால் தானெனு அவர் வாய்திறந்து சொல்லாவிட்டாலும் அவர் பார்வைஅதைத்தான் சொன்னது.

'நம்ம மானம் போகுது..' என்று சித்தி மெதுவாகத்தான் சொன்னாள்.அதைக் கேட்டவுடன் சித்தப்பாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது.
'என்னடி பெரிசா மானம் அதுஇதுனு பேச வந்திட்டே.. உன் தங்கச்சி எவனுக்குப்பிள்ல பெத்தா .. தெரியாதா.. உங்க அப்பன் ஊரெல்லாம் கூத்தியா வச்சிருந்தான்..இவ பேச வந்திட்டா பெரிசா மானம் அதுனு..அரைஞ்சேனா.. செப்பு பேந்திடும்ம்ம்'சித்தப்பா பல்லைக் கடித்தார்.
'சும்மா இருன்னே..' அத்தை தான் அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்தினாள்.
நீ உள்ளே போ.. என்று உரிமையுடன் அண்ணனைப் பிடித்து மண்டபத்துக்குள் அனுப்பினாள்.
சித்தி மூக்கைச் சீந்த ஆரம்பித்துவிட்டாள். 'உங்க அண்ணன் எதுக்கு எங்க ஊட்டு ஆள்களைப் பத்தி கண்னாபின்னானு பேசனும்.. '
'அவன் புத்தி தான் உங்களுக்குத் தெரியுமே மைனி.. கல்யாண வூட்டிலே கண்ணைக்கசக்கிட்டு நிக்காதிய நாலுசனம் நம்மளைப் பாக்குதுலே'

அப்படி பாட்டி என்ன செய்துவிட்டாள் என்று எனக்குப் புரியவில்லை.சித்தப்பாவின் பேத்தி சங்கீதா பாட்டியைக் கையைப் பிடித்து ரிக்ஷாவில்ஏற்றிக்கொண்டிருந்தாள். ஏழு எட்டு வயதுதான் இருக்கும். அந்தச் சின்னக்குழந்தையைநம்பி பாட்டியை அனுப்புகிறார்களேனு எண்ணம் வந்தவுடன் நானும் அவளுடன்ரிக்ஷாவில் ஏறிக்கொண்டேன்.பாட்டி எதுக்கு மாடிக்கு ஏறினாள் என்று பாட்டியிடம் கேட்டேன்.பாட்டியின் பார்வை எங்கோ காலங்களைக் கடந்து பயணம் செய்துக் கொண்டிருந்தது.என் கேள்வியைக் காற்று அவளிடம் சுமந்து செல்வதில் தோற்றுப்போனது.
சங்கீதாதான் சொன்னாள். பாட்டி சென்னையிலிருந்து வந்திருக்கும் வாத்தியார் மகனைப் பார்க்க மாடிக்கு ஏறினாளாம். ஏற முடியாமல் கீழ விழுந்திருக்கிறாள்.விழுந்தவள்.. வாத்தியார் மகனைப் பாக்கனுன்னு கத்தி அழ ஆரம்பித்தாளாம்.

'ஏன் வயித்திலே பொறந்திருக்க வேண்டிய ராசாவை நான் பாக்கனுன்னுசொன்னாளாம்'

