Tuesday, January 15, 2008

இவைப் பேசினால்...

தமிழ்த்தாய் வாழ்த்து!!
-------------------

மன்னிக்கவேண்டும்
தமிழ்தாய் வாழ்த்து
நான் பாடப்போவதில்லை
தமிழ்த்தாய் இப்போதெல்லாம்
'மம்மி'யாகி
வெறும் 'டம்மி'யாகிப் போனதினால்
மன்னிக்க வேண்டும்
கவிஞர்களே
நான் தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடப்போவதில்லை.

எவரையாவது
வாழ்த்திதான்
கவியரங்கை
ஆரம்பிக்க வேண்டும் என்றால்
வாழ்த்துகிறேன்
-என்னை-
என்னுடன் இருக்கும் உங்களை
நம்முடன் இருக்கும்
நட்பு மலர்களை..
வாழ்க
வணக்கம்.

----

எழுதுகோல்
-----------

எழுதுகோல் அறியாத
குகைகளின் கவிதையை
யார் எழுதியது?
ஆதிசிவனிடம் கேளுங்கள்.

எழுதுகோல் ஏமாற்றிய
ஏழைகளின் கவிதையை
ஆர் எழுதியது?
அதிரும் பறையிடம்
கேளுங்கள்..

உண்மைகளைத் தாலாட்டி
உறங்க வைத்த கவிதைகளை
தட்டி எழுப்பிடவே
தரணிக்கு வந்த
ஆதவனின்
ஹைபுன்

கட்டைவிரல்
தொட்டுப்பார்க்காத
ஏகலைவனின்
புதிய ஹைக்கூ.

இந்த மூன்றடிகளில்
முடியப்போவது
துரோணச்சாரிகள்
மட்டுமல்ல
துரோணச்சாரிகளுக்கு
துரோகிகள் என்ற
முத்திரைக் குத்திய
பிதாமகன்களின்
ஆதிக்ககீரிடமும் தான்...

------


தொலைக்காட்சி
----------------------

நிஜங்கள் எல்லாம்
நிழல்களுடன் உறவாடுவதால்
நம் பிள்ளைகள்
'பெப்சி உமா'விடம்
நலம் விசாரிக்கிறார்கள்.

பகுத்தறிவு பேசிய -நம்
அன்னைப் பராசக்தி
இப்போதெல்லாம்
அண்ணா-மலையாகி
ஆருடம் சொல்கிறாள்

மக்களாட்சியின்
அரசிளங்குமாரர்களை
அட்ரஸ் இல்லாமல்
ஆக்கும் வல்லமை
வாக்குப் பெட்டிக்கு
இருக்கிறதோ இல்லையோ
நம் வீட்டு
காட்சிப் பெட்டிக்கு
கட்டாயம் இருக்கிறது.

பாண்டவர் வென்ற
பங்காளிச் சண்டையில்
வாரிசுகளின் கதை
முடிந்து போனதாக
முனிவன் சொன்னதும்
பொய்த்துப் போனது.

கோட்டையைத் தாக்கும்
குடும்பச் சண்டையில்
எல்லோருக்கும் வெற்றி
எல்லோருக்கும் ராஜ்யம்
அட..எல்லோருக்கும் தொலைக்காட்சி!
ஆஹா..இதுவல்லவோ
எங்கள் தமிழன் வென்ற
புதிய குருஷேத்திரம்..

_

பதவி நாற்காலி
---------------
மக்களாட்சி கண்டுபிடித்த
மந்திர நாற்காலியில்
மனிதர்கள் அமரலாம்
மந்திரி ஆகலாம்.
ஆனால்
மீண்டும்
மனிதர்கள் ஆகமுடியாது.

நகையை அடகுவைப்பது
நம்முடைய கதை.
நாட்டையே அடகுவைப்பது
நாற்காலிகளின் கதை.

பதவி நாற்காலிகளே
எம் பாரதநாடு
நீங்கள் பட்டாபோட்டு
விற்பதற்கல்ல...
-------------------

செருப்பு
-------

மாறி மாறி
ஓட்டுப்போட்டு
மக்கள் கண்ட
மாற்றம் என்ன?

போதும்...
மாண்புமிகு மந்திரிகளே
போதும் போதும்
இனி,
உங்களுக்குப் பதிலாக
உங்கள் செருப்புகளே
ஆளட்டும்.
அது ஒன்றும்
எங்களுக்குப் புதிதல்லவே..
இனி,
செருப்புகள் பேசட்டும்
இது-
கல்யாண வீட்டில்
கால்மாறிய செருப்பா?
கடவுள் வீட்டில்
களவுப் போன செருப்பா?
சட்டசபை
ஆயுதமா?

---

அலைபேசி
------------

அலைகளைவிட
பெருகிப்போன
அலைபேசிகளில்
மூழ்கிவிட்டது
மனித பூமி.