சின்னக்குழந்தை அப்படியே சொன்னது.
எனக்குப் பாட்டியைக் கட்டிப் பிடித்து அழ வேண்டும் போலிருந்தது.மெதுவாக பாட்டியைத் தொட்டு அவள் உள்ளங்கைகளை என் கைகளில் வைத்துமூடிக்கொண்டேன். அப்படியே ஆதரவாக அவள் தலையைத்தடவி விட்டேன்.பாட்டி என் மடியில் தலைவைத்து சாய்ந்துக் கொண்டாள்.பாட்டி அழுகிறாளா விம்முகிறாளா தெரியவில்லை. வேகமாக ஏறி இறங்கும் அவள்மூச்சுக் காற்று என் மடியைச் சூடாக்கியது. என் கர்ப்பக்கதவுகள் கண்விழித்துஅவள் கண்ணீரைச் சுமந்துக் கொண்டன.என்னையும் பாட்டியையும் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தை ரிக்ஷாவில் இருந்து இறங்கியவுடன் என்னருகில் வந்தது.'அத்தை .. உன்னை எனக்கு ரொம்ப ப்டிச்சிருக்கு .. நீதான் பாட்டி சொன்னதைக் கேட்டுகோபமேபடலை. பாட்டியைத் திட்டலை...' என்று சொல்லிவிட்டு கல்யாண மண்டபத்தை நோக்கி துள்ளிக்கொண்டு ஓடினாள்.
நான் பாட்டிக்கு ஹக்கிசை மாற்றி வேறு ஒரு புடவையைச் சுற்றி அவள்பக்கத்தில் படுத்துக் கொண்டேன்.
பாட்டியின் வயதில் எனக்கும் இந்த மாதிரிநினைவுகள் திரும்பினால்... என்னவெல்லாம் சொல்லக்கூடும் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டேன். ராமசாமி வாசலில் நாட்டியிருந்த வாழை மரத்தில் இலைகள் காற்றில் கிழிந்துபோயிருந்தன. குலை தள்ளியிருந்த வாழை என்னை ஆதரவாக அணைத்துக் கொண்டது.

Monday, August 2, 2010

மழைமுகம்




மழை.. என்னைத் தீண்டும் மழை
என் வேர்களைத் தேடும் மேகங்களாய்
மழை..
என்னைத் தீண்டுகிறதோ?
தாகத்தில் வெடித்திருக்கும்
உதடுகளை
பனித்துளிகளால் முத்தமிடுகிறதோ?

குடைப்பிடித்தோ குல்லாய் அணிந்தோ
உன் காதல் மழையில்
நனைந்து போவதை
தடுப்பது மட்டும் சாத்தியமில்லை.
மழை... என்னைத் தீண்டும் மழை..
எரிகிறது எனக்குள்.

மழை என்னைத் தீண்டும் மழை
காற்றின் வேகத்துடன்
பாய்ந்து வந்து
என்னை அப்படியே
தன் மழைத்துளிகளுக்கு நடுவில்
புதைக்கிறது.
எப்படியாவது
இருண்ட மேகங்களை விலக்கி
மின்னல் வெளிச்சத்தில்
அதன் முகம் பார்க்க துடிக்கிறேன்.
இடி இடிக்கிறது..
அச்சத்தில்
கண்களை மூடிக் கொண்ட தருணத்தில்
மழை வெள்ளத்தில் நான்
மிதவையாய்..

எந்த மழையும் எட்டிப் பார்க்கமுடியாத
குகைக்குள்
மழைத்துளியின் ஈரங்களுடன்
காத்திருக்கிறேன்
இன்னொரு கார்காலத்திற்காய்.

அப்போதாவது
மண் தீண்டுமுன்
என்னைத் தீண்டத் துடிக்கும்
மழையின் முகம் பார்க்க வேண்டும்.
கோடையில்
ஈரமான நினைவுகளைச்
சுமந்திருக்க
நினைவுகளுக்கும் வேண்டுமே
முகத்தின் அடையாளம்.

Sunday, August 1, 2010

கலைஞருக்கு நன்றி ... ஏன்?




கலைஞர் காப்பீட்டு திட்டம்.. திமுக அரசின் சாதனை என்று
ஊடகங்களால் ஊதிப் பெரிதாக காட்டப்படுகிறது.
இந்தத் திட்டம் அறிமுகமானவுடன் மும்பை வந்திருந்த தோழர்
சுப.வீ அவர்கள் மிகவும் பெருமையுடன் இத்திட்டம் குறித்து
விழித்தெழு இயக்கம் தோழர்களுடனான கலந்துரையாடலில்
குறிப்பிட்டார். அப்போதே எனக்கு அரசே இப்படி ஒரு திட்டத்தை
அறிமுகம் செய்வது ரொம்பவும் வேடிக்கையாக இருந்தது.

இத்திட்டம் குறித்து தமிழக முதல்வர் கலைஞர் முரசொலியில்
எழுதியிருக்கும் புள்ளிவிவரங்கள்:

< கடந்த ஆண்டு இதே நாளில்- 23-7-2009 அன்று "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம்'' தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்டது. இன்று ஓராண்டு நிறைவுற்று- இந்த ஓராண்டில் இந்த திட்டத்தால் கிடைத்த பயன்கள் என்ன? நோய் நீங்கி நடமாடுவோர் எத்தனை பேர்? ஒருவரல்ல, இருவரல்ல! ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர்- சரியாகச் சொல்ல வேண்டுமேயானால்- ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 257 நோயாளிகள் நலம் பெற்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதற்காக காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு 415 கோடியே 43 லட்சம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 44 லட்சத்து 45 ஆயிரத்து 117 குடும்பங்கள் இத்திட்டத்தில் உறுப்பினர்களாக கடந்த ஓராண்டு காலத்தில் சேர்ந்து- 1 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 439 குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ......இப்போது ஓராண்டு நிறைந்து அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது- கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டு பரிகாரம் பெற்றோர்- மரணத்தை எட்டிப் பார்த்து மறுவாழ்வு பெற்றோர்- எத்தனை பேர் என்ற கணக்கு நம்மைக் களிப்பில் அல்லவா ஆழ்த்துகிறது!> கலைஞர் கடிதத்தின் வரிகள் இவை.

ஏழை எளிய மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் திட்டம் என்று கலைஞர்
எழுதியிருப்பது சரிதான். மேம்போக்காக பார்க்கும் போது அப்படித்தான்
பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

விற்பனைக்காக கடை வைத்திருப்பவன் தன் கடையில்
பொருள் இல்லை என்றால் எப்போதாவது பக்கத்துக் கடையில்
கிடைக்கும் , போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லலாம்.
ஆனால் தன் கடையில் அடுத்த முறை அந்தப் பொருளை வாங்கி
வைக்க முயற்சிப்பான். இங்கே என்ன நடக்கிறது என்றால்
என் கடையில் வசதிகள் இல்லை, பக்கத்து கடையில் தான்
பொருட்கள் தரமாகவும் விலை குறைவாகவும் கிடைக்கிறது
என்று விளம்பரம் செய்கிறான். அத்துடன் அங்கே ஆன
விலை குறைவுக்கு தன் பாக்கெட்டிலிருந்தே பணத்தை எடுத்து
கொடுக்கிறான்! இதை மகத்தான திட்டம் என்று வேறு பத்து
நிமிடத்திற்கு ஒருமுறை கூவி கூவி விற்பனைச் செய்கிறான்!
ஆமாம்.. ஆமாம் ரொம்பவும் மகத்தான திட்டம் தான் என்று
அந்த ஊரை ஏமாற்றுகிறான்.
கலைஞர் காப்பீட்டு திட்டம் இந்த மாதிரிதான் இருக்கிறது.

ஒருவர் வியாதிப்பட்ட நேரத்தில் செய்யப்படும் உதவி என்பது
அந்த உதவியைப் பெற்ற நபருக்கும் அவர் சார்ந்தக் குடும்பத்தினருக்கும்
மிகப்பெரிய நன்றிக்கடனை உணர்வுப்பூர்வமாக அவர்கள் எண்ணத்தில்
மிகவும் சுலபமாக ஏற்றிவிடும்..