படுக்கையில்
பாத்ரூமில்
பயணத்தில்
பாக்கெட்டில்
கைப்பையில்
கால்பையில்
எவ்விடத்தும்
எக்காலமும்
ஜனக்கடலில்
அலைகளின் பேரிரைச்சல்.

இதில்
படம் பார்க்கலாம்
படம் பிடிக்கலாம்
பாட்டு கேட்கலாம்
செய்திப் படிக்ககலாம்
கடிதம் அனுப்பலாம்
காதல் கூட பண்ணலாம்
பேசுவதைத் தவிர
எல்லாம் செய்யலாம்.

பேச வேண்டுமா..
அலைவரிசையில்
"நீங்கள் தொடர்பு கொள்ளும்
வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்குள் இல்லை.."

அந்நியனின்
அலைபேசியில்
இந்தியனின்
கைபேசி எழுதிய
ஹைக்கூ
" miss-call"

-----

ஆடை
----
தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு
சிறப்பு பட்டிமன்றம்
காணத் தவறாதீர்கள்.

"ஆடைகள்
உடலுக்கு அவசியமா? அலங்காரமா?"

இரண்டு அணிகளும்
பேசப்பேச
தொடரும் கைதட்டல்..
ஆமாம்..
அசத்தப் போவது யாரூஊ..?

துப்பட்டா இல்லாமல்
நுழைய அனுமதி மறுக்கும்
கல்லூரி வாசல்களில்
கிழிந்து தொங்குகிறது
ஆடைகளின்
பண்பாட்டு அடையாளங்கள்.

---

வாக்குப்பெட்டி
--------------

விளம்பரங்களில்
சிரிக்கும்
கிரிக்கெட் வீரர்கள்
எங்கள் வாக்குப்பெட்டிகள்

எப்போதாவது
எங்களுக்கும்
கிடைக்கலாம்
'உலகக்கோப்பை'
நம்பிக்கையில்
காத்திருக்கும்
100 கோடி ஜனங்கள்.

ஜயஜய ஜயஜய
ஜயஜய ஹே
வந்தேமாதரம்..
"வாக்குப்பெட்டி சின்னத்தில்
வாக்களியுங்கள்"
வந்தேமாதரம்.

----

கோவில் உண்டியல்
-------------------
சாமிகளில்
சாதி இருக்கிறதோ
இல்லையோ
சமத்துவம் இருக்கிறதா
திருப்பதி
ஏழு மலையானுக்கு
எத்தனை உண்டியல்..!
அலுத்துக் கொண்டது
ஆத்தங்கரையில்
அனாதையாக நிற்கும்
உண்டியல் இல்லாத- எங்கள்
ஊர்க்காவல் தெய்வம்.


தவணை முறையில்
தவறுகள் செய்துவிட்டு
மொத்தமாக வந்து
மொட்டை அடித்ததில்
கோவில் உண்டியல்
ஊதிப் பெருத்தது
கர்ப்பஹிரகத்தின்
வயிறு வீங்கி வெடித்தது.

திருப்பதி மொட்டையோ
திருத்தணி மொட்டையோ
பழநி மொட்டையோ-நாம்
பார்த்திராத மொட்டையோ
உண்டியல் வருகிறது
கோவில் உண்டியல் வருகிறது

"ஜாக்கிரதை ஜாக்கிரதை
திருடர்கள் ஜாக்கிரதை
உங்கள் கைப்பைகள் பணப்பைகள்
ஜாக்கிரதை"
-இப்படிக்கு
கோவில் தேவஸ்தானக் கமிட்டி.

((தமிழர் நட்புறவுப் பேரவையின் ஜந்தாம் ஆண்டுவிழா
-தருண் பாரத் நற்பணி மன்றம் அரங்கு, செம்பூர்,

மும்பை. 13-01-2008ல் நடைபெற்ற கவியரங்கத்
தலைமையில் வாசித்த 'உரைவீச்சுகள்")

Monday, January 7, 2008

யார் இவர்கள்?




யார் இவர்கள்?
----------------

2008 புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்தப் பின்
மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தைப் புரட்டிய எந்த மும்பைவாழ் மனிதரும் தலைநிமிர்ந்து பெருமையுடன் உலாவ முடியவில்லை.
ஜூகு ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வெளியில் வந்த இரு ஜோடிகள்,
தங்களைக் கேலி செய்து ஆண்கள் கூட்டத்தை நோக்கி பெண்கள் சத்தமிட,விளைவு.. அந்த இரு
பெண்களைச் சுற்றிக் கூடி அவர்களின் உள்ளாடைத் தெரியுமளவுக்கு அவர்களின் ஆடைகளைத் தூக்கிக் கிழித்து மிருகத்தனமாக
நடக்கத் துணிந்தார்கள். அச்சமயம் அங்கிருந்த
ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நிருபர் அக்காட்சியை புகைப்படம் எடுத்து சாட்சியமாக்கி, தக்க நேரத்தில் அங்கு வந்த காவல்துறை உதவியுடன் அவ்விரு ஜோடிகளையும் காப்பாற்றினார்.