மறுபிறவி எடுத்தது போல மருத்துவ உதவி பெற்ற அந்த நபருக்கு
நன்றி மறப்பது என்பது குற்றவுணர்வாய் மாறிவிடும்.
இப்போது யோசித்துப் பாருங்கள்...
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எம்மாதிரியான உளவியல் தாக்கத்தை
காப்பீட்டு உதவியைப் பெற்ற நபருக்கும் அவர் குடும்பத்தினருக்கும்
உருவாக்கும் என்பதை. அரசியல் ஆட்சி அதிகார வட்டத்தில்
இந்த நன்றிக்கடன் என்பது தலைமுறை தலைமுறையாய் ஓட்டுவங்கியைத்
தக்க வைத்துக்கொள்ளும் அற்புதமான மந்திரமல்லாமல் வேறு என்ன?

மக்கள் சேம நல அரசு என்பது மக்களின் அடிப்படைத் தேவையான
உணவு, கல்வி, சுகாதாரம் , பாதுகாப்புக்கு உத்திரவாதம் தர வேண்டியது
கடமை. இங்கே நம் அரசுகள் மக்கள் சேமநல அரசுகளாக இல்லாமல்
உள்நாட்டு/வெளிநாட்டு தனியார் நிறுவனங்களின் ஏஜன்சிகளாகவே மாறிவிட்டன..

இம்மாதிரியான திட்டங்கள் மற்ற மாநிலங்களில் இல்லையா?
இருக்கிறது. ஆனால் எந்த தனிப்பட்ட முதல்வர்/தலைவரின் பெயராலும்
இல்லை!

விளம்பரங்களிலும் வருவது.. "கலைஞருக்கு நன்றி!" என்ற வாசகம்தான்.
காப்பீட்டு திட்டத்தின் பிரிமீயம் தொகையிலிருந்து விளம்பரச் செலவு வரை
எல்லாம் மக்களின் வரிப்பணத்தில்!

தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டம் என்று சொன்னால் என்னவாம்?
அது என்ன கலைஞர் காப்பீட்டு திட்டம்?
இத்திட்டத்தின் மறுபக்கம்:

* அரசே வெட்கமின்றி விளம்பரம் போட்டு அறிவிக்கிறது...
எங்கள் அரசு மருத்துவமனைகள் சரியில்லை என்று.

*அரசு காப்பீட்டு நிறுவனங்களை விட லாபமானதும், தரமான
வாடிக்கையாளர் சேவையும் செய்வது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்
என்பதை ஓர் அரசே ஏற்றுக்கொள்கிறது.

* அரசே ஒத்துக்கொள்கிறது, வியாதி வருமுன் காப்பது உங்கள் வேலை,
வந்தப் பின் காப்பது எங்கள் வியாபாரம் என்று.

* ஏழைகளுக்கு உதவி செய்வதாக சொல்லி அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்த
புண்ணிய புருஷனாக, அவதார மனிதனாக தன்னை அடையாளம் காட்டி..
அதன் மூலம் தனியார் மருத்துவமனைகள், தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு
ஏஜன்ஸியாக அரசே செயல்படுகிறது.

*இவை அனைத்தையும் அரசு மக்கள் பணத்தில் செய்துவிட்டு தனிநபர் துதிப்பாடுகிறது.


அரசின் கடமைகளை அரசு மக்களுக்குச் செய்யும் தர்மங்களாகவும்
அரசியல் தலைவர்களை அரசுத் திட்டங்களின் தர்மகர்த்தாகளாகவும்

காணும் வியாதி முடியரசர் காலத்திலிருந்து தமிழர்களிடம் இருக்கும்
தீராத நோய்.

பிரபலங்கள் /ஊடகங்கள் சொல்வதை அப்படியே ஆட்டுமந்தையாய்
நம்பி பின் தொடர்வதும்-
பகுத்தறிவுடன் சிந்தித்து செயல்பட வேண்டிய அரசு திட்டங்களைக் கூட
உணர்வுகளின் விளிம்பில் நின்று எழுதுவதும் பேசுவதும் -
தமிழர்களின் சாபக்கேடு.

மித்திநதிக் கரையில்


வணக்கம்...

தமிழ்மணம் நட்சத்திர வலைப்பதிவாளராக எனக்கு வாய்ப்பு
கொடுத்திருப்பதற்கு நன்றி.

இனி நான் உங்களுடன்....




மித்திநதிக் கரையில்
-------------------------------------------





கடலலையின் ஈரம் காயாமல்
கண்ணில் கனவுகளுடன் காத்திருக்கும் நாட்கள்
அம்ச்சி மும்பை, எங்கள் மும்பை மாநகரம்..
இந்தியா ரூபாயின் மதிப்பை எங்கள் சந்தையின் ஏற்றமும் இறக்கமும் தான்
இன்றுவரை ஆட்சி செய்கிறது.
இந்த மாநகரத்தின் மக்கள் தொகையில் 48 விழுக்காடு குடிசைகளில் வசிக்கிறார்கள்.
(2001 மக்கள் கணக்கெடுப்பு). அந்த 48 விழுக்காட்டில் 60 விழுக்காடு குடிசையில் '
வசிப்பவர்கள் தமிழர்கள்தான். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக
இன்றும் சொல்லப்படும் தராவி பகுதியில் அதிகமாக வாழ்பவர்கள் தமிழர்கள்.

எப்போது நடந்தது இந்த புலம்பெயர்ந்த வாழ்க்கை?
இப்போதுதான் நடந்தது என்று எவரும் எழுதி வைக்கவில்லை.
பல்லவ அரசன் நரசிம்ம பல்லவன் வாதாபி கொண்டதும் பரஞ்சோதி கணபதி
கண்டதும் வெறும்கதையல்ல. அவை வரலாற்று நிகழ்வுகள்.
ஆனாலும் வென்ற பகுதிகளில் தன் சொந்தங்களுடன் வாழ்க்கையைத் தொடரவில்லை
அன்றைய தமிழன்.

தமிழ்நாட்டையும் மராத்திய மண்ணையும் இன்று இணைத்து நிற்கும் இந்தியா என்ற
தேசத்தின் பிறப்பும் அரபிக்கடலோரம் தமிழனின் வருகையும் ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையவை.

>அன்றைய ஆங்கிலேய அரசின் வெள்ளைத்துரைமார்களுக்கு
சமையல் வேலை செய்யும் "பட்லராக' பல தமிழர்கள் இருந்தார்கள்.
அந்த துரைமார்களும் குடும்பத்துடன் இந்தியாவின் எங்கு சென்றாலும் தங்களுடன் தங்கள்
பட்லரையும் அழைத்துச் சென்றார்கள். இப்படி பட்லராக வந்தவர்களில் பெரும்பாலோர்
ஓடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

>இந்து மதமும் அதன் சாதியக் கொடுமையும் தெருவில் நடப்பதற்கும் அனுமதி மறுத்தக் காலத்தில் ஆங்கிலேய அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தில்
இடமளித்தது. அதன் விளைவாகவும் பலர் புலம்பெயர்ந்தார்கள்.

> மும்பையில் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் அன்றிலிருந்து இன்றுவரை
குடிசைத் தொழிலாகவே நடந்து வருகிறது. சுகாதாரமில்லாத சூழலில்
மிகவும் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் இக்குடிசைத் தொழிலில்
வேலைச்செய்ய ஒடுக்கப்பட்ட மக்கள் தினக்கூலிகளாக தமிழகத்திலிருந்து
கொண்டுவரப்பட்டனர். தாராவி பகுதியில் இக்குடிசைத் தொழில் நடத்தியவர்கள்
சேட் என்றழைக்கப்பட்டார்கள். அங்கிருந்த சால் வீடுகள் மனிதர்களின் குடியிருப்புகள்
அல்ல. பதனிடப்பட்ட காய்ந்த தோல்களை அடுக்கிவைக்கும் சேமிப்பு அறைகளாக
(godown) இருந்தவைதான் காலப்போக்கில் தோல்பதனிடும் தொழிற்சாலையில் வேலை
செய்யும் கூலித்தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளாக சேட்டுகள் வழங்கினார்கள். (கவனிக்க: விற்பனை அல்ல)