அந்தப் பெண்களைச் சுற்றி இந்த வெறியாட்டம்
நடத்திய இவர்கள் யார்?

இவர்களுக்கு குடும்பம் இல்லையா?
இவர்கள் என்ன கல்லிடுக்குகளிலிருந்து தவறிவிழுந்த உடைந்தச் சில்லுகளா?
குடி, கும்மாளம், வெறி... இதெல்லாம் இப்படியும் நடக்கத் தூண்டுமா?
ஏன் இதெல்லாம் நடக்கிறது?
இந்தக் கூட்டத்தில் தன் மகனை, தன் சகோதரனைப் பார்க்கும் குடும்பத்தின் கதி என்ன?
இவர்களினால் பாதிக்கப்பட்ட பெண், அவள் கணவர்/காதலன் இவர்களின் மனநிலை எவ்வளவு
பாதிக்கப்பட்டிருக்கும்?
இப்படியானக் கவலைகளில் நடுத்தரக் குடும்பங்கள்
தத்தளித்துக் கொண்டிருந்தன.
அப்போது தான் பத்திரிகைகள் , அரசியல் தலைவர்கள் தங்கள் தங்கள் கருத்துகளை
அதிமேதாவித்தனமாக வாரி வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

மாதிரிக்கு ஒன்றிரண்டு:


>இந்தியத் தலைநகரம் டில்லியுடன் ஒப்பிடும்போது
மும்பை எவ்வளவொ பரவாயில்லை! (இந்த கேடு கெட்ட விசயத்தில்).

> மும்பைக்கருக்கு அடையாள அட்டை வழங்கப்படல் வேண்டும்.

> பெண்களை அவமானப்படுத்திய இவர்கள் மும்பைக்காரர்கள் அல்லர். மும்பைக்கு வெளிமாநிலங்களிலிருந்து வந்திருப்பவர்கள்!

> பெண்கள் அணியும் ஆடைகள்தான் இதெற்கெல்லாம் காரணம்.

> பெண்கள் ஏன் இருட்டில் வெளியில் வரவேண்டும்?

> பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் குற்றத்தைப் பதிவு செய்யாத வரை போலீஸ் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்படியாக தொடர்கிறது.

இதில் எதுவுமே இந்தப் பிரச்சனைக்கான தீர்வையோ அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையோ வைக்கும் நோக்கத்தில் பேசப்படும் அக்கறையுள்ள விமர்சனங்கள் இல்லை.

டில்லியுடன் ஒப்பிடும்போது மும்பை பரவாயில்லை என்பதும் மும்பைக்கருக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்பதும் பிரச்சனையைத் திசைத்திருப்பவே உதவும்.

சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே "இதைச் செய்தவர்கள் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள்
என்று இதிலும் அரசியல் பண்ணபார்க்கிறார்.,
கொஞ்சமும் விவஸ்தை இல்லாமல்!
(Involved in the juhu molestation were outsiders. if this police does not take any action we will blacken their faces and parade then around the city- uddhav thackeray)

கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்திருக்கும் 14பேரில் 9 பேர் மும்பையில் வாழும் மராத்திய
குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

குற்றவாளிகளுக்கு மதம், இனம், மொழி, நாடு, குடும்ப அடையாளங்கள் கிடையாது. இப்படி எந்த அடையாளத்துடனும் அவர்களை அடையாளம் காட்ட முயல்வது அந்தக் குற்றங்களைச் செய்யாத
அவரைச் சார்ந்த அப்பாவிகளையும் உறவுகளையும்
மீள முடியாத தண்டனைக்குள்ளாக்கிவிடும்.

பெண்கள் ஏன் இரவில் வெளியில் வரவெண்டும்?
என்று இந்தக் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் இப்போது
07/1/2008 , பிற்பகல் 3.15க்கு) சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அவரிடம் கேட்கிறார்கள்
"நீங்கள் ஏன் இரவில் வெளியில் வந்தீர்கள்?'
-புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு-
என்று பதில் சொல்கிறார்.
நீங்க்ள் வெளியில் வரலாம், பெண்கள் வரக்கூடாதா என்று அடுத்த கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

எந்த நாட்டில் இரவிலும் பெண்கள் பத்திரமாக வெளியில் போய்விட்டு திரும்ப முடிகிறதோ அந்த நாட்டில் தான் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படுகிறது என்பது மட்டுமல்ல,
அந்த நாட்டில் தான் பண்பாடும், கலாச்சாரமும்
மதிக்கப்படுகிறது, உண்மையான சுதந்திரம்
இருக்கிறது.