> பருத்தி அதிகம் விளையும் மராட்டிய மாநிலத்தில் துறைமுகமான மும்பையிலிருந்து
அதிகமான துணிகள் ஏற்றுமதி/இறக்குமதி நடைபெற்றது. அப்போது கொள்ளை
லாப நோக்கில் நூற்பாலைகள் நிறுவப்பட்டு பருத்தி நூல்கள் இங்கிலாந்துக்கு
ஏற்றுமதியானது. அந்த நூற்பாலைகளில் வேலைத்தேடி வந்து குடியேறியவர்கள் பலர்.

> வானம் பார்த்த பூமி, மழையை நம்பிய விவசாயம். இந்த வறுமையில்
வயிற்றுப்பிழைப்புக்காக கூலிகளாக தமிழர்கள் மும்பைக் கடலோரம் வந்தார்கள்.

> ஆங்கிலேய அரசின் அரசுப்பணிகளில் அமர்ந்த தமிழர்கள் அரசு பணிகளில்
இடமாற்றம் ஏற்பட்ட போது அதிகாரமிக்க தங்கள் பதவியை விடாமல்
மாற்றலாகிய இடங்களுக்கு குடிப்பெயர்ந்தார்கள்.

> ஆங்கிலேய அரசின் இரயில் போக்குவரத்து, துறைமுகத் தொழில், சிகிரெட்,
புகையிலை தொழிற்சாலைகள்.. இவற்றில் எல்லாம் கிடைத்த வேலைவாய்ப்புகள்
தமிழர்களை இக்கடலோரம் ஈர்த்தது.

> பிறந்த தமிழ்நாட்டில் சாதியக்கொடுமைகளால் விலங்கினும் கேவலமாக வாழ்ந்த
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவரான பாபாசாகிப்
அம்பேத்கர் பிறந்த மண்ணில் "மனிதர்கள்" என்ற முகம் கிடைத்தது. முகவரி கிடைத்தது.
அதனாலேயே அவர்களில் பெரும்பாலோர் குடும்பத்துடன் மராட்டிய மண்ணின் மைந்தர்களுடன் தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்டார்கள்.

ஆனாலும் சாதி மத இன அடையாளங்களுக்கு அப்பால் இவர்கள் யாருக்கும்
இந்த மண்ணில் எவ்வித உரிமையும் இல்லை. இந்த மாநில அரசின் அதிகாரங்களில்
இவர்களுக்கான பக்கங்களும் இல்லை.
நகராட்சி மன்ற தலைவர் என்ற அரசு பதவிக்கு மேல் எதையும் நினத்துப் பார்ப்பதும்
இன்றுவரை இவர்களுக்கு கனவுதான்.

இந்த மாநகரத்தின் வெளிச்சத்தில் இன்னும் இருண்டு கிடக்கிறது எத்தனையோ
கோடானக்கோடி உழைப்பாளர்களின் குடிசைகள். இந்தக் குடிசைகள்தான்
இந்நகரத்தின் வியர்வைத்துளிகள்.


இம்மாநகரத்தின் நான்காவது தலைமுறையாக இந்தக் கடலோரம் நின்று
பார்க்கின்றேன். என் கடந்த காலங்களையும் எம் தந்தையர் வாழ்ந்த வாழ்க்கையின்
சாயல்களையும் . உப்புக்கரிக்கிறது கடல் நீரும் எங்கள் கண்ணீரும்.







நட்சத்திரங்கள் இல்லாத என் வானத்தில்
கண்சிமிட்டும் அந்த வெளிச்சம்..
இப்போதும் சாளரத்தின் திரைச்சீலைகளை விலக்கி
என்னை நோக்கி கை அசைக்கும் வெள்ளைப்பறவைகள்.
இரவைப் பகலாக்கும் வெளிச்சங்களுக்கு நடுவில்
தரையிறங்கும் விமானங்கள்.
ஆகாயத்தின் மேகங்களுக்கு நடுவிலிருந்து
மண்ணைத் தொடும் நேரத்தில்
தேடுகின்றன என் கண்கள்
இந்தக் கான்கீரிட் காடுகளில்
காணாமல் போன என் கடலலைகளை.

பெட்ரோல் டீசல் போடாத
எங்கள் மூன்றுச் சக்கர வாகனங்கள்
எங்களைப் போலவே
மேடுபள்ளம் இல்லாத புல்தரை
எங்கள் குடியிருப்புகளைப் போலவே
எங்கள் அலைகளும் கழிவுகளுடன்.
கடலுக்குள் சிப்பியாம்
மழைத்துளியே சிப்பிக்குள்
முத்துக்களாய் ஜனிக்கிறதாம்..
பருவம் தவறாமல்
பருவமடையும் எம் கார்மேகத்துளிகள்
எங்கள் சிப்பிக்குள் முத்துக்களை
விதைப்பதே இல்லை.
ஜனசமுத்திரத்தைப் போலவே
அலைசமுத்திரமும்
சிப்பிகளை விலக்கி வைத்த பாவத்திற்கும்
சேர்த்தே சிலுவையைச் சுமக்கிறது.

தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க!!
வாழ்க திராவிடம்!
வாழ்க பாரத மணித்திருநாடு!!
எத்தனை மேடைகள்..
எத்தனைக் கொடிகள்..
ஒலிக்குப்பைகளைச் சுமந்த
எங்கள் காற்றிடம் கேளுங்கள்..
சொல்லக்கூடும் எங்கள் குடிசைகளின்
தொடர்கதையை.

"மாடியில் இருந்து துப்பினால்
குடிசையில் விழும்
குடிசையிலிருந்து துப்பினால்
மாடியே விழும்" **
தெறிக்கும் நறுக்குகள்
எம் கடலடியில் மவுனவாசிப்புகளாய்.
தீப்பெட்டிகளாய் அணிவகுக்கும் குடிசைக்குள்
தீக்குச்சிகளாய் அடங்கிக்கிடக்கும் வாழ்க்கை.
தீக்குச்சிகள் உரசினால் தீப்பிடிக்கும்.
உரச முடியவில்லையே..

சாதி மழை
சமய மழை
அரசியல் மழை
அதிகார மழை
பதவி மழை
பண மழை
ஏதொ ஒரு மழையில் நனைந்து
உரசினாலும் தீப்பிடிக்காத
ஒடிந்தக் குச்சிகளாய்..எங்கள் தலைமுறை.
எங்கெல்லாம் குடிசைகள் இருக்கிறதோ
அங்கெல்லாம் கேட்கிறது
"செம்மொழியான தமிழ்மொழியாஆஆஆம்.ம்..."

தமிழ்ச்சங்கங்கள்
தமிழன் புகழ்பரப்பும் சண்முகாநந்தா அரங்கம்
பூ மணக்கும் மாதுங்கா
செம்பூர் முருகன் திருக்கோவில்
இதைவிட்டால்
டோம்பிவலி விரார் நவிமும்பை கல்யாண்
கிளைப்பரப்பி விரிந்திருக்கும் எங்கள் தமிழுலகம்
எப்போதும் விலக்கியே வைத்திருக்கிறது
மித்தி நதிக்கரையில்
மிதக்கும் குடிசைகளை.

----------------------

(** கவிஞர் காசி.ஆனந்தனின் நறுக்குகள்).

மித்தி எங்கள் மும்பையின் நதி.

-----------------------------------------------