"படிதாண்டி, குளம் சுற்றி
உனைத் தரிசிக்க வரும்
உன் மகளை
உன் மகனே
கேலி செய்கிறான்,
அழகி மீனாட்சி
உன் காலத்தில்
எப்படி நீ உலாப்போனாய்?
( கவிஞர் இரா.மீனாட்சி)
என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.

பெண்கள் அணியும் ஆடைகள் தான் காரணமாம்!

இக்காரணம் சொல்லப்படும் போது தான் அண்மையில் சென்னைக் கல்லூரி ஒன்றில் ஜீன்ஸ்
பேண்ட், டீ ஷர்ட் அணிந்து சென்ற தோழி லீனாமணிமேகலையை துப்பட்டா அணிந்து உள்ளே வர சொன்னதும் அவர் மறுத்து வெளியேறியதும் கவனிக்கப்பட வேண்டியது என்ற
எண்ணம் வலுப்பெறுகிறது.
உலகச்சந்தையை நடுத்தெருவில் திறந்து வைத்துவிட்டு பெண்கள் யாரும் துப்பட்டா அணியாமல் வெளியில் வரக்கூடாது என்று சொல்வதில் நியாயமில்லை.
ஆமாம் அப்படி என்னதான் துப்பட்டாவில் காப்பாற்றப்பட்டுவிடும் பெண்ணின் மானமும்
நாம் வாய்கிழியப் பேசும் நம் பண்பாடும்.?
புடவைக் கட்டிய எந்தப் பெண்ணும் பாதிக்கப்படுவதில்லை என்பதையாவது இந்த மாதிரி பேசுபவர்களால் நிரூபிக்க முடியுமா?
துப்பட்டா மறைப்பில் இருக்கிறது நம் பண்பாடு என்று ஒரு கல்லூரி சொல்கிறது, அந்தக் கல்லூரியிலிருந்து இந்த நாட்டின் இளைய தலைமுறை வெளிவருகிறது.. அவர்களிடமிருந்து
உருவாகும் எண்ணங்கள் எப்படிப் பட்டவையாக இருக்கும்!

மினியும் இறுக்கமான ஆடைகளும் அணிந்து சாலைகளில் நடக்கும் பெண்களை வெளிநாடுகளில் ஆண்கள் கூட்டமாய்ப் பாய்ந்து
ஆடைக் கிழித்துதான் அலைகிறார்களா?

ஏன் நம் கலைச் சிற்பங்களில் தன் உடலழகு எடுப்பாக தெரிய ஆடை அணிந்த பெண்ணுருவ சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் எல்லாம் இருக்கிறது தானே. அந்தப் பெண்களை எல்லாம்
இந்த மாதிரிதான் ஆண்கள் நடத்தினார்களா?

இரண்டு வர்க்கங்களுக்கு நடுவில் உலகமயமாதல்
பெரும் இடைவெளியை, நிரப்ப முடியாதப் பள்ளத்தாக்கு போல ஏற்படுத்திவிட்டது.
இம்மாதிரி கொண்டாட்டங்களின் போது உயர்மட்டத்திலிருப்பவர்களை அணுகுவது கீழ்த்தட்டு மனிதர்களுக்கு மிகவும் இலகுவாகிறது. இந்தத் தீடீர் நெருக்கத்தில் அவர்கள் பார்க்கும் பெண்கள், அவர்கள் இதுவரைப் பழகும் பெண்களைப் போலில்லை . இம்மாதிரி உடை அணிந்திருந்தால் அவள் நம் பண்பாட்டுக்கு எதிரானவாள் என்ற ஒரு கருத்துருவாக்கமும் ஏற்கனவே அவர்களிடம் திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம், கூட்டத்துடன் கோவிந்தா, நம்மை யாரால் என்ன செய்ய முடியும்..? இத்தியாதி எண்ணங்கள் ஏற்பட்டு விடுகிறதா? இதையும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. வர்க்கப்பிரச்சனையின் ஊடாக இதைப் பார்ப்பதும் எப்போதும் பொருத்தமாக இருப்பதில்லை.

ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் இந்த ஆண்கள்?

இந்த ஆண்களும் ஒரு பெண்ணின் மகன், கணவன், அப்பா, அண்ணன். தம்பி... என்ற பார்வையில் பார்க்கும் போது சம்மந்தப்பட்ட இவர்கள் சார்ந்த பெண்ணின் மனநிலையை, வேதனையை நினைக்கும்போது ... அந்த வேதனையை வார்த்தைகளால் எழுத முடியவில்லை.

மொத்தத்தில் பெருகி வரும் இம்மாதிரி சமூகத்தலைகுனிவுக்களுக்கு யார்ப் பொறுப்பு